search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
    X
    ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

    கொடைரோடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

    திண்டுக்கல் அருகே ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் அருகே உள்ளது கொடைரோடு ரெயில் நிலையம். பல்வேறு இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ரெயில் நிலையம் வந்து கார் மற்றும் பஸ்களில் செல்வது வழக்கம்.

    நேற்று நள்ளிரவு இங்குள்ள 3-வது பிளாட்பார்மில் 4 பேர் உடல் சிதறி பிணமாக கிடப்பதாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே இதுபற்றி அவர்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு விவரம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ரெயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்திரகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    சம்பவ இடத்தில் 4 பேர் உடல்கள் ரெயிலில் அடிபட்ட நிலையில் சிதைந்து கிடந்தன. 4 பேரும் ரெயில் முன் பாய்ந்து உயிரைவிட்டது தெரியவந்தது. நள்ளிரவு மதுரையில் இருந்து சென்னை சென்ற ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

    சம்பவ இடத்தில் அவர்களது உடமைகள் சிதறி கிடந்தன. அதில் ஆதார் அடையாள அட்டையும், சில விசிட்டிங் கார்டுகளும் கிடந்தன. ஆதார் அட்டையை வைத்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் திருச்சி உறையூர் காவிரிநகர் குறுக்குத்தெருவை சேர்ந்த உத்திராபதி (வயது50), அவரது மனைவி சங்கீதா (43), மகள் அபிநயஸ்ரீ (15), மகன் ஆகாஷ் (12) என்பது தெரியவந்தது.

    உத்திராபதி வெங்கடேஸ்வரா ஏஜென்சி என்ற பெயரில் மருந்து உபகரங்கள், பொருட்கள் மொத்த விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். அபிநயஸ்ரீ அப்பகுதி பள்ளியில் 10-ம் வகுப்பும், ஆகாஷ் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி 4 பேரும் கொடைக்கானல் செல்வதற்காக ரெயிலில் கொடைரோடு வந்தனர்.

    கையில் ஒரே ஒரு பை மட்டும் வைத்திருந்தனர். மாற்று உடைகள் எதுவும் கொண்டுசெல்லவில்லை. ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்சில் கொடைக்கானல் சென்ற அவர்கள் நள்ளிரவு கொடைரோடு திரும்பினர். அதன்பிறகு 4 பேரும் தற்கொலை செய்யும் முடிவுடன் 3-வது பிளாட்பார்முக்கு சென்றனர். அங்கு ரெயில் வருவதை அறிந்து அதன் முன்பாக நின்று உயிரை மாய்த்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் கொடைரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 4 பேர் தற்கொலைக்கு காரணம் என்ன? தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்தார்களா? கடன் தொல்லையால் தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×