search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது இருக்கும் வானிலை நிலவரப்படி இன்று முதல் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த இரண்டு மூன்று தினங்களுக்கு தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை இடைவெளி விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாகவும் வலுப்பெற்று, சோமாலியா நோக்கி செல்ல உள்ளது. அது தூரத்தில் இருந்தாலும் அதை நோக்கி கிழக்கு திசை காற்று செல்லும்போது, வலுவடையும். அந்த காற்றின் மூலம் மழை கிடைக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரும்பாலான மாவட்டங்களில் அதாவது 17 மாவட்டங்களில் கனமழை பதிவாகி உள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 செமீ மழையும், குன்னூரில் 13 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

    தற்போது தென்மேற்கு வங்க கடலில் பகுதியில், இலங்கை மற்றும் தென் தமிழக கடலோரத்தை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. 

    அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.

    வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்

    அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    மன்னார் வளைகுடா, குமரி கடல், மாலத்தீவு, லட்சத்தீவுகள், தென்மேற்கு வங்க கடல், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரை தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 40 செமீ மழை பதிவாகி உள்ளது. இந்த கால கட்டத்தில் இயல்பு மழை அளவு 36 செமீ ஆகும். எனவே, இயல்பை விட 11 சதவீதம் மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×