search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பைக் மீது கார் மோதல் - மனைவி கண் முன் கணவன் துடிதுடித்து பலி

    போடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 32). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சுதா (26). இவர்களுக்கு தாரணிகா (6), பிரணிகா (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    சுதா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று மாலை சதீஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் கடை வீதிக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். சில்லமரத்துப்பட்டி அருகே எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியதில் அவர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சதீஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சுதா மற்றும் 2 குழந்தைகள் போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சுதாவின் கருகலைந்ததோடு அவரது உடல் நிலையும் கவலைக்கிடமானது.

    இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவு நேரங்களில் பல இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்படுவதால் இது போன்ற விபத்துகள் நடந்து வருகிறது. முன் அறிவிப்பு இன்றி பேரிகார்டுகள் வைக்கும் போது எதிரே வரும் வாகனங்களில் ஒளி விளக்கு வெளிச்சத்தினால் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது.
    Next Story
    ×