search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி மீது கார் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.
    X
    லாரி மீது கார் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.

    ஊத்துக்குளி அருகே லாரி மீது கார் மோதல்- வாலிபர் பலி

    ஊத்துக்குளி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் போலூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 32). இவருடைய நண்பர் கலசபாக்கம் செங்கம்புத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (34). இவர்கள் 2 பேரும் ஒரு காரில் கோவை சென்றனர். பின்னர் கோவையில் இருந்து கோவை-சேலம் பைபாஸ் சாலை வழியாக திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை பழனி ஓட்டினார்.

    டிரைவர் இருக்கை அருகில் செல்வராஜ் அமர்ந்து இருந்தார். இவர்களுடைய கார், கோவை-சேலம் பைபாஸ் சாலையில் ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்களுடைய காருக்கு முன்னால் கோவையில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியின் பின் பகுதியில் , பழனி ஓட்டிச்சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனி உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த செல்வராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைக்கப்பெற்ற ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×