search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    துடியலூர் பகுதியில் 2 வீடுகளில் 38 பவுன் நகை பணம்-கார் திருட்டு

    துடியலூர் பகுதியில் 2 வீடுகளில் 38 பவுன் நகை பணம்-கார் திருட்டு சம்பவம் அந்தப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கவுண்டம்பாளையம்: 

    கோவை அப்பநாய்க்கன்பாளையம் கேப்-டவுன் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 39). இன்சூரன்சு நிறுவன அதிகாரி. சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றார். பின்னர் நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க தகவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்த மர்மநபர்கள் அதில் இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. 

    இது குறித்து பன்னீர் செல்வம் துடியலூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

    பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். கைரேகைகளை வைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை துடியலூர் போலீசார் தேடி வருகிறார்கள். 

    துடியலூர் வடமதுரையை சேர்ந்தவர் மோகன் சம்பத் (28). என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் செயின், வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். வீட்டுக்கு திரும்பிய மோகன் சம்பத் வீட்டில் நகை மற்றும் கார் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் காரை திருடி தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    துடியலூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவம் அந்தப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×