search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் தென்னரசு
    X
    தங்கம் தென்னரசு

    புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்து- நடிகர் சூர்யாவுக்கு தி.மு.க. ஆதரவு

    தேசிய கல்விக்கொள்கை வரைவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்துகள் சரியானவை என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தேசியக் கல்விக்கொள்கை குறித்து ஆராய்வதற்காக தி.மு.க அமைத்துள்ள ஆய்வுக் குழுவின் தலைவரான சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தேசிய கல்விக்கொள்கை வரைவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்துகள் சரியானவை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர் பேசி இருக்கிறார்.

    நடிகர் சூர்யா


    சொல்லப்போனால், மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளார் சூர்யா. அவர் சொன்ன கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்றால், உரிய முறையில் அதற்கான விளக்கத்தை அளிக்கலாம்.

    மாறாக, அவர் மீது தனி மனிதத் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. தவிர, அந்த வரைவுமீது எல்லோரின் கருத்துகளையும் கேட்பதற்காகத்தான், பொதுத்தளத்தில் அந்த அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஒரு கல்விக் கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளோம். அந்தக் கட்டமைப்பை, முழுமையாகச் சிதைக்கக்கூடியதாக இந்த கல்விக் கொள்கை இருக்கிறது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டு போனார்கள். இப்போது, மத்திய அரசின் பட்டியலுக்கே கொண்டு செல்லக்கூடிய ஆபத்து வந்துள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சமச்சீர் கல்வி, செயல் வழிக் கற்றல் உட்பட பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தோம்.

    ஆனால், இந்த ஆட்சியில் ‘பள்ளிகள் இணைப்பு’ என்கிற பெயரில் பள்ளிக் கூடங்களை மூடுகிறார்கள். கிராமப்புறப் பள்ளிகளை மூடினால், அது சமூகத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் பேட்டியில் கூறி இருக்கிறார்.
    Next Story
    ×