search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவீந்திரநாத்குமார்
    X
    ரவீந்திரநாத்குமார்

    4 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக்க வேண்டும் - ஓ.ப.ரவீந்திரநாத்குமார்

    தமிழ்நாட்டில் பழனி-தாராபுரம் சாலை உள்பட 4 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறியுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:-

    2018-19-ம் ஆண்டை கட்டுமான ஆண்டாக அறிவித்து, நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை பாராட்டுகிறேன். இதன் பயனாக 2014-15-ல் ஒரு நாளைக்கு 12 கிலோ மீட்டர் சாலை போடும் பணி 2018-19 ல் 30 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி அரசு இந்தியாவின் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிவித்து வருகிறது.

    மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சாதனை புரிந்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலைத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க தமிழக அரசு நிச்சயமாக ஆதரவளிக்கும் என்று உறுதியளிக்கிறேன். மாநில சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய சாலை நிதியில் இருந்து 10 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தை பாராட்டுகிறேன்.

    586.70 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மற்றும் பாலங்களை 2019-20ம் ஆண்டில் அமைப்பதற்காக 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முன்மொழிவு ஒன்றை தமிழக அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறது. ஆகவே கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை பழனி- தாராபுரம் சாலை, ஆற்காடு- திண்டிவனம் சாலை, வேலூர் - திருவண்ணாமலை சாலை ஆகிய 4 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக விரிவுபடுத்தும் அந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்

    என்னுடைய தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேனி, போடி, உசிலம்பட்டி, செக்கூரணி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை 49-ல் உள்ள நான்கு இடங்களிலும் லெவல் கிராசிங் அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×