search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கூடாது - அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

    பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
    சென்னை:

    பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

    இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள், உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, தமிழக  பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மதிமுக சார்பில் மல்லை சத்யா உள்பட 21 கட்சி தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:
     
    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. 
    அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்தினால் தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் மருத்துவபடிப்பு இடங்கள் கிடைக்கும். 3825 இடங்களில் 383 இடங்கங்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வழங்கினாலும் நமக்கு 586 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    துணை முதல்வரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    தமிழகத்தில் பல ஆண்டுகளாக 69  சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதை பாதுகாக்க முன்னாள் முதல்வர்களான காமராஜர்,அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நடவடிக்கை எடுத்தார்கள். இதில் யாரும் சமரசம் செய்ததில்லை. 

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கும், சமூக நீதிக்கும் ஏதிரானது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்கனவே ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கட்சிகளின் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
    Next Story
    ×