search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளித்தலை அருகே அரசு பஸ் மோதி தாய்-மகன் பலி
    X

    குளித்தலை அருகே அரசு பஸ் மோதி தாய்-மகன் பலி

    குளித்தலை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு விபத்தில் மூதாட்டி இறந்து போனார்.
    குளித்தலை:

    திருச்சி அருகே உள்ள குணசீலத்தை சேர்ந்தவர் வீரகுமார். இவரது மனைவி பிரேமா. இவர்களது மகன் பிரேம்நாத் (வயது 20). திருவானைக்காவலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று பிரேம்நாத்தும், அவரது தாய் பிரேமாவும் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். 

    பிரேம்நாத் மோட்டார்சைக்கிளை ஓட்ட, பிரேமா பின்னால் அமர்ந்திருந்தார். குளித்தலை மலையப்ப நகர் மருதூர் பிரிவு சாலையில் செல்லும் போது, அந்த வழியாக கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2பேரும் தூக்கிவீசப்பட்டனர். பலத்த காயமடைந்த பிரேம்நாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பிரேமா பலத்த காயமடைந்து  உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் கோவை பீளமேடு விலாங்குறிச்சி, சிவசக்திநகரை சேர்ந்த ரவி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார். 

    இதேப்போல் திருச்சி திருப்பராய்த்துறையை சேர்ந்தவர் மணி (80).இவரது மனைவி செல்லம்மாள் (72). இவர்கள் திருச்சி நெ.1டோல்கேட் கூத்தூரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றனர். பின்னர் நேற்றிரவு ஊருக்கு புறப்பட்டனர். பஸ் ஏறுவதற்காக சென்னை- திருச்சி 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக 2பேர் மீதும் மோதியது. இதில் செல்லம்மாள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மணியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×