search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி- காதலன் உயிர் ஊசல்
    X

    கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி- காதலன் உயிர் ஊசல்

    கன்னியாகுமரியில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் காதலன் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    கன்னியாகுமரி:

    மதுரை ஆரப்பாளையம், சுடுதண்ணி வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் ஆண்டி. ஆண்டியின் மகன் வெங்கடேசன் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்தார். இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிய வந்தது.

    அவர்கள் காதல் ஜோடியை கண்டித்தனர். மேலும் அவர்கள் இருவரும் சந்திக்கவும் தடை விதித்தனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி மனம் உடைந்தனர். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தனர். 2 நாட்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வந்தனர்.

    கன்னியாகுமரியில் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்தனர். அதன்பின்பு நேற்று மாலை கடற்கரைக்கு சென்று அமர்ந்தனர்.

    கடற்கரையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்த காதல் ஜோடி பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி போலீஸ் நிலையம் சென்றனர். அங்கிருந்த போலீசாரிடம் நாங்கள் காதல் ஜோடி என்றும், பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டதால் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் அங்கேயே மயங்கி விழுந்தனர். உடனே போலீசார் அவர்கள் இருவரையும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காதலன் வெங்கடேசன் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

    இது பற்றி போலீசார் காதல் ஜோடியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×