search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி தற்கொலை முயற்சி"

    • விஜய்-கலையரசி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைத்து கடந்த 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.
    • திருமணத்திற்கு விஜய்யின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). பட்டதாரியான இவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பரமேஸ்வரன்-மகேஸ்வரி தம்பதியின் மகள் கலையரசி(19) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    பெண்ணின் பெற்றோர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர். கலையரசியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விஜய் மீதான காதலை கைவிடுமாறு எச்சரித்தனர். ஆனால் விஜய்-கலையரசி காதல் நீடித்தது.

    இந்த நிலையில் கலையரசிக்கு உசிலம்பட்டியில் வைத்து உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக கலையரசி வலுக்கட்டாயமாக உசிலம்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் இந்த திருமணத்தில் விருப்பமில்லாத கலையரசி அங்கிருந்து தப்பி காதலன் விஜயிடம் தஞ்சமடைந்தார்.

    இதையடுத்து விஜய்-கலையரசி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு விஜய்யின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    திருமணம் முடிந்த பின் ராஜபாளையத்தில் காதல் ஜோடி தங்கினர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் பரமேஸ்வரன்-மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் அடிக்கடி தொலைபேசி மூலம் கலையரசிக்கு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சல் அடைந்தார்.

    நேற்று மாலை கலையரசியிடம் செல்போனில் பேசிய அவரது தந்தை பரமேஸ்வரன் இன்று இரவு விஜய்யை கொன்று விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கலையரசி இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என கணவர் விஜய்யிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர்களை உறவினர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருமணமான 15 நாளில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×