search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது வரி உயர்த்துவது ஏன்? - துரைமுருகன் கண்டனம்
    X

    மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது வரி உயர்த்துவது ஏன்? - துரைமுருகன் கண்டனம்

    பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.40.39 காசு, டீசல் ரூ.30.26 காசு என்று வரியை உயர்த்தி கொண்டே இருக்கும் மத்திய, மாநில அரசுக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #PetrolDieselPriceHike
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால், பெட்ரோல்-டீசல் விலையை ஏற்றுவதே தங்களின் நித்தியகடன் என்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது.

    மாநில அரசுகளும், மத்திய அரசுக்கு இணையாக தங்களால் முடிந்த அளவிற்கு விலையை உயர்த்துகிறது.

    பெட்ரோல் - டீசல் விலையை இப்படி நாள்தோறும் உயர்த்தும் நிலைக்கு என்ன காரணம்? கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டது, எனவே நாங்கள் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துகிறோம் என்கிறது மத்திய அரசு.

    இந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் கதை என்ன? கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 2014-ம் ஆண்டில் 145 டாலர். அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.60. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.45.

    இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலர்தான். ஆனால் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.75.

    கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 145 டாலராக இருக்கும்போது பெட்ரோல்- டீசலின் விலை குறைவாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலராக இருக்கும்போது பெட்ரோல்-டீசலின் விலை உயர்வாக இருக்கிறது. இது என்ன பொருளாதாரம்?

    கச்சா எண்ணெய் விலை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அது ஒரு சர்வதேச பிரச்சினையாகவே இருக்கட்டும். பெட்ரோல்-டீசல் விலை அளவில்லாமல் உயர்ந்துக் கொண்டே போனால் பாதிக்கப்படுவது மக்கள் அல்லவா?

    அந்த மக்களை இப்படிப்பட்ட இன்னல்களிலிருந்து காப்பாற்றுவது மத்திய-மாநில அரசுகளின் கடமையல்லவா?

    இன்றைக்கு இருக்கும் மத்திய-மாநில அரசுகள் இதை செய்திருக்கிறார்களா? ஆனால், 2014-ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலராக இருந்த போது, வாகனங்களை உபயோகிப்போர் நலன் கருதி, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயினை மானியமாக வழங்கியது.

    அ.தி.மு.க. அரசு பெட்ரோல் மீது விதித்திருந்த 30 சதவிகித வரியை, தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும், 1.6.2006ல் 27 சதவிகிதமாக குறைத்தார்.

    அ.தி.மு.க. அரசு டீசல் மீது விதித்திருந்த 25 சதவிகித வரியை, தலைவர் கலைஞர் 1.6.2008ல் 21.43 சதவிகிதமாக குறைத்தார். இன்று 2018-ல் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் தான்.


    ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை 126 விழுக்காடும், டீசல் மீதான உற்பத்தி வரியை 330 விழுக்காடும் உயர்த்தியுள்ளது. ஆக மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், டீசலுக்கு ரூ.15.53-ம் வரி விதித்துள்ளது.

    இந்த வரி விதிப்பின் வாயிலாக கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு ரூ.16.50 லட்சம் கோடி வருவாயாக பெற்றுள்ளது.

    பண மதிப்பிழப்பாலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பாலும், இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவினை சந்தித்திருப்பதை அடுத்து வரி வருவாய் குறைந்திருக்கிறது.

    இதனை சரிகட்ட, எரி பொருள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பது அறமற்ற செயலாகும்.

    மத்திய அரசின் செயல் இதுவென்றால், நமது மாநில அரசின் நிலை என்ன? 6.5.2017 அன்று பெட்ரோல் மீதான வரியை 27 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. டீசல் மீதான வரியை 21.43 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

    இதனால் இன்று எடப்பாடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.20.91-ம், டீசலுக்கு ரூ.19.48-ம் வரியாக விதித்துள்ளது. மத்திய-மாநில அரசுகள் கூட்டாக, பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ.40.39-ம் டீசல் மீது ரூ.30.26-ம் வரியாக விதித்திருக்கிறது. இந்தியா ஒரே நாடு, ஆகையால் ஒரே வரி என்கிறது மத்திய அரசு.

    மத்திய அரசு மிக அதிகமாக ஜி.எஸ்.டி. வரியினை 28 விழுக்காடு என்பதை எரிபொருள் மீது விதித்திருந்தால் கூட ஒரு லிட்டர் பெட்ரோல்-டீசல் ரூ.50க்கு கிடைத்திருக்கும்.

    நமக்கே பெட்ரோல்-டீசல் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கும்போது, ரிலையன்ஸ் கம்பெனி உற்பத்தி செய்யும் எரிபொருளை, ஒரு லிட்டர் ரூ.35 வீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எந்த வகையான அரசு தர்மம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PetrolDieselPriceHike
    Next Story
    ×