search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்
    X

    மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்

    திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இரு பேராசிரியைகள் மாணவியை மிரட்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அக்கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிக்கு கல்லூரியின் பேராசிரியர் தங்க பாண்டியன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

    இதற்காக மாணவியின் விடுதி அறைக்கே சென்று அத்துமீறல்களை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பேராசிரியரின் இத்தகைய தரம் தாழ்ந்த செயலுக்கு விடுதிக் காப்பாளர்களான பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பேராசிரியர் தங்க பாண்டியனின் அத்துமீறல்கள் குறித்து புகார் செய்த மாணவியை தொலைத்துக்கட்டி விடுவோம்; பட்டப் படிப்பை முடிக்க முடியாது என்று பேராசிரியைகள் மிரட்டும் ஒலிப்பதிவும் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கல்லூரிகளில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று அஞ்சி நடுங்கும் வகையில் தான் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் நடந்துள்ள நிகழ்வுகள் அமைந்துள்ளன. மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்குள் பேராசிரியர்கள் உள்ளிட்ட எந்த ஆண்களும் சாதாரணமான நேரங்களில் செல்லக்கூடாது என்பது தான் விதியாகும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளை பாதுகாக்க வேண்டியது காப்பாளர்களின் கடமை ஆகும். ஆனால், திருவண்ணாமலைக் கல்லூரியில் அனைத்தும் தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன.

    கல்லூரி விடுதியில் மாணவி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறி தனிமைப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தங்கியிருந்த அறையின் தாழ்ப்பாள்கள் அகற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவியை உளவியல் ரீதியாகக் கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாணவிக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்ற நோக்கத்துடனும் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

    மாணவி திட்டமிட்டு, பிற மாணவிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தாழ்ப்பாள் கூட இல்லாத தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதைப் பார்க்கும் போது, பேராசிரியர் விடுதிக்கே வந்து பாலியல் தொல்லைக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. இது குறித்த மாவட்ட நீதிபதியின் விசாரணையில் இக்குற்றச் சாற்றுகள் உண்மை என்பது உறுதியாகியுள்ளது.



    பள்ளிகளையும், கல்லூரிகளையும் கல்விக் கோயில்கள் என்று தான் நான் அழைத்து வருகிறேன். அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கடவுளர்களாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தார்கள். பேராசிரியர்களும், பேராசிரியைகளும் மாணவ, மாணவியருக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து அன்பும், கண்டிப்பும் காட்டி மாணவர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தனர்.

    ஆனால், இப்போது நிர்மலா தேவி, புனிதா, மைதிலி போன்ற பேராசிரியைகள், தங்க பாண்டியன் போன்ற பேராசிரியர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளால் ஆசிரியர் சமுதாயம் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து வருகிறது. அப்பழுக்கற்ற உன்னதமான ஆசிரியர்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

    தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் எண்ணிக்கை இப்போது தான் அதிகரித்து வருகிறது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த நமது மக்கள் இப்போது தான் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இத்தகைய சூழலில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் இருப்பதாக அறிந்தால், பெரும்பான்மையான பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்குவார்கள். அது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமையும். எனவே, பேராசிரியர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில மனித விலங்குகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கல்வித்துறையில் கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வருவதன் மூலம் கல்விக்கூடங்களை பாதுகாப்பு நிறைந்த கல்விக் கோயில்களாக மாற்ற வேண்டும். அப்போது தான் மகளிர் சமுதாயம் கல்வி கற்று முன்னேற்றப் பாதையில் பயணிப்பார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான சூழலில் பெண்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege #Ramadoss
    Next Story
    ×