search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "professors"

    • விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    • தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.

    ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

    தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று அவர் கூறினார்.

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை முறையாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு அமர்ந்தனர். தமிழக அரசிடம் இருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள மானிய நிலுவைத் தொகையை விரைவாக கொடுக்கக்கோரி இப்போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

    போராட்டம் குறித்து சென்னை பல்கலைக்கழக அலுவலக பேரவை தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை முறையாக வழங்க வேண்டும்.

    தற்காலிக பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.

    • தேர்தல் அறிக்கையில் கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
    • அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கல்லூரி வளாகம் முன்பு கவுரவ பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கவுரவ பேராசிரியர்களாக குறைந்த சம்பளத்தில் பணிபுரிகிறோம்.

    தேர்தல் அறிக்கையில் கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மேலும், அடுத்த கட்டமாக வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறி அரசு கலலூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன்பு, கல்லூரியில் பணிபுரியும் விலங்கியல் துறை தலைவர் சுந்தர்ராசு, செயலாளர் பிச்சுமணி, பொருளாளர் மருதநாயகம், மூத்த பேராசிரியர்கள் கணிதத்துறை செந்தில்குமார், ஆங்கிலத்துறை முருகராஜ் பாண்டியன், வேதியல் துறை சந்திர மோகன்,

    இயற்பியல் துறை தலைவர் ரேவதி, வரலாற்று துறை தலைவர் ராஜா ரவீந்திரன், வரலாற்று துறை பேராசிரியர் பரமசிவம், நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், பொருளாதார துறை பேராசிரியர் ஹேமா, மற்றும் பேராசிரியர்கள் பேராசிரியைகள் கலந்து கொண்டு வாயில் முழக்க போராட்டத்தை நடத்தினர்.

    போராட்டத்திற்கு இணை பேராசிரியர் பேராசிரியர் பணி மேம்பாடு தொடர்பான அரசாணை எண் 5 முழுவதுமாக அமல் படுத்திட வேண்டும். எம். ஃபில்.,பி. எச்.டி ஊக்க ஊதிய உயர்வுணை உடனடியாக வழங்கிட வேண்டும். புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் எனவும்,

    அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையை கேட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • அலுவலக பணியாளர்கள், நடத்துனர், ஓட்டுநர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • 1000-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம், இதயா மகளிர் கல்லூரி, பெண்கள் பாசறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை, கும்பகோணம் சார்பாக இதயா மகளிர் கல்லூரியில் உள்ள மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், நடத்துனர், ஓட்டுநர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்வை கல்லூரி யின் முதல்வர் அருட்சகோதரி முனைவர். யூஜின் அமலா தொடங்கி வைத்தார். கணினிஅறிவியல் துறை தலைவர் மற்றும் பெண்கள் பாசறை ஒருங்கிணை ப்பாளர் முனைவர்.சி.பிரமிளா ரோசி, கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் கே. புவனேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பயிற்சியில் உள் மற்றும் வெளிக்கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர்.
    • கலந்து கொண்ட இடைநிலை அறிவியல் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனித்து குறிப்பு எடுத்துக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட அறிவியல் ஆசிரிய ர்களுக்கான முதற்கட்ட இரண்டு நாள் பணியிடைப் பயிற்சியானது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதி உதவியுடன் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். ஜோதிமணியம்மாள் தலைமையேற்று சிறப்பித்தார். செயலர் எஸ்.செந்தில்குமார், இணை செயலர் எஸ். சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை தலைவர் மற்றும் பணியிடை பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயசுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு பயிற்சியை தொடக்கி வைத்து கலந்து கொண்ட ஆசிரியர்களை ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார்.

    இதில் நாகை மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் உள் மற்றும் வெளிக்கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர். இதனை கலந்து கொண்ட இடைநிலை அறிவியல் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனித்து குறிப்பு எடுத்தனர். இறுதியாக இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் காதர்நிவாஸ் நன்றியுரை வழங்கினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் 153 பேராசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் உளதர உத்தரவாத அமைப்பின் சார்பில் "நேரம் மற்றும் அழுத்தத்தை கையாளும் முறைகள்" குறித்த ஆசிரியர் மேம்பாடு நிகழ்வு நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மின்னணுவியல் துறையின் இணைப் பேராசிரியர் கவுதமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், நேரத்தையும் அழுத்தத்தையும் சரிவர கையாளும் முறைகள் குறித்து விளக்கினார். வேலையின் முக்கியத்துவம், அவசரம் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். அவசரகதியில் வேலை செய்யாமல் நிதானமாக பணி புரிந்தால் சிறப்பாக அமையும்.

    குறிக்கோள்களை அடைவதற்கு நேரமேலாண்மை முக்கியம் ஆகும். அன்றன்று செய்ய வேண்டியவற்றை அன்றே செய்து முடிக்க வேண்டும்.

    நமது உடம்பில் அட்ரினலின் வேதிப்பொருள் சுரப்பதால் அழுத்தம் உண்டாகிறது. அழுத்தம் உண்டாவதால் உடல், மனம். குணம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். மனநலத்தை சீராக வைத்திருக்க தினமும் சிறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தியானம் மற்றும் நல்லுறக்கம் மிகவும் முக்கியம் என்றார்.

    உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியா வரவேற்றார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் 153 பேராசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்களில் 241 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அரசு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக உயர் கல்விதுறைக்கு தொடர்ச்சியாக புகார் சென்றது. புகாரின் அடிப்படையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களின் பணி பதிவேடு, சான்றிதழ் உண்மை தன்மை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.

    மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியராக பணியாற்றும் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனைவர் பட்டம் முடித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்கள் மீது ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் மூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு ஊட்டி அரசு கல்லூரியில் 3 பேர் வடமாநில பல்கலைக்கழக போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மீண்டும் 2 பேர் சிக்கி உள்ளனர். #OotyGovtArtsCollege
    உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் 2 பேரும் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.

    மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். சர்ச்சை வெடித்ததால் பேராசிரியர் தங்கபாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தேர்வுகள் முடிந்து இந்த வாரம் திங்கட்கிழமை வகுப்புகள் தொடங்கியது.

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரிக்கு சென்றார். வகுப்பறைக்குள் அந்த மாணவி சென்றவுடன், சக மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு பேராசிரியைகள் கல்லூரியை விட்டு வெளியே சென்றனர். இதையடுத்து, மாணவியை கல்லூரி நிர்வாகம் வலுகட்டாயமாக வெளியேற்றியது.

    தொடர்ந்து, இந்த வாரம் முழுவதும் மாணவியை வகுப்பறைக்குள் விடாமல் பேராசிரியர்கள் தடுத்தனர். மேலும், தங்களால் அந்த மாணவிக்கு பாடம் நடத்த முடியாது, வேறு கல்லூரிக்கு அவரை மாற்றி விடுங்கள் என்று பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கூறினர். இதற்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

    பாலியல் புகார் குறித்து விசாரணை நடைபெறும் நேரத்தில் நான் வேறு கல்லூரிக்கு எப்படி செல்ல முடியும். விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாமல் போகும். நான் தொடர்ந்து இதே கல்லூரியில் தான் படிப்பேன் என்று மாணவி திட்டவட்டமாக கூறினார். மாணவிக்கு ஆதரவாக வாழவச்சனூர் கிராம மக்களும் பேராசிரியர்களுக்கு எதிராக போர்கொடி தூக்கினர்.

    குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர், பேராசிரியைகளை தப்பிக்க வைக்க மாணவியை கல்லூரியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையே, கல்லூரி வளாகத்திற்குள் மாணவி வந்து செல்லும் போது அவரது நடவடிக்கையை ஒரு சில பேராசிரியர்கள் செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

    இதுதொடர்பாகவும் போலீசாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவி திடீரென திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு நடத்திய விசாரணை அடிப்படையில் மாணவியை திருச்சி கல்லூரிக்கு மாற்றியுள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கல்லூரியில் இருந்து உடனடியாக வெளியேறி திருச்சி கல்லூரியில் சேருமாறு மாணவிக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பேராசிரியை மைதிலியும், கோவை வேளாண் கல்லூரிக்கு மற்றொரு பேராசிரியையான புனிதாவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், நான் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் இருந்து வேறு எந்த கல்லூரிக்கு மாற்றினாலும் செல்லமாட்டேன். பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தப்பிக்க வைப்பதற்காகவே என்னை வேறு கல்லூரிக்கு மாற்றி உள்ளனர்.

    தவறு இழைக்காத நான் ஏன் வேறு கல்லூரிக்கு செல்ல வேண்டும். தவறு செய்த பேராசிரியர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன் என்று மாணவி கூறினார். #ChennaiStudentharassment #AgriCollege

    அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்தது. #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றும் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்தநிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் இந்த வார இறுதிக்குள் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.  #AnnaUniversity #RevaluationScam
     
    அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் 600 கேள்விகள் தயாரித்து வைத்துள்ளனர். #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் முறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் வரை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் போட்டும், தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்தும் முறைகேடு நடந்துள்ளது.

    இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி உமா, பேராசிரியர்கள் ஆர்.சிவகுமார், பி.விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.


    ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது. பேராசிரியர்கள் சிவகுமார், விஜயகுமார் இருவருமே திண்டிவனம் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றினர்.

    மதிப்பெண் மறுகூட்டலுக்கான மண்டல அதிகாரியாக சிவகுமாரும், ஒருங்கிணைப்பாளராக விஜயகுமாரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள்தான் மதிப்பெண் மறுகூட்டலுக்கான தேர்வர்களை நியமித்துள்ளனர். தங்களிடம் மறுகூட்டலுக்கு வரும் விண்ணப்பங்களை தேர்வர்களுக்கு அனுப்பி அதிக மதிப்பெண் போடச் செய்துள்ளனர்.

    தற்போது இதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எந்த வகையில் எப்படியெல்லாம் முறைகேடு நடந்தது என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் 600 கேள்விகள் தயாரித்து வைத்துள்ளனர். இந்த கேள்விகளை வைத்து நேற்று முன்தினம் முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக 2 பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அடுத்தக்கட்டமாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்த உமாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    2 பேராசிரியர்களும் விசாரணை அதிகாரிகளிடம் அளிக்கும் தகவலை வைத்து அதிகாரி உமாவிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களது பதில்களை ஒப்பிட்டு அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×