search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சித்துடன் சந்திப்பு - தமிழ்நாட்டில் தலித் ஓட்டுகளை குறி வைக்கும் ராகுல் காந்தி
    X

    ரஞ்சித்துடன் சந்திப்பு - தமிழ்நாட்டில் தலித் ஓட்டுகளை குறி வைக்கும் ராகுல் காந்தி

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பா.ரஞ்சித் சந்திப்பின் போது தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Congrees #Ranjith #RahulGandhi
    சென்னை:

    இயக்குனர் ரஞ்சித் ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

    தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. அதன் பிறகு ரஜினிகாந்த்தின் ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கினார்.

    மெட்ராஸ் படத்தில் வடசென்னையில் சிறு சிறு தாதாக்களின் அட்டகாசத்துடன் தலித் மக்களின் வாழ்க்கையையும் எடுத்துக் காட்டினார். இதன் மூலம் இயக்குனர் ரஞ்சித் தலித் போராளியாக உருவெடுத்தார். மெட்ராஸ் படத்தின் கதை திருட்டு பிரச்சினையில் கூட ரஞ்சித்தை தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் காப்பாற்றினர்.

    தொடர்ந்து தலித் அரசியலை பேசிவரும் ரஞ்சித் சமீபகாலமாக தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்.

    ஒரு பட விழாவில் அவருக்கும் இயக்குனர் அமீருக்கும் மேடையிலேயே கருத்து மோதல் ஏற்பட்டு பரபரப்பானது.

    நீட் தேர்வால் அனிதா மரணம் முதல் சமீபத்திய சாதிச்சுவர் விவகாரம் வரை தலித்களுக்காக குரல் கொடுத்துவருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ரஞ்சித் 2 நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ரஞ்சித் சந்திப்பு பற்றிய குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கிறது.

    யார் மூலமாக ராகுலை ரஞ்சித் சந்தித்தார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் விவாதமே ஏற்பட்டுள்ளது. அவர்கள் டெல்லியில் இதுபற்றி விசாரித்தபோது குஜராத் சட்டபேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிதான் ராகுல் காந்தியை சந்திக்க ரஞ்சித்துக்கு நேரம் வாங்கிக் கொடுத்தார் என்று தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசியபோது ’ஜிக்னேஷ் மேவானி கடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தார். காங்கிரஸ் கூட்டணியில் அவரும் எம்.எல்.ஏ. ஆனார்.

    அவர் தேர்தலில் ஜெயித்த போதே அவருக்கு ரஞ்சித் வாழ்த்து தெரிவித்தார். பிறகு சென்னைக்கு ஜிக்னேஷ் மேவானியை அழைத்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் அதிகமானது.



    ஜிக்னேஷை சந்தித்த போதே தலித் வாக்குகள் பற்றியும் தமிழ்நாட்டில் தலித் வாக்கு வங்கி எப்படி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வர பயன்பட்டது என்பது பற்றியும் ரஞ்சித் அவரிடம் விவாதித்து இருக்கிறார்.

    இந்த நிலையில்தான் ஜிக்னேஷ் மேவானி மூலமாக ராகுல் காந்தியைச் சந்தித்து தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்தது ஏன் என்பது பற்றி விளக்கி இருக்கிறார் ரஞ்சித்.

    ஏற்கனவே திருமாவளவன் எம்.பி.யாக இருந்த போது ராகுல் காந்தி அவரிடம் தமிழகத்தில் தலித் ஓட்டு வங்கி காங்கிரசை விட்டுப் போனது ஏன் என்று சுமார் இரண்டு மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதுபோல திருமாவளவனோடு பல முறை ராகுல்காந்தி ஆலோசித்து இருக்கிறார்.

    ஜிக்னேஷ் மேவானியோடும் இதுபற்றி ராகுல் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தமிழகத்தில் ரஞ்சித் என்பவர் இருக்கிறார். அவரிடம் இதுபற்றிப் பேசுங்கள் என்று யோசனை சொல்லியிருக்கிறார் மேவானி. இதையடுத்து ராகுல் காந்தி ‘அவரை வரச் சொல்லுங்கள்’ என்று மேவானியிடம் சொல்ல, அதன் பிறகே ரஞ்சித்திடம் தகவல் தெரிவித்து அவரை ராகுல் காந்தியிடம் அழைத்துச் சென்றுள்ளார் மேவானி’ என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். #Congrees #Ranjith #RahulGandhi
    Next Story
    ×