search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா கூறினார்- அ.தி.மு.க. பத்திரிகையின் ஆசிரியர் வாக்குமூலம்
    X

    சசிகலா துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா கூறினார்- அ.தி.மு.க. பத்திரிகையின் ஆசிரியர் வாக்குமூலம்

    சசிகலா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று அ.தி.மு.க. அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். #JayalalithaaDeath #Jayalalitha
    சென்னை:

    2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது அவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று அ.தி.மு.க. அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. பத்திரிகையாளர் சோ மகன் ஸ்ரீராம், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ பத்திரிகை ஆசிரியர் மருது அழகுராஜ் (முன்பு ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்தவர்) ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

    ‘பத்திரிகையாளர் சோ ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கி வந்தார். இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மறைந்த சோ மூலம் ஸ்ரீராமிற்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது’ என்ற அடிப்படையில் ஆணையம் ஸ்ரீராமிடம் விசாரணை நடத்தியது.

    அப்போது அவர், ‘சசிகலா வெளியேற்றப்பட்ட போது போயஸ் கார்டனில் என்னை அனுமதித்ததாக கூறுவது தவறானது. நான், ஜெயலலிதாவை பார்த்தது இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை எனது தந்தை சோவுடன் முக்கியமான ஆலோசனைகளை நடத்தி உள்ளார். அதை எனது தந்தை, எங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தது கிடையாது. மறுநாள் பத்திரிகையில் செய்தி வந்த பிறகு தான் எங்களுக்கு தெரியவரும்’ என்று கூறி உள்ளார்.

    அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் மருது அழகுராஜ் செய்தி ஆசிரியராக பணியாற்றியதால் அவர் அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசி இருப்பார் என்ற அடிப்படையில் அவரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அவர் ஆணையத்தில் கூறியதாக கூறப்படுவதாவது:-

    என்னை ஜெயலலிதாவிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியது சசிகலாவின் உறவினர் ராவணன்தான். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வேலை பார்த்த நான், ஜெயலலிதாவுக்கு உரை எழுதி தரும் பணியையும் மேற்கொண்டேன்.

    2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதி செய்கிறார்கள் என்று கூறி அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டு சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா என்னிடம், ‘சசிகலா உள்ளிட்டோரை நீக்கி உள்ளேன். இவர்கள் எல்லாம் ராஜ துரோகம் புரிந்தவர்கள். ராவணன் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. இதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால் நீங்களும் வெளியே சென்று விடலாம்’ என்று கூறினார். அப்போது நான், ‘உங்களுடன் இருக்கவே பிரியப்படுகிறேன்’ என்றேன்.

    சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, ஜெயலலிதா தனது நம்பிக்கைக்கு பாத்திரமான பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியன் போயஸ் கார்டன் பணிகளை மேற்கொள்வார் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுமாறும் எனக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் 3 மாதங்கள் கழித்து சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா இறக்கும்வரை சேர்த்துக்கொள்ளவில்லை.

    ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிந்தும் போயஸ் கார்டனில் ஆம்புலன்சை தயார் நிலையில் வைத்திருக்க எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

    போயஸ்கார்டனில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்காதது யாருடைய குற்றம்?. ஜெயலலிதாவை சுற்றி இருந்தவர்களின் குற்றம்தானே. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

    ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் மருத்துவமனையில் கூடியிருந்த சிலர் பொய் சொன்னார்கள். இதை ஏன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுக்கவில்லை. அப்படியென்றால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் உடந்தை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.



    இவ்வாறு அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மருது அழகுராஜூவிடம் ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர். #JayalalithaaDeath #Jayalalitha 
    Next Story
    ×