search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளித்த துப்புரவு தொழிலாளி பலி
    X

    ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளித்த துப்புரவு தொழிலாளி பலி

    ராணிப்பேட்டை அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட விரக்தியில் துப்புரவு தொழிலாளி நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக ஆனந்தன் (வயது 55) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ராணிப்பேட்டை காரையில் உள்ள துப்புரவு தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்தார். பின்னர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இவருக்கு வீடு ஒதுக்கப்பட்டது.

    ஆனந்தன் சில மாதங்களாக சரிவர பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலர்கள் அவரை அழைத்து அறிவுரை கூறி அம்மா உணவகத்துக்கு பணியிட மாற்றம் செய்து அங்கு பணிக்கு செல்லும்படி உத்தரவிட்டுள்ளனர்.

    ஆனால் அங்கும் அவர் பணிக்கு சரிவர செல்லவில்லை.இதனையடுத்து அவரை நகராட்சி நீரேற்று நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்தனர். அதன்பிறகும் அவர் சரிவர பணிக்கு செல்லாததால் அது குறித்து அலுவலர்கள் அவரிடம் கேட்டனர்.

    அப்போது ஆனந்தனுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அலுவலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆனந்தனை சஸ்பெண்டு செய்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் அவர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துக் கொண்டு ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். மதிய உணவு இடைவேளை நேரம் என்பதால் அங்கு யாரும் இல்லை. அந்த அலுவலகத்தை யொட்டியே எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது.

    இந்த நிலையில் ஆனந்தன் திடீரென தான் கொண்டு சென்ற பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். தீயில் கருகி அலறிய அவர் எரியும் நெருப்பின் வேதனை தாங்காமல் அங்கும் இங்கும் ஓடினார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் நேற்றிரவு இறந்தார்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் எம்.எல்.ஏ. அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×