search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்ட அரசு வக்கீல்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    கோவை மாவட்ட அரசு வக்கீல்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

    கோவை மாவட்ட அரசு வக்கீல்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் கணேசன். வக்கீலான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவையில் வக்கீலாக உள்ளேன். கோவை மாவட்ட தலைமை குற்றவியல் வக்கீல், அரசு பிளீடர் உள்ளிட்ட அரசு வக்கீல்கள் நியமனம் விதி முறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு வக்கீலாக நியமிக்கப்படுபவர்களுக்கு முதலில் சட்டம் தெரிந்து இருக்க வேண்டும். ஆளும் கட்சி அரசியல்வாதிகளை தெரிந்து இருக்கக் கூடாது.

    கடந்த முறை அரசு வக்கீல் நியமனத்தின்போது, மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். மாவட்ட நீதிபதி, கோர்ட்டு வளாகத்தில் அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்து, விருப்பம் உள்ள வக்கீல்கள் அரசு வக்கீல் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி விண்ணப்பம் செய்த வக்கீல்களின் விருப்ப மனுவை பரிசீலனை செய்து, அதில் தகுதியுள்ள நபர்களை மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட நீதிபதி பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர்.

    ஆனால், இந்த முறை தகுதியில்லாத நபர்கள் எல்லாம் அரசு வக்கீல் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிரிஜேஸ்வர் சிங் வழக்கில், அரசு வக்கீல் நியமனம் வெளிப்படையாக நடைபெறவேண்டும். அரசு வக்கீல் நியமனம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் விதிமுறைகளை உருவாக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    ஆனால், இந்த உத்தரவை மீறி, கோவை மாவட்ட தலைமை குற்றவியல் வக்கீலாக ஆறுமுகம், அரசு பிளீடராக தாமோதரன், சிறப்பு குற்றவியல் வக்கீலாக சந்திரசேகர் என்பவர் உள்பட 18 பேரை தமிழக அரசு நியமித்து கடந்த ஜூன் 9-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இவர்கள் அனைவரும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள். உள்ளூர் அமைச்சருக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் நெருக்கமானவர்கள். நம்பிக்கையானவர்கள். அதனால், இப்பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இந்த 18 பேரில் பலர் அரசு தரப்புக்காக கோர்ட்டில் ஆஜராவது கிடையாது. அதற்கு பதில் தங்களது (வக்கீல்) நண்பர்களை ஆஜராக வைக்கின்றனர். இதன்மூலம், சட்ட ஞானம் உள்ள தகுதியான நபர்களை இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

    மேலும், 10 ஆண்டு வக்கீல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களை தான் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும். ஆனால், இந்த விதி முறைகளை மீறி 6 ஆண்டு அனுபவம் உள்ளவரை இப்பதவியில் நியமித்துள்ளனர். மேலும், 61, 63, 64 ஆகிய வயதில் உள்ளவர்களையும் இப்பதவியில் நியமித்துள்ளனர். இவ்வாறு தகுதியில்லாத நபர்களை கோவை மாவட்ட அரசு வக்கீலாக தமிழக அரசு நியமித்துள்ளது. எனவே, கோவை மாவட்டத்தில் அரசு வக்கீல்களாக 18 பேரை நியமித்து கடந்த ஜூன். 9-ந்தேதி தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த அரசாணையை சட்ட விரோதமானது, தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு வக்கீல் நியமனம் தொடர்பாக வக்கீல் வசந்த குமார் என்பவர் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு வருகிற ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    அந்த வழக்குடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×