search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்
    X

    விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

    விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடைக்கு பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடைக்கு திரண்டு சென்றனர். கடையின் விற்பனையாளரை கடையை விட்டு வெளியே தள்ளி கடையின் இரும்பு கதவை இழுத்து பூட்டி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த சமயத்தில் டாஸ்மாக் கடைக்கு மதுவகைகளை இறக்குவதற்காக வந்த லாரியையும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    டாஸ்மாக் கடையை மூட விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். இதை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடந்தது.

    கடலூர்-சிதம்பரம் சாலையில் புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதற்கு பதிலாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பெரியப்பட்டு-தச்சம்பாளையம் சாலையில் விவசாயி ஒருவருடைய நிலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அந்த இடத்தில் சிறிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடையை திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.



    இது பற்றி தகவல் அறிந்ததும் பெரியபட்டு, தச்சம்பாளையம், வாண்டையாம்பள்ளம், ஆண்டாள்முள்ளிப்பள்ளம், சான்றோர்மேடு, கோபாலபுரம் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, புதிதாக கட்டப்பட்டு திறப்பதற்காக தயார் நிலையில் இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

    புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் மாணவ-மாணவிகள், கிராம மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறினர்.

    டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம் என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால்தான் கலைந்து செல்வோம். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு 6 கிராம மக்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×