என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
- தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.
இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
நெல்லை சம்பவத்தை தொடர்ந்து சென்னை அயனாவரத்தை சேர்ந்த தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியும் முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளருமான குமார் என்பவரும் நில பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்டார். சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் காரில் வைத்தே மனைவி கண் எதிரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலப்பிரச்சனை உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர்களிடம் வலியுறுத்தி கூறப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் யார்-யார்? என்பதை பட்டியல் எடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று குற்றப் பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மீதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழிக்குப்பழி வாங்கும் வகையில் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக கொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் சிறையில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் சட்டம் போன்றவற்றையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உயர் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
ரவுடிகள் இடையேயான மோதலில் நடக்கும் கொலை சம்பவங்கள் பற்றி விரிவாக விசாரணை நடத்தி அதன் முழு பின்னணியையும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன், சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர் முழுமையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைவாகவே நடந்து உள்ளன. 2024-ல் 1,540 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
- வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
- காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னாஜிராவ் பகுதியை சேர்ந்தவர் ராஜீக் அகமது. இவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார்.
இதுதவிர ராஜீக் அகமது அந்த பகுதியில் சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்து கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை, இவரது வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
அவர்கள் நேராக வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாதபடி மூடினர். பின்னர், வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் இந்த சோதனையானது நடந்தது.
இந்த சோதனையின்போது, வீட்டில் ராஜீக் அகமதுவும் வீட்டில் இருந்தார்.
அவரிடம் அமலாக்கத்துறையினர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவரும் அவர்கள் கேட்டவற்றுக்கு பதில் அளித்தார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.
இவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் எதற்காக சோதனை மேற்கொள்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. சோதனை முடிவில் தான் எதற்காக இந்த சோதனை நடந்தது. வீட்டில் இருந்து ஏதாவது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பதும் தெரியவரும்.
அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு ராஜீக் அகமதுவின் வீட்டின் முன்பு 18 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவரது வீட்டில் சோதனை நடப்பது அறிந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முற்றுகையிட்டு, எதற்காக சோதனை என கேட்டனர்.
அவர்கள் உரிய பதில் அளிக்காததால் வீட்டின் முன்பு நின்று கண்டன கோஷங்களை கட்சியினர் எழுப்பினர்.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும்.
- திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும்.
மதுரை:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது:-
எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நாங்கள் தனித்தனியாக வசிக்கிறோம். எங்களை சேர்த்து வைக்கக்கோரி என் மனைவி கரூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் நான் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கு தொடர்ந்தேன். இவற்றை விசாரித்த கரூர் கோர்ட்டு, என் மனைவியின் கோரிக்கையை அனுமதித்தும், என்னுடைய விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இது ஏற்புடையதல்ல. என் வழக்கை தள்ளுபடி செய்ததை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும். அவர்களின் முதல் திருமணம் சட்டப்படி ரத்தாகி உள்ளது. இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணத்துக்கு பின்பு 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து உள்ளனர். அதன்பின்பு மனுதாரர் தன் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
அதாவது, அவரது மனைவிக்கு பாலியல் நோய் இருந்ததாகவும், வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளது. தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையில்லை என்கிறார்.
பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவருடன் குடும்பம் நடத்தியதால் தனக்கும் நோய் பரவியதாக மனுதாரர் கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் ஆபாச படத்தைப் பார்ப்பதில் மனுதாரரின் மனைவியின் செயல் மனுதாரருக்கு எதிரான கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.
திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும். இருப்பினும், சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, அது கணவருக்கு கொடுமையை விளைவிப்பதாகக் கூற முடியாது.
இந்த வழக்கில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை அல்லது உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரர் வழக்கில் கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
- நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண் விளை நிலங்கள் மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும். கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? முப்போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனை பட்டாவாக்க முடியும்.
மேலும் சிப்காட் போன்ற வளர்ச்சித்திட்டங்களுக்கு அரசே விளை நிலங்களை கையகப்படுத்துகிறது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க அனுமதிக்க கூடாது என்று நான் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளேன். இதனால் சாகுபடி பரப்பு 40 லட்சம் ஹெக்டர் பரப்பளவும், 15 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் உள்ளது.
கேரளா போல தமிழகத்தில் இச்சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசில் அதிகநாள் நடைபெறும் கூட்டத்தொடர் இதுவாகும். கடந்த காலங்களில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றது என்பதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியதால் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடைபெறும் கொடூரக்கொலைகள் அதிகரித்துவருகிறது. நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் கொடூரக்கொலை நடைபெற்றுள்ளது. எத்தகைய குற்றம் செய்தாலும் இந்த ஆட்சியில் தப்பிவிடலாம் என்ற மனநிலையே இதற்கு காரணமாகும்.
இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு கொலைகார நாடாக மாறிவிடும். எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். தற்காலிக ஊழியர்களின் பணி நிலைப்பை உறுதிப்படுத்தவேண்டும். இவர்களை பணி நிலைப்பு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிலைப்பு செய்யப்படும் என அறிவித்தும் அதை செயல்படுத்தவில்லை.
நகைக்கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. வட்டியை மட்டும் புதுபித்துகொள்ளும் நிலை இருந்தது. தற்போது விதிமுறைப்படி நகையை மீட்டு, அடுத்த நாள் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.
புதுச்சேரியில் கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது. வரவேற்கத்தக்கது. சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகை ஒரு வாரத்தில் தமிழில் மாற்றாவிட்டால் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு வரவேற்கதக்கது.
தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் அதிகமாக உள்ளது உண்மையிலும் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தி.மு.க.வை போல பா.ம.க. கொடி கம்பங்களை அகற்ற ஆணையிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, பொது இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கவேண்டும். அதே நேரம் நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். சுவற்றில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. வெளிநாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை. மாநாடு விளம்பரம் எழுதினால் மாநாடு முடிந்த பின் அக்கட்சியே இதை அழிக்கவேண்டும் என்ற விதிகள் உள்ளது. இதை தடை செய்ய வேண்டும் என்றார்.
- கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.
- இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.
இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தில் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது.
இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.
இந்து கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சி போல் கூரைவேயும் நிகழ்ச்சி இவர்களுக்கு முக்கியமானதாகும்.
இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கிடைக்கும் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து தங்களின் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். எனவே ஒருமாதமாக ஆண்கள் விரதம் மேற்கொண்டனர்.
- வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
- நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.
தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.
இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரை யோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது.
- கொலை பட்டியலை காண்பதே தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.
சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இ.பி.எஸ் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* சட்டம்-ஒழுங்கு பற்றி பேச அனுமதிக்கவில்லை.
* எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நேற்று நடந்த கொலை சம்பவம் குறித்து சட்டசபையில் பேச முற்பட்டேன்.
* அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது.
* சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் பேசுவதற்கு அ.தி.மு.க.வினருக்கு அனுமதி மறுப்பை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
* மதுரை பெருங்குடி அருகே காவலர், கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரவுடி ஜான் காரில் சென்றபோது வழிமறித்து சினிமா பாணியில் கொலை, நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் தொழுகை முடித்துவிட்டு வந்தபோது கொலை, சென்னையில் தி.மு.க. நிர்வாகியை கடத்தி வெட்டிக்கொலை என நாள்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
* கொலை பட்டியலை காண்பதே தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.
* தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
* முதலமைச்சருக்கு கீழுள்ள காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற அவலநிலை தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதை போல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். விடுமுறை நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
சென்னையில் எழிலகம் பின்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், மாயவன் ஆகியோர் கூறியதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் போராட்டம் நடைபெறுவதால் அரசு ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை 1.4.2026 பதிலாக வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் அல்லது மறியல் போராட்டம் என தீவிரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடக் கூடாது என அ.தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் அவர் கூறியதாவது:-
* சட்டம் ஒழுங்கு பற்றி பேச அ.தி.மு.க.விற்கு தைரியம் இருக்கிறதா?
* சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ஜான், மனைவியுடன் நேற்று காரில் சென்றபோது கொலை நடந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜான் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிகிறது.
* கொலையாளிகள் சதீஷ், சரவணன், பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
* தமிழக காவல்துறையின் கடும் நடவடிக்கை காரணமாக கொலை குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறது.
* மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* எண்ணிக்கையில் பார்கையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு 109 கொலைகள் குறைந்துள்ளன.
* ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.
* குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறோம்.
* தொடர் குற்றம் புரிவோர், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்றார்.
- தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர்.
- தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மக்கள் முதல்வரின் மனித நேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் செனாய் நகர் வைத்தியநாதன் சாலை மற்றும் சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்து இதுவரை 2ஆயிரத்து 700-க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அது 3 ஆயிரத்தை தாண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, பொறுப்பு அமைச்சர் யார்? என்ற கேள்வி இருந்தது.
ஆனால் தற்போது சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விஷயத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது என்றார்.
எதிர்பாராது நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.
பா.ஜ.க.வினர் பலப்பரீட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்தார்.
- சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்கள் புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.
சென்னை:
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பத்திரமாக பூமி திரும்பி சுனிதா வில்லியம்ஸ்-க்கு கவி பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில்,
சுனிதா வில்லியம்ஸின்
பூமி திரும்பல்
ஒரு பெண்ணின் வெற்றியோ
நாட்டின் வெற்றியோ அல்ல;
மகத்தான மானுடத்தின் வெற்றி
அவர்
மண்ணில் இறங்கும்வரை
இரண்டு மடங்கு துடித்தது
பூமியின் இருதயம்
பெண்ணினத்துக்குக்
கூடுதல் பெருமை சேர்த்துவிட்டார்
அந்த வேங்கை மகள்
அவரது உயரம்
நம்பிக்கையின் உயரம்
அவரது எடை
துணிச்சலின் நிறை
மரணத்தின்
உள்கூடுவரை சென்றுவிட்டு
வாழ்வுக்குத் திரும்பியிருக்கிற
சுனிதா வில்லியம்ஸை
பூமியின் ஒவ்வொரு பொருளும்
வரவேற்கின்றது
இந்த விண்வெளிப் பிழை
எதிர்கால அறிவியலைத்
திருத்திக்கொள்ளும்
ஆதாரமாக விளங்கும்
பிழை என்பது அறியாமை;
திருத்திக்கொள்வது அறிவு
என்ற பாடத்தை
அறைந்து சொல்லும்
சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்
வந்தவரை வாழ்த்துவோம்
மானுடத்தை வணங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






