என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைச்சர் துரைமுருகன் இத்துறையின் கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள், அதேபோல், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    அதேபோல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது.
    • தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணாசாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்

    சென்னை:

    சென்னை தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலங்கள் கடந்த 2 வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த 2 மேம்பாலங்களும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    சென்னை சி.ஐ.டி. நகரில் தற்போது 1.2 கி.மீ நீளமுள்ள புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தி.நகர் ரங்கநாதன் தெரு அருகே உஸ்மான் சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சி.ஐ.டி. நகர் மேம்பாலத்தை, உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக உஸ்மான் சாலையின் வடக்கு பகுதியும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 2 மேம்பாலங்களும் ஒரே அகலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பணி நடைபெற்று வருகிறது.

    இந்த மேம்பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது. இதை சரி செய்ய சி.ஐ.டி. நகர் மேம்பாலம், ரங்கநாதன் தெருவுக்கு முன்பே முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் தரை மட்டத்தில் 100 மீட்டர் தூரம் சென்று, பிறகு புதிய மேம்பாலத்தில் ஏற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் பனகல் பூங்கா நோக்கி செல்லும் பொதுமக்களுக்கு ரங்கநாதன் தெருவுக்கு அருகில் ஒரு வெளியேறும் வழியும் இருக்கும். மேலும் சர்வீஸ் சாலையை உருவாக்க அருகில் உள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணா

    சாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்.

    இதேபோல் சென்னை ஆர்.கே.நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எனவே தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் மே மாதம் திறக்கப்பட உள்ளன. இதை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையிலும் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்ப தாக்கம் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தென் மாநிலங்களிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    கோடை வெயில் உக்கிரமாக தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்து உள்ளன.

    குறிப்பாக இந்த தடவை கோடை காலத்தில் வெப்ப அலைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மதியம் நேரத்தில் உடலை சுட்டெரிக்கும் வகையில் வெப்ப அலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நாட்டில் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்ப தாக்கம் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக வெப்ப தாக்கம் இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் மாநிலங்களிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வெப்ப தாக்கத்தின் பாதிப்பை இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.

    தமிழகத்தில் வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் வெப்ப தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

    சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதியம் நேரத்தில் வெப்ப காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அத்தியவாசிய பணிகளுக்கு வெளியில் செல்பவர்கள் குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள் வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது என்றும் வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

    • சம்பவத்தை மாணவர்களில் ஒருவரே வீடியோவாக எடுத்து வெளியே பரப்பி விட்டுள்ளார்.
    • வீடியோவை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து நின்று தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாக்கப்பட்ட மாணவர் சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர். 21 வயதான அவர் அந்த கல்லூரியில் முதுகலை கிரிமினாலஜி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரை தாக்கியவர்கள் அதே விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் ஆவர்.

    என்ஜினீயரிங் மாணவர்கள் அறையில் அடிக்கடி பணம் திருட்டுப் போய் உள்ளது. ஆயிரம், ரூ.2 ஆயிரம் என தொடங்கி மொத்தம் ரூ.22 ஆயிரம் திருடு போய் இருக்கிறது.

    இந்த பணத்தை முதுகலை கிரிமினாலஜி படிக்கும் மாணவர் திருடி இருக்கலாம் என என்ஜினீயரிங் மாணவர்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இதனால் சம்பவத்தன்று இரவு விடுதியில் இருந்த அந்த மாணவரை என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி உள்ளனர்.

    சட்டை அணியாமல் இருந்த அந்த மாணவரை முட்டிப்போட வைத்தும், கைகளை மேலே தூக்கச் சொல்லியும் தாக்கி இருக்கிறார்கள். இனி இதுபோல் செய்ய மாட்டேன் என கூறி மன்னிப்பு கேள் எனவும் கூறி சரமாரியாக தாக்கினர். அந்த மாணவர் கண்ணீர் விட்டு கெஞ்சி கதறி அழுதபிறகும் அவரை விடாமல் அவர்கள் அடித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை மாணவர்களில் ஒருவரே வீடியோவாக எடுத்து வெளியே பரப்பி விட்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தார். வீடியோவை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

    கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 13 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 13 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. 13 பேரும் இன்று பெற்றோருடன் கல்லூரிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    அதன்படி இன்று மாணவர்கள், பெற்றோருடன் கல்லூரி நிர்வாகத்தினர் முன்பு ஆஜராகினர். பெற்றோர் முன்னிலையில் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்களிடம் அவர்கள் விளக்க கடிதம் எழுதி வாங்கிக் கொண்டனர். இன்று 11 மாணவர்கள் பெற்றோரை அழைத்து வந்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினர். 2 மாணவர்களின் பெற்றோர் வரவில்லை. அவர்கள் நாளை வருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே கல்லூரி தரப்பில் விடுதி வார்டன் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இந்த சம்பவம் ராகிங் அல்ல. பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு தாக்கி உள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என கூறி உள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர், காயம் அடைந்துள்ளதால் சொந்த ஊரான சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் போலீசில் புகார் அளிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
    • ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.

    டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

    புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும். புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை.
    • பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்கள் உள்பட உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85 சதவீதம் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.

    துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

    கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது. எனவே அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குற்றவாளிகளை தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு.
    • குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச் செயல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில், வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

    இவ்வாறு பணிக்காக வருபவர்களுடன் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் கலந்து விடுகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கடலூர் திட்டக்குடியை சேர்ந்த தனிப்படை போலீசார், சிறுமிகளை கடத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்திய நபரை கைது செய்தனர்.

    இதனால் வெளி மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபர்கள் குறித்து சோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

    குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கோட்டங்களிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் 80 தாபாக்காள், ஓட்டல்களில் போலீசார் சோதனை செய்தது, 350 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் இருப்பிடம், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தனர். இதில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகள் குறித்து சோதனை நடத்தினர். இதில் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் 32 பேர் மீது ஆயுத வழக்கு, கஞ்சா, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 32 பேரை ஜெயிலில் அடைத்தனர். 12 பேர் நன்னடத்தை பிணைய சான்றிதழின் கீழ் விடுவித்தனர்.

    இதேபோல் காந்திபுரம் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையங்களிலும் போலீசார், போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தி ஆய்வு செய்தனர்.

    ஏற்கனவே கோவை மாநகரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஓராண்டுக்கு கோவையை விட்டு வெளியேற வேண்டும் என போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரிலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர் வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறாதவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இப்படி கோவை மாவட்டம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அத்துடன் இங்கிருந்தால் நம் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என பயந்து கோவையில் உள்ள பல ரவுடிகள் ஊரை காலி செய்து, விட்டு வெளியூர்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.

    கோவையில் நடந்து வரும் சோதனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

    பல மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், கோவையில் வந்து பதுங்கி கொள்கிறார்கள்.

    அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். முக்கிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளி வாசல் தெருவில் வசிப்பவர் சாகுல் (வயது 40).

    இவர் அதே பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். ஆயில் மில் மேல் தளத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்பதற்கான அட்டைப்பெட்டிகள், எள் மூட்டைகள், கடலை பருப்பு மூட்டைகள் உள்ளிட்ட ஆயில் பொருட்களை வைத்துள்ளார்.

    வழக்கம் போல் நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு ஆயில் மில்லை வழக்கம் போல் சாகுல் பூட்டிவிட்டு சென்றார்.

    இந்த மில்லில் இருந்து நள்ளிரவில் பொருட்கள் வைத்திருத்த தளத்தில் இருந்து புகையுடன் தீ பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி ஆயில் மில் மேல் தளத்தில் உள்ள குடோன் முழுவதும் பரவியது இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக போராடினர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து இது ஆயில் குடுடோன் என்பதால் இதற்கு என பிரத்தியேகமாக உள்ள தீயணைப்பு வாகனம் புதுக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்டது.

    அவர்கள் ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களிலும் தண்ணீர் பீச்சியடித்து தீ பரவாமல் தடுத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது. நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தால் ஆலங்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊட்டியில் 700 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி.
    • பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

    ஊட்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைகிறதா? மாவட்டங்களில் நடந்து வரும் திட்டப்பணிகள் சரியாக நடக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலஉதவிகளையும் வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் ஏப்ரல் முதல் வாரம் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்கிறார். ஏப்ரல் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அவர் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வுப்பணியை மேற்கொள்ள உள்ளார்.

    அப்போது ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.

    இதையொட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்து வரும் இறுதிக்கட்ட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டும், ஏற்படுத்தப்பட்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை யினரும் இணைந்து நிலச்சரிவு, மழை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இக்கட்டுமான பணிகளை சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.

    இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் என்றால் அது ஊட்டி என்று தான் சொல்ல வேண்டும்.

    மேலும் இந்த மருத்துவ மனையின் சிறப்பம்சம் என்னவென்றால் பழங்குடியினருக்கு தனி வார்டு ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பழங்குடியினருக்கென தனி வார்டு ஒன்று, ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 20 படுக்கைகள் மற்றும் மகப்பேறுக்கென்று 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்மருத்து வமனையை பொறுத்தவரை எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கு களுடனும் அமைக்கப்பட்டு தற்போது திறக்கும் தருவாயில் உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 6-ந்தேதி அன்று ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவமனையில் ரூ.8.60 கோடி செலவில் தங்கும் அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதலாக பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
    • தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் கடந்த 20-ந் தேதி வழக்கம்போல் பள்ளி முடிவடைந்த நிலையில், பள்ளியைவிட்டு வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவர்கள் 8 பேர், பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.

    பின்னர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று உள்ளனர். அடுத்த நாள் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர், அந்த 8 மாண வர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது குறித்து சந்தேகமடைந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 8 மாணவர்களுக்கும் உடல் நிலை சரியில்லை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்து உள்ளனர்.

    அப்போதுதான் மாணவர்கள் அன்று மாலை குளிர்பானம் குடித்ததாக வும், அதன்பிறகு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட தாகவும் கூறியுள்ளனர்.

    இதில் 8 மணாவர்க ளுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த பின்பு 5 மாணவர்கள் உடல் நலன் பெற்று வீடு திரும்பிய நிலையில், இரு மாணவர்கள் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

    இந்நிலையில் பள்ளிக்கு வந்த சிறப்பு மருத்துவக்குழு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பரிசோதித்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.

    விரைவில் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் குளிர்பானத்தை அருந்தி விட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, பள்ளியை விட்டு வெளியே சென்ற மாணவர்கள் குடித்த குளிர்பானத்தால்தான் உடல் உபாதைக்கு உள்ளாகி உள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாண வர்களை ஆசியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் இணைந்து கண்காணித்து வருகிறோம். பொதுத்தேர்வுக்கு தயாராகி விடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும் காலாவதியான குளிர்பானம் குறித்து கேட்டதற்கு, காலாவதியான குளிர்பானம் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
    • இந்த வழக்கு நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது.

    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பின்பு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சினையில் கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர் ஷா மற்றும் நோட்டமிட்டு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்திருந்தனர். தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.


    இந்நிலையில், நேற்று நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர் முகம்மதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அதிகாலை ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழு கையை முடித்துவிட்டு வெளியே வருவதை நோட்டமிட்டு கொலை யாளிகளுக்கு தகவல் அளிப்பதற்காக காத்திருந்த 16 வயது சிறுவனுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனால் கொலையில் பீர் முகமதுவுக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றா லும், கொலை சம்பவம் நடக்கப்போவது தெரிந்தும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறி போலீசார் அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். இதுவரை 5 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனிடையே தலைமறை வாக உள்ள நூர்நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் அந்த தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலையில் தொடர்புடை யவர் பெண் என்பதால் சகஜமாக சந்தேகப்படும் வீடுகளுக்குள் சென்று தேட முடியவில்லை.

    இதனால் தனிப்படையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தால் தேடுதல் எளிதாகும் என்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இன்று தனிப்படை யில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் போலீஸ் சேர்ந்து, நூர்நிஷாவை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×