என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மாணவி வழக்கு.
- மாணவர்கள் முறையிட்டதால் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் கோரி மாணவி வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மாணவர்கள் முறையிட்டதால் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அவகாசம் வழங்கப்பட்டதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
- கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததை அடுத்து குளம் நிரம்பி வருகிறது.
- பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ளது அணைப்பட்டி கிராமம். இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்மசமுத்திரம் குளம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு மூலம் வரும் தண்ணீர் இந்த குளத்தில் சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சுற்றுவட்டார கிராமத்தில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. இந்த குளத்தில் வருடந்தோறும் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததை அடுத்து குளம் நிரம்பி வருகிறது.
இந்நிலையில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பிரம்மசமுத்திர கரையில் உள்ள கன்னிமார் தெய்வம், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரம்ம சமுத்திரம் ஆயக்கட்டு தலைவர் பழனிசாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இதில் அணைப்பட்டி, கொட்டப்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அனமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர், பாலம் ராஜாபட்டி, குட்டத்துப்பட்டி, கோமையன்பட்டி, புகையிலை பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வலை வீசியும், கூடைகளை பயன்படுத்தி மீன்களை உற்சாகமாக அள்ளி சென்றனர். கட்லா, ஜிலேபி கெண்டை, விரால், மிருகாள், ரோகு, அவுரி, தேளி விரால் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீன்கள் வலையில் சிக்கியது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொன் முருகன் கூறுகையில், பிரம்ம சமுத்திரகுளம் மூலம் 1500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதை வரவேற்கும் வகையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாரம்பரியமாக மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது. 18 பட்டி சுற்றுவட்டாரத்திலிருந்து ஜாதி, மத பேதமின்றி அனைவரும் இதில் ஒற்றுமையுடன் கலந்து கொண்டனர் என்றார்.
- கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை 42 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அமாவாசை தினங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குறிப்பாக ஆனி, ஆடி மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் அமாவாசையும் நாளை வருகிறது. இதனால் இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி யது. ராஜாக்கமங்கலம் துறை அருகே புத்தன் துறை பகுதியில் இன்று காலை 3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அலையின் வேகம் அதிகமாக உள்ளதால் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்று வருகிறது.புத்தன் துறை பகுதியில் கடற்கரையொட்டி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடற்கரை பகுதிகளில் அச்சத்துடன் நின்றனர். சிலர் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்கு மாவட்ட பகுதிகளான வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதியில் உள்ள தடுப்பு மீது வேகமாக மோதியது. சொத்தவிளை, சங்குத்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. வழக்கத்தைவிட அலைகள் கடற்கரை யொட்டியுள்ள பகுதி வரை வந்து சென்றன. கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை ஆடி அமாவாசையையொட்டி கடற்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக வருகை தருவார்கள். எனவே அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
- கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன. அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 22,720 கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரை புரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது. ஆனாலும் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- இபிஎஸ் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்.
- எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.
திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்.
ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம்.
திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.
அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத அளவிற்கு இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக மதுரை பெருங்குடி அருகே பாரைப் பத்தி பகுதியில் சுமார் 506 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த 16-ந்தேதி கால்கோள் விழா நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டு பந்தல் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மாநாட்டு பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளும் சரி செய்யப்பட்டு பந்தல் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான ராட்சத குழாய்கள், இரும்பு தடுப்புகள், ஷீட்டுகள் போன்றவை அந்த பகுதிக்கு கனரக வாகனங்களில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.
தினந்தோறும் கனரக வாகனங்களில் மாநாட்டு பந்தலுக்கு தேவையான இரும்பு கம்பிகள் மற்றும் சீட்டுகள் வருகிறது. இதனை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் ஆங்காங்கே இறக்கி வருகின்றனர். தற்போது முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் பந்தல் அமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. இதற்காக த.வெ.க. மாநில பொதுச் செயலாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் அடுத்த வாரம் முதல் மதுரையில் முகாமிட்டு மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத அளவிற்கு இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் அமைய உள்ளது. இதற்கான அதில் தனித்துவம் மிக்க வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு மேடை உருவாக்குவதற்கு தேவையான வரைபடம் மற்றும் தொழில் நுட்பங்களை செய்து வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இரும்பு போஸ்டுகள், ராட்சத கிரேன் மூலம் நடப்படுகிறது. மற்றும் அதற்கான வெல்டிங் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. மாநாட்டு பந்தலில் சுமார் 10 லட்சம் நாற்காலிகள் போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர சிறப்பு அழைப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளும் அமருவதற்கான தனியாக இருக்கை வசதியும் செய்யப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சுடச்சுட அறுசுவை உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய தேவையான அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. உணவு தயாரிக்க சிறப்பு குழுவினர் பணியமர்த்தப்படுகிறார்கள். இதுதவிர சாப்பாடு கூடம், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு தனித் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.
மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாகன நிறுத்துமிடம் பல ஏக்கர் பரப்பளவில் செம்மைப்படுத்தி தயார் செய்யப்பட்டு வருகின்றது. முக்கிய நிர்வாகிகளின் வாகனம் நிறுத்துவதற்கு மேடை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வரும் வாகனங்களை மாநாட்டு திடல் உள்ளிட்ட 6 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் த.வெ.க. மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தவேண்டும் என்பது தான் த.வெ.க. நிர்வாகிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மதுரையில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் இருந்து சுமார் 5,000 பேர் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். எனவே மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 24-ந்தேதியே மதுரை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வரும் நேரம் மற்றும் தங்குமிடம் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. மாநாடு தொடங்குவதற்கு முன்னதாகவே 25-ந்தேதி அதிகாலையில் மாநாட்டு பகுதிக்கு விஜய் வந்து விடுவார். எனவே தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநாட் டில் கலந்து கொள்வதற்கு எந்தவிதமான போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண கால தாமதம் ஏற்படாது என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதால் அது அரசியல் ரீதியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனுக்கள் பெறப்பட்டு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது.
- தன்னார்வலர்கள் கூடுதலாக பணியில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. நெற்குன்றம் பகுதியில் இன்று நடைபெறும் முகாம் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் 15 துறைகள் இணைந்து மக்களுக்கான சேவை கிடைப்பதில் முகாம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 43 சேவைகளை மக்கள் பெற முடியும்.
மனுக்கள் பெறப்பட்டு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் கூடுதலாக வருகிறது. இதற்கு தன்னார்வலர்கள் கூடுதலாக பணியில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர் என செயல்படுத்தி இருந்தனர். ஆனால் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பெயரை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது தவறு. எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சரை ஒருமையில் விமர்சிப்பது சரியான நாகரீகம் அல்ல.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் நன்றாக இருக்கிறது. மு.க.முத்து இறப்பின் நேரத்தில் முதல்வர் கூடுதலாக நேரத்தை செலவிட்டு இருந்தார். அதனால் சோர்வு ஏற்பட்டது. பயப்படும் அளவுக்கு ஒன்னும் சிக்கல் இல்லை.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சுரேந்திரன் (வயது28). இவருக்கும் சோழிங்கநல்லூரில் வசித்து வரும் உறவினர் மகளான பிரியங்காவுக்கும்(25) இடையே சிறுவயது முதலே பழக்கம் ஏற்பட்டது. என்ஜினீயரான பிரியங்கா போரூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சுரேந்திரனின் தாயும், பிரியங்காவின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். எனவே சுரேந்திரன்-பிரி யங்கா நட்பாக பழகி வந்ததை குடும்பத்தினர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையே அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது பற்றி தெரிந்ததும் இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறை தவறிய காதலை எடுத்து கூறி அறிவுரை வழங்கினர். ஆனால் காதலர்கள் இருவரும் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனிமையில் சுற்றி பழகி வந்தனர். இதற்கிடையே பிரியங்கா கர்ப்பம் அடைந்தார். இதனை கூறி அவர்கள் திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கூறி கர்ப்பத்தை கலைத்து விடலாம் எனவும் சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் காதலர்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
திருமணம் செய்து வைக்க பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த காதலர்கள் சுரேந்திரனும், பிரியங்காவும் நேற்று இரவு தண்டலம் பகுதியில் உள்ள பம்புசெட் அறையில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.
நீண்டநேரம் ஆகியும் வெளியே சென்ற சுரேந்திரன் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடி சென்றபோது பம்பு செட் அறையில் சுரேந்திரனும், பிரியங்காவும் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முறைதவறிய காதலால் 8 மாத கர்ப்பிணி காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் மிகப் பெருமையாக கருதுகிறோம்.
- பெரியார் தான் தமிழை தூற்றினார்.
வேலூர்:
வேலூரில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அரசு செலவில் பலகோடி ரூபாய் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது போல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளது.
4 ஆண்டில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாக சொல்கிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள். மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மிக தவறான சூழல் உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் மிகப் பெருமையாக கருதுகிறோம்.
ஆண்டாள் காலம் தான் தமிழை வளர்த்தது. பெரியார் தான் தமிழை தூற்றினார். பிரதமர் வருகை எங்களுக்கு புத்துணர்ச்சி தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
- அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மேலும், அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்! என்று பதிவிட்டுள்ளார்.
- இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார்.
- "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
"உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். இந்நிகழ்வின் போது, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






