என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு
    • நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை 7 மணியளவில் அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளின் பேச்சால் முதலமைச்சருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    எல்லோருக்கும் வணக்கம். நேற்று கேள்விப்பட்ட ஒரு செய்தியால் மனது சரியில்லை. அது என்னவென்றால் நமது முதல்வர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கேள்விப்பட்டதும் மனசே சரியில்லை. கூடிய விரைவில் அவர் குணமாகி வீட்டிற்கு வந்துவிடுவார். என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். அதுபோல அண்ணியின் பிரார்த்தனை நமது முதலமைச்சரை குணப்படுத்தி வீட்டிற்கு கொண்டு சென்று விடும்.

    என்னதான் நாம் மருத்துவமனையில் இருந்தாலும், நமக்கு ட்ரீப்ஸ் ஏறினாலும், மருத்துவர் நம்மை பார்த்துக்கொண்டாலும், மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அதைவிட பூரணமாக குணம் அடைந்து வரவேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி இருக்கு. அது என்ன என்று கேட்டால்...

    முதலமைச்சர் ஒரு நிகழ்வில் பேசும்போது , காலையில் நான் கண்விழித்து எழுந்திருக்கும்போது நம்மவர்கள் யாராவது எதையாவது பண்ணிடக்கூடாது என்று எழுந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு மனஉளைச்சல் இருக்கு பாருங்க. இதுல கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் செய்கின்ற செயல்கள், நீங்கள் பேசும் வார்த்தைகள் இதையெல்லாம் உங்களை பாதிக்கிறதோ இல்லையோ... தலைவரை போய் பாதிக்கும். முதலமைச்சரை பாதிக்கும். அதுக்காகத்தான் அவர் அந்த வார்த்தை சொல்கிறார். தயவு செய்து இனிமேல் நீங்கள் பேசும் பேச்சிலோ, செயலிலோ கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால்? நம்ம முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு. நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.

    த.வெ.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய சகோதரி வைஷ்ணவி ஒரு புகார் கொடுத்துள்ளார். தலைவர் அறிக்கை விடுகிறார் என்பதை தாண்டி, ஒரு கட்சியில இருக்கோம், ஒரு புது கட்சி தொடங்கியிருக்கிறது, எந்தவித பாதிப்பும், அவமானமும் நம்ம கட்சிக்கும், தலைமைக்கும், தலைவருக்கும் வரக்கூடாது என்பது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ரொம்ப முக்கியது. அப்படிப்பட்டவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி முடிக்க பார்க்க வேண்டும் என்றார்.


    • பொதுமக்களை திரண்டு வந்ததை பார்த்த யானை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மீண்டும் வனத்துக்குள் சென்று விட்டது.
    • காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் டேன்டே குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவர் இன்று அதிகாலை நேரத்தில் தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் வீட்டுக்கு வெளியே வந்தார்.

    அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென டேன்டீ குடியிருப்புக்கு வந்தது. இதனை பார்த்து லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

    இருந்தபோதிலும் மூதாட்டி லட்சுமியை சுற்றி வளைத்த யானை தும்பிக்கையால் பிடித்து கீழே தள்ளியது. பின்னர் அவரை சரமாரியாக மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பெரிதாக சத்தம் எழுப்பி காட்டு யானையை விரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

    பொதுமக்களை திரண்டு வந்ததை பார்த்த யானை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மீண்டும் வனத்துக்குள் சென்று விட்டது.

    நெல்லியாளம் டேன்டீ குடியிருப்பு பகுதியில் காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் தடயங்களை ஆய்வு செய்தனர். பின்னர் மூதாட்டியை கொன்றுவிட்டு தப்பி சென்ற யானையை கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனத்துக்குள் உணவு பற்றாக்குறை காரணமாக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கின்றன. எனவே மலைஅடிவார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உளளனர்.

    நெல்லியாளம் டேன்டீ குடியிருப்பு பகுதியில் மனித-விலங்கு மோதலை தடுக்கும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழகத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் 3 பேரின் பெயர் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள 10 பேர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் சங்கர் ஜிவால், அடுத்த மாதம் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த டி.ஜி.பி.யை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்காக தமிழகத்தின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் தற்போதைய டி.ஜி.பி. ஆகியோர் அடுத்த மாதம் டெல்லி செல்ல உள்ளனர்.

    டெல்லியில் யூ.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் 3 பேரின் பெயர் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள 10 பேர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளனர்.

    இவர்களில் மத்திய அயல் பணியில் டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோரா இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இவரை தவிர்த்து சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

    6 மாதத்திற்குள் ஓய்வு பெறும் அதிகாரிகளை டி. ஜி.பி. பட்டியலில் சேர்க்க முடியாது என்பது யூபிஎஸ்சி விதிகளில் ஒன்றாகும்.

    இதனால் விரைவில் ஓய்வு பெற உள்ள அபய்குமார் சிங்கின் பெயர் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பும் பட்டியலில் இடம்பெறு வதற்கு வாய்ப்பு இல்லை.

    மீதமுள்ள 8 பேரில் 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சீமா அகர்வால், 1992 பேட்ச் அதிகாரிகள் ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் உட்பட 8 அதிகாரிகள் பட்டியல் விரைவில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    இதற்கு முன்பு, 30 ஆண்டுகள் காவல் துறையில் பணி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் இந்தப் பட்டியலில் சேர்வதற்குத் தகுதியுடையவர்களாக இருந்தனர். அதன்படி சீனியர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் இடம் பெற்று வந்தனர்.

    ஆனால் மத்திய உள்துறையின் புதிய விதிகளின் படி, 16-வது ஊதிய குழு அட்டவணையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அனைவருமே டி.ஜி.பி. பணியிடத்திற்கு தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள விதிகளின் படி, மாநில அரசு கொடுக்கும் பட்டியலில், சீனியாரிட்டி அடிப்படையில் 3 அதிகாரிகளை யூ.பி.எஸ்.சி. தேர்ந்தெடுத்து மாநில அரசிடம் வழங்கும். அவர்களில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி.யாக தேர்வு செய்யும்.

    இதன்படி தமிழக புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் சீமா அகர்வால் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன்மூலம் டி.ஜி.பி. அந்தஸ்தை எட்டிப் பிடிக்கும் 2-வது பெண் அதிகாரியாக சீமா அகர்வால் திகழ்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பெண் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் ஏற்கனவே பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமண லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், மலை மீது பஞ்சலிங்க அருவி உள்ளது. தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் மழை பொழிவு குறைந்ததால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வழக்கத்தை விட அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அங்கு கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
    • குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4-ல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12-ந்தேதி தேர்வு நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.

    குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தேர்வில் அளித்த விடை சரியானதா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக Answer Key வெளியாகியுள்ளது.

    குரூப் 4 தேர்வுக்கான Answer Key தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க.வை நேரடியாக வரவேற்று கூட்டணி வைத்து அ.தி.மு.க. வலுவிழந்துவிட்டது.
    • பா.ஜ.க.வை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய்.

    சேலம்:

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2026-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்பது உறுதி. கட்சியின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலத்தில் மாபெரும் வெற்றி கூட்டமாக அமைந்துள்ளது. சேலத்தில் சாக்கடை கால்வாய், சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. இதனை ஆளுங்கட்சியினர் செய்து கொடுக்க மாட்டார்கள். 2026-ல் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தவுடன் முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றவுடன் நிச்சயம் செய்து கொடுப்பார் என்றார்.

    இதையடுத்து பேசிய த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா,

    தி.மு.க.வின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்கிறது. பா.ஜ.க.வை நேரடியாக வரவேற்று கூட்டணி வைத்து அ.தி.மு.க. வலுவிழந்துவிட்டது. நாங்கள் ஏன் அ.தி.மு.க.வை எதிர்க்கவில்லை என்றால், அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தொண்டர்கள் த.வெ.க.வில் எப்போதும் இணைந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். எந்த குறிக்கோளோடு ஆரம்பித்தாரோ, ஜெயலலிதா அம்மா எந்த குறிக்கோளோடு அ.தி.மு.க.வை மீட்டு எடுத்தார்களோ... அந்த குறிக்கோளின் ஒற்றை நம்பிக்கை இன்றைக்கு நம்முடைய தலைவர் விஜய் மட்டும்தான். இந்த கொள்கையற்ற அரசியலால்தான் தி.மு.க. இன்றைக்கு சுலபமாக கடைசி 3 தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் இனி வெற்றி பெற முடியாது. ஏன் என்றால் உங்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்கள் பா.ஜ.க.விடம் சரணடைந்த தலைவர்கள் அல்ல. பா.ஜ.க.வை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய். இஸ்லாமிய தோழர்களே.. எங்களுக்கு குர்ஆனும் ஒரு கடவுளோடு நம்பிக்கைத்தான். குர்ஆன் மீது ஆணையாக சொல்கிறோம்.... எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் எங்களுக்கு கூட்டணி கிடையாது... உறவு கிடையாது என்பதை அழுத்தமாக இந்த சேலம் மாநாட்டில் உறுதியுடன் கூறுகிறோம் என்றார்.

    • 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது
    • QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

    ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " மெட்ரோ இரயில் நிலையங்களில் CMRL பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC Card - சிங்கார சென்னை அட்டை) மாற்றப்படவுள்ளது.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க CMRL பயணஅட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது. 01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

    பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசியபொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.

    • பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்
    • ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டி காந்திசிலை அருகே பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் வாகனத்தின் உள்ளே ஏராளமான ஆற்று மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து மணல் கடத்தி வந்த வேன் மற்றும் அதில் வந்த நான்கு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கள்ளிப்பட்டி அடசப்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன்(35) ,கணக்கம்பாளையம் புதுகாலனியை சேர்ந்த சுரேந்திரன்(45), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிக்குமார்( 28), அடசப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(21) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் நான்குபேரும், கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக செல்வதுபோல இரவு நேரத்தில் பரிசலுடன் சென்று ஆற்றில் உள்ள மணலை திருட்டுத்தனமாக அள்ளி வந்து அதை மூட்டைகளாக கட்டி வாகனத்தில் கடத்தி சென்றதும், அதை ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ,75 மணல் மூட்டைகளுடன் ஆற்றில் மணல் அள்ளப்பயன்படுத்திய பரிசல் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பங்களாபுதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மணல் கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள சந்திரசேகரன் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து பவானி ஆற்றில் மீன் பிடிப்பதாக கூறி பரிசலில் மணலை அள்ளி வந்து மூட்டைகளாக கட்டி விற்பனை செய்து வருவதாகவும் தெரியவருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக திருடி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன.

    அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த நீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனையானது.
    • நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,285 ரூபாய்க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.



    நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440

    20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880

    17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-07-2025- ஒரு கிராம் ரூ.126

    20-07-2025- ஒரு கிராம் ரூ.126

    19-07-2025- ஒரு கிராம் ரூ.126

    18-07-2025- ஒரு கிராம் ரூ.125

    17-07-2025- ஒரு கிராம் ரூ.124

    • ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட உட்கட்டமைப்பையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

    தென் மாநிலங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு 5 இடங்களை தேர்வு செய்து நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியது.

    ராமநாதபுரம் மாவட்ட உட்கட்டமைப்பையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள 5 இடங்களில் விமான நிலைய ஆணையம் விரைவில் ஆய்வு செய்து இடத்தை முடிவு செய்ய உள்ளது.

    • வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் மற்றும் பெங்களூருவில் இருந்தும் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணிய தலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதன்படி வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    எனவே நாளை (புதன்கிழமை) அன்று சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்திற்கும், வருகிற 24-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

    ×