என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும்.
இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர்மட்டத்துக்கேற்ப வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் நீர்வரத்து காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து 4 முறை வீராணம் ஏரி நிரம்பியது. அதனை தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பியது மற்றும் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக குறைந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டனர்.
தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 2 அடியில் இருந்த கீழணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 9 அடியை எட்டியது.
அதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.
இதன் மூலம் நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கீழணை, வீராணம் ஏரியில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.
- கோவில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது கோவில் மாட்டையும் காணவில்லை.
- தேர்தலில் அனைவரும் இதயத்தில் இருந்து கொஞ்சம், மூளையில் இருந்து கொஞ்சம் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வல விசர்ஜன நிகழ்ச்சியில் பா.ஜ.க. கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றிவிட்டது. விநாயகரை கரைப்பதற்கு கூட சென்னையில் தண்ணி லாரி கொண்டு வந்து குளத்தில் தண்ணீர் நிரப்பி கரைக்க வேண்டி இருக்கிறது.
எனவே, இளைஞர்கள் இதனை ஒரு சபதமாக ஏற்று முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி மேம்படுத்த வேண்டும். ஊருக்கு 100 இளைஞர்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும்.குளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இந்து அறநிலையத்துறை தனது பணியை ஒழுக்கமாக செய்தால் தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கோவில் வருமானம் மட்டும் போதும். இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கை அதள பாதாளத்தில் உள்ளது. இன்று சுமார் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலம் காணாமல் போய்விட்டது. திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக தரப்பட்டது. அதில் ஒரு மாட்டையும் காணவில்லை.
கோவில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது கோவில் மாட்டையும் காணவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 46 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை கூட பெரும்பாலான கோவில்களில் நடக்கவில்லை.
வருங்காலத்தில் இந்து அறநிலையத்துறை என்கிற துறை இருக்கவே கூடாது. எனவே, இந்த தேர்தலில் அனைவரும் இதயத்தில் இருந்து கொஞ்சம், மூளையில் இருந்து கொஞ்சம் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
- தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.
கோபி:
அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.
மீண்டும் 2011 ஆம் ஆண்டு வரை விவசாயத் துறை அமைச்சராக இருந்தார். அதை த்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
இப்படி அ.தி.மு.க.வின் மிக முக்கிய தலைவராக இருந்து வந்த செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில், விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அனைத்து இடங்களிலும் பேசி வந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறைமுகமாகவே மேடைகளில் பேசி வந்தார்.
இதற்காக கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறிப்பாக ஜெயலலிதா, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இருந்த காலகட்டங்களில் அப்போதைய கூட்டணிகள் தொடங்கி கடந்த காலங்கள் வரைக்கும் குறிப்பிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார்.
ஆனால் அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கிய போது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார்.
கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம் வரும் 5-ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார்.
மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2, 3 மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ.செங்கோட்டையனின் தற்போதைய நிலைப்பாட்டால் அ.தி.மு.க.வில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது. அவர் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையே இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் வந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது.
- தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,725-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 36ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640
31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960
30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960
29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280
28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-09-2025- ஒரு கிராம் ரூ.136
31-08-2025- ஒரு கிராம் ரூ.134
30-08-2025- ஒரு கிராம் ரூ.134
29-08-2025- ஒரு கிராம் ரூ.131
28-08-2025- ஒரு கிராம் ரூ.130
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதித்து 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
- சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தருமபுரி:
கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.
கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) கபினி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 33 அயிரத்து 589 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 920 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.
கபினி அணை நேற்று நிரம்பியது. இதன்மூலம் இந்த ஆண்டில் 2-வது முறையாக கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 407 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 983 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது.
இதன்மூலம் இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 45 ஆயிரத்து 963 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக வந்தது. மேலும் அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக வந்தது.
அதே அளவு நீடித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதுடன், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதித்து 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவியின் அழகையும், காவிரி ஆற்றின் அழகையும் கண்டு ரசித்தவாறு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
- கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர்:
கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது.
இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. பின்னர் ஜூலை 20-ந் தேதி 3-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து ஜூலை மாதம் 25-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மேட்டூர் அணை 5-வது முறையாக நிரம்பியது.
பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக குறைந்தது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயரத்தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 6-வது முறையாக இன்று காலை நிரம்பியது. அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணை வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் அணை 6-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியும் என மொத்தம் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணையை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
- சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
- சசிகாந்த் செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதம் இருந்த சசிகாந்த் செந்திலுக்கு கடந்த 30-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், 4 நாட்கள் நீடித்த உண்ணாவிரத போரட்டத்தை சசிகாந்த் செந்தில் நேற்று முடித்துக்கொண்டார்.
காங்கிரஸ் மேலிடம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சசிகாந்த் செந்தில் நேற்று இரவு உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தார்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மருத்துவமனைக்கு சென்று பழச்சாறு கொடுத்து நிலையில் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
- காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
- திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என காரியாபட்டியில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
இதனிடையே, கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. சேர்மனின் சகோதரர் ஓட்டி சென்ற காரை சுற்றி வளைத்து கண்ணாடியை உடைத்து அவர்களை அ.தி.மு.க.வினர் விரட்டி அடித்துள்ளனர்.
முன்னதாக, திருச்சி அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (03.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ரெட் ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்.
அம்பத்தூர்: அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் முதல் மூன்றாம் கட்டம், பாடசாலை தெரு, கம்பர் நகர் I முதல் IV, காசா கிராண்ட், கே.ஜி., குளக்கரை தெரு, வானகரம் சாலை, டிடி மேத்யூ சாலை, 200 அடி சர்வீஸ் சாலை.
திருவான்மியூர்: இந்திரா நகர் குறுக்கு தெரு 17 முதல் 20 வரை, 25 முதல் 29 வரை மற்றும் இந்திரா நகர் பிரதான சாலை, மாநகராட்சி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், எல்பி சாலை, ஆனந்த் அடுக்குமாடி அபார்ட்மெண்ட்.
தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் கார்டன் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, சீதம்மாள் காலனி, கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவத்சலம் தெரு, அப்பாதுரை தெரு, TTK சாலை, கதீட்ரல் சாலை, ஜே.ஜே. சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர். சாலை, ஜார்ஜ் அவென்யூ, SSI சாலை, HD ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணாசாலை, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.
- தேவையில்லாமல் வாயை கொடுத்து இவரும் மாட்டிகொள்கிறார், அவரது தோழர்களையும் மாட்டி விடுகிறார்.
- திராவிட மாடல் அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒருபோதும் இது போன்ற சில்லறை வேலைகளை செய்வதில்லை.
சென்னை :
ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களோடு ரூ.3200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், மாநில முதல்வரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன? ஒரே நாளில், முதலமைச்சர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதலளிக்கும் விதமாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா?
ஜெர்மனியில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் நாளிலேயே ரூ3,201 கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் போட்டுள்ள நிலையில், அதில் ஒரு நிறுவனமான Knorr-Bremse சென்னையில் உள்ள நிறுவனம் என்றும் அதனுடன் ஜெர்மனியில் போய் ஒப்பந்தமா என நயினார் கேட்டிருப்பது, தொழில்துறை சார்ந்த அவருடைய புரிதல் எவ்வளவு குழந்தைத்தனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது. Knorr Bremse 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில் திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் அவர்களது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகம் துவங்கப்பட்டது.
தற்போது 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் அவர்களது முதல் ரெயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய உயர் தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும் !
மகாராஷ்டிரா பா.ஜ.க. முதலமைச்சர் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் இருந்து 15 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார் என்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர்.
தேவையில்லாமல் வாயை கொடுத்து இவரும் மாட்டிகொள்கிறார், அவரது தோழர்களையும் மாட்டி விடுகிறார். டாவோஸ் நகரிலிருந்து மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் அதுவும் அவர்களது தலைநகரமான மும்பையிலேயே உள்ள reliance நிறுவனத்தோடு வீடியோ கான்பரன்சில் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட கதைகளை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அறிந்துகொள்வது நல்லது. டாவோசில் அமர்ந்து இந்தியாவை சேர்ந்த reliance நிறுவனத்துடன் video conference மூலம் MoU போடும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நாடு அறியும். திராவிட மாடல் அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒருபோதும் இது போன்ற சில்லறை வேலைகளை செய்வதில்லை.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பதையும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்து சாதனை படைத்திருப்பதையும் பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசே புள்ளிவிவர அறிக்கையுடன் சான்றிதழ் தந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கை இனியாவது கைவிட்டு, உண்மைத் தரவுகளை அறிந்துகொள்ள ஓரளவாவது முயற்சி எடுக்குமாறு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு பொருளாதரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.
- வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.
ஜெர்மனியில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* ஜெர்மனி உடனான பொருளாதார உறவை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள்.
* வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.
* தமிழ்நாடு பொருளாதரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.
* நவீன உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பத்தில் ஜெர்மனி வலிமையாக உள்ளது.
* 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு கொண்ட மாநிலத்திற்கு தொழில் தொடங்க அழைக்கிறேன்.
* பொருளாதாரத்தில் தமிழ்நாடு- ஜெர்மனி இடையே பாலம் அமைக்கவே தான் வந்துள்ளேன்.
* தொழில்துறையில் ஐரோப்பாவின் முதுகெலும்பாக ஜெர்மனி உள்ளது.
* தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய வருவோருக்கு உகந்த சூழல் உறுதி செய்யப்படும்.
* Made in Tamilnadu என்பது தரமும் திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகி உள்ளது.
* ஜெர்மனியின் துல்லியத்தையும் தமிழ்நாட்டின் ஆற்றலையும் ஒன்றிணைத்தால் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க முடியும்.
* 54 லட்சம் MSME நிறுவனங்கள், முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.
- உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
TNRising என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவை 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகனங்களின் உதிரிபாகங்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஜெர்மனி வருகையின் போது மொத்தம், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிட மாடல் அரசு உரையாடல்களை உறுதிமொழிகளாகவும் நம்பிக்கையை உறுதியான வளர்ச்சியாகவும் மாற்றுகிறது என்று கூறியுள்ளார்.






