என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன.
    • தி.மு.க. வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அவரவர் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடுகளை முடிக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கட்சியின் பலம் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட கூட்டணி பலம் மிகவும் முக்கியம். அப்போதுதான் நமது கொள்கை பகைவர்களை வீழ்த்த முடியும்.

    வி.சி.க.வுக்கு தனியாக சின்னம் இல்லை. புதிதாக ஒரு சின்னத்தை நினைவூட்டி இறுதிவரை வழி காட்டுவது கடினம். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றால், அது தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்கு வங்கியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்.

    எனவே, வி.சி.க. என்னும் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் வாக்கு வங்கி இருந்ததால் சிதம்பரத்தில் பானை சின்னத்திலும் போட்டியிட்டோம். அதன் பின், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்த சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு வங்கியை உறுதி செய்தோம். எந்தச் சின்னத்தில் போட்டி என்பது பேச்சுவார்த்தையில் தெரியும். சாதிவன்முறை, பெண்கள் தொடர்பான பிரச்சினை, மொழி, இனம் அடிப்படையிலான பிரச்சினை, வர்க்கப் பிரச்சினைகள் எனப் பல தளங்களிலும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது. தி.மு.க.வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது. அந்த புள்ளியில் தி.மு.க.வு டன் வி.சி.க. நீடிக்கிறது.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கற்பனை கூட செய்ய முடியாது. மாநிலங்கள் இருக்காது, தேர்தல் இருக்காது, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் இருக்காது. ஒன் இந்தியா, ஒன் நேசன், ஒன் கல்ச்சர், ஒன் எலக்சன். ஒன் பார்ட்டி என ஆபத்தான நிலையை இந்தியா எட்டும்.

    இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

    • 3 கட்சிகளும் தொகுதி விருப்பப்பட்டியலை தி.மு.க.விடம் இன்று வழங்குகிறார்கள்.
    • கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி இன்று மாலையில் தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மதியம் 3 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் 5 மணிக்கு கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதே போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்த முறை அதே தொகுதிகள் ஒதுக்கப்படுமா? அல்லது தொகுதி மாற்றி கொடுக்கப்படுமா? என்பது இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் தெரியவரும்.

    இதற்காக 3 கட்சிகளும் தொகுதி விருப்பப்பட்டியலை தி.மு.க.விடம் இன்று வழங்குகிறார்கள்.

    • கவர்னரின் அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.
    • உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை கவர்னர் சட்டசபையில் அமர்ந்திருந்தார்.

    சென்னை:

    சட்டசபை விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    * அரசின் உரை தவறானதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தது.

    * தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக முன்கூட்டியே அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    * கவர்னர் உரை என்பது அரசின் கொள்கை, சாதனைகளாக இருக்க வேண்டும். அரசியல் கருத்தாகவோ தவறாகவோ இருக்க கூடாது.

    * கவர்னரின் அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.

    * அரசிடம் இருந்து கவர்னர் உரைக்கான அறிக்கையானது பிப்.9-ந்தேதி கிடைத்தது.

    * உரையில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தன.

    * தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    * சட்டசபையில் முதல்வர், சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு திருக்குறளையும் கவர்னர் வாசித்தார்.

    * அவைக்கு மரியாதை அளித்ததோடு, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

    * அரசியலமைப்பு சட்டப்படி அதற்கு மேலாக, கவர்னரால் உரையை வாசிக்க முடியவில்லை.

    * உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை கவர்னர் சட்டசபையில் அமர்ந்திருந்தார்.

    * சபாநாயகர் தனது உரையை முடித்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும் என கவர்னர் எழுந்தார்.

    * ஆனால் அவை நடவடிக்கைக்கு மாறாக கோட்சே உள்ளிட்ட பெயர்களை சபாநாயகர் வாசிக்க தொடங்கினார்.

    * சபாநாயகரின் பேச்சானது அவரின் பதவியின் மாண்புக்கும், அவை மரபுக்கும் பொருத்தமானதாக இல்லை.

    * சபாநாயகரின் செயல்பாடு, அவையின் மாண்பை குறைத்துவிட்டது.

    * அவை மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் கவர்னர் வெளியேறினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.
    • ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

    மேல்பட்டி:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமம் தாசராபள்ளி கொல்லை மேடுவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), முன்னாள் ராணுவ வீரர்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி தேன்மொழி, 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    வெங்கடேசன் தனது வீட்டின் அருகேயுள்ள, தனக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகிறார்.

    இவர்களின் விவசாய நிலம் ஆந்திர மாநிலம் தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை ஒட்டி உள்ளது.

    அந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தமிழக எல்லையில் உள்ள பரதராமிக்கு, வெங்கடேசன் நிலத்தின் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலாம்பள்ளியை சேர்ந்தவர்கள், வெங்கடேசனின் நிலத்தின் வழியாக அத்துமீறி சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.


    இது சம்பந்தமாக வெங்கடேசன் மற்றும் எதிர் தரப்பினரை பரதராமி போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து வெங்கடேசன் தனது விவசாய நிலத்தை சுற்றி வேலி அமைத்தார். இதனால் ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை சேர்ந்த சிலர், வெங்கடேசன் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.

    இது குறித்து தகவல் அறிந்த பரதராமி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் வெங்கடேசன் தனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

    முன்னாள் ராணுவ வீரர் வீட்டை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.
    • பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.45 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி 9.55 மணிக்கு வந்தார். அவருக்கும் பேண்டு வாத்தியம் முழங்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்பட்டார். கவர்னர் சபைக்குள் வந்ததும் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.



    தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

    2022-2023-ம் ஆண்டில் 7.24 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொறுத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம்பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவில் மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

    ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

    6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்தி காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

    அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.

    மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.

    ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

    மத்திய அரசு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

    நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    முதலமைச்சரின் கனவுத் திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண்துறை சாதனை படைத்துள்ளது.

    வரலாற்றிலேயே முதல் முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.

    2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.

    மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித் திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.

    மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.

    3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.

    ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயற்கை பேரிடரால் பாதித்த 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 6.63 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000 வழங்கப்பட்டது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம்-2024 எனும் சட்ட முன்வடிவை நடப்பு கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

    அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது.

    கிண்டியில் 1000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ரூ.240 கோடி செலவில் அரசு கொண்டு வந்து சானை புரிந்துள்ளது.

    ஸ்டார்ட் அப் இந்தியா 2022 தரவரிசையில் நம் மாநிலம் சிறந்த செயலாற்றும் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு இணைய வசதி தற்சார்பு தெழிலாளர்கள் நல வாரியத்தை தொடங்கி உள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3059 கி.மீ. நீள சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.4861 கோடி செலவிலும் 187 பாலங்கள் கட்டுமான பணிகளை ரூ.553 கோடி செலவிலும் இந்த அரசு நடப்பாண்டில் மேற்கொண்டு வருகிறது.

    விடுதிகளில் மாதாந்திர உணவுக் கட்டணத்தை பள்ளி மாணவர்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆகவும் அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 1.71 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் திருக்குறளை வாசித்துவிட்டு சில கருத்துக்களை பேச தொடங்கினார்.
    • அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு அவைக்கு வந்தார். அவர் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேச தொடங்கினார்.

    மதிப்பிற்குரிய சட்டப்பேரவை தலைவர் அவர்களே! மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை அலுவலர்களே, நண்பர்களே, தமிழக சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு உரையை வாசிக்க தொடங்கினார்.

    அப்போது அவர் ஒரு திருக்குறளை வாசித்துவிட்டு சில கருத்துக்களை பேச தொடங்கினார். இந்த அவையில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும். அதை கடைபிடிக்கவில்லை. கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை.

    எனவே உரையை படிக்க விரும்பவில்லை. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியவில்லை.

    இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து அரசின் உரையை வாசிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி என்று கூறி தனது உரையை 4 நிமிடங்களுக்குள் முடித்துக்கொண்டார்.

    அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்த சம்பவம் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழக கவர்னர் அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்து இருந்தது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். 

    • கடந்த 7-ந் தேதி முதல் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் பணி தொடங்கியது.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தண்ணீரை திறந்து வைத்தார்.

    உடுமலை:

    பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,), கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 4ம் மண்டல பாசனத்திற்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி முதல் கடந்த ஜனவரி 13-ந்தேதி வரை நீர் வழங்கப்பட்டது. இதனையடுத்து பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நீர் திறக்க திட்டக்குழு சார்பில் வலியுறுத்த ப்பட்டது.

    கடந்த 7-ந் தேதி முதல் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் முதல் மண்டல பாசனத்துக்கு இன்று முதல் மே 22-ந் தேதி வரை 100 நாட்களுக்கு, உரிய இடைவெளிவிட்டு,2½ சுற்றுக்கள் அடிப்படையில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவிட்டது.

    அதே போல், பாலாறு படுகை, பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, தளிகால்வாய், ஏழு குளம் பாசனத்திலுள்ள 2,786 ஏக்கர் நிலங்களுக்கு இன்று முதல் மே 31-ந் தேதி வரை, நீர் திறக்கவும் அரசு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று காலை திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் 250 கன அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தண்ணீரை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி அளவிற்கு அதிகரித்து வழங்கப்படும். மேலும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தளி வாய்க்காலில் 20 கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் ஆகிய வட்டங்கள், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தம் 94,521 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.

    விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து நீர் பங்கீட்டு பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார். அப்போது செயற்பொறியாளர்கள் மகேந்திரன், காஞ்சித்துரை (ஆழியாறு வடிநிலகோட்டம்) மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம்.
    • தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

    சென்னை:

    சட்டமன்ற பேரவையில் இன்று கவர்னர் உரை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் உரையோடு சட்டமன்ற பேரவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தரப்பட்டு, ஜனநாயகத்தை மதிக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரை முறைப்படி அழைத்து இன்று சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தைக் கூட்டினார்.

    கேரள கவர்னர் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டுச் சென்றுவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டின் கவர்னர், கவர்னர் உரையிலிருந்து பேசாமல் தனது சொந்த சில கருத்துகளை பேசிவிட்டு அமர்ந்து விட்டார்.

    தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

    ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய கவர்னர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக் கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நிச்சயமாக கவர்னரின் நடவடிக்கைகள், வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் இன்று அவர் பதிலளித்திருக்கிறார். ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    அவருக்கு கொடுத்த உரையில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். உரையில், உண்மைக்கு மாறாக இருக்கிறது, சரியாக இல்லை என்று அவர் கூறினால் அதற்கு விளக்கம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு அனைத்து விதத்திலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு நாங்கள் சொல்லுகின்றபோது, அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும், அதனைத் தாங்கிக் கொள்கிற சக்தியும் கவர்னருக்கு இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

    தான் ஒரு மாநிலத்தின் தலைவராக, தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது, தேசிய அளவில், தமிழ்நாட்டின் ஜி.டி.பி. உயர்ந்திருக்கிறது.

    விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு வந்திருக்கிறோம், பல துறைகளில் முதலிடத்திற்கு வந்துள்ளோம், இவற்றையெல்லாம் கவர்னர் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளவோ, படிக்கவோ மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லாமல், பொய்யான கருத்துகளை தெரிவித்து, தனக்கு ஏற்றாற்போல அவர் படித்திருக்கின்றார்.

    தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். கவர்னர் விளக்கம் கேட்டிருந்தால் நிச்சயமாகக் கொடுத்திருப்போம்.



    ஆனால், அவர் ஏதும் விளக்கங்கள் கேட்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கவர்னர் என்ற அந்தப் பதவிக்கு ஜனநாயகத்தில் நாம் உரிய மரியாதை தர வேண்டும் என்று மதிப்புக் கொடுக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான், இன்று நடைபெற்ற இத்தனை நிகழ்வுகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.

    தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற கவர்னர் நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் உரையை படிக்கின்றவரை அங்கேயே பொறுமையோடு இருந்தவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம், சபாநாயகர் தமிழில் பேசுவது என்னவென்று அவருக்குத் தெரியாது. ஆனால், சபாநாயகர் பேசும்போது, திடீரென்று கவர்னர் எழுந்து சென்று விட்டார். இரண்டு நிமிடம் பொறுத்திருந்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்பு உரிய மரியாதையோடு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் மரியாதையை அவரே தவற விடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும்.
    • மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப்பேரவையில் நடந்து கொண்டுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் கவர்னர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் கவர்னர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பதென்பது ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி அவர்கள் நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியலமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி அவர்கள் எந்த அடிப்படையில் கவர்னர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் கவர்னர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும்கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன.

    ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் மூலம் இங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் வகிக்கும் கவர்னர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய போக்குள்ள அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருப்பதே தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

    "கவர்னர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். ஒன்றிய அரசால் கவர்னர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் கவர்னர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் கவர்னர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

    மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே கவர்னர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன.

    'இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் கவர்னர் பதவி ஒழிக்கப்படும்' என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம்.
    • தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    திருச்சி:

    திருச்சி மத்திய மண்டல ம.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில், கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது இதுவே முதல் முறை. தமிழ் தாய் வாழ்த்து பாடியதை தொடர்ந்து உரையும், நிறைவாக தேசிய கீதம் பாடுவதை அவர் முரண்பாடு என்கிறார்.

    அவரைப் பொறுத்தமட்டில் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என விரும்புகிறார்.

    கடந்த முறை தலைவர்கள் காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் பெயரை தவிர்த்து உரையை வாசித்தார். அதற்காக விளக்கத்தை கவனத்தில் அளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் செய்து வருகிறார்.

    அவருக்கு கவர்னராக இருப்பதற்கான அடிப்படை தகுதி இல்லை. பா.ஜ.க., அரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார்.

    தமிழகம் மட்டுமின்றி பா.ஜ.க. அல்லாத கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகளிலும் பா.ஜ.க அரசின் தலையீடு உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக, நெருடல் எதுவும் இல்லாமல் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம்.

    நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. கூறுவதும் தமிழ்நாட்டில் 20 சதவீத வாக்குகளை வாங்குவோம் என்று கூப்பிட்டாங்க சொல்வதும் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்வார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, எரி பொருள் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் பாஜக அரசு நிறைவேற்றப்படவில்லை. எரிபொருளுள் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் காரணம்.

    பல விஷயங்களில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பதால், பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம். கட்சித் தலைமையும் கூட்டணி தலைமையும் ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன்.

    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி கேட்டிருக்கிறோம்.

    இன்னும் 10 நாட்களில் திமுக இறுதி முடிவு எடுக்கும். இந்த தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இதில் நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.
    • சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன.

    சென்னை:

    மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது.

    பனியும் குளிரும் குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இனி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

    கொசுக்கள் உற்பத்தியும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த பணியை இந்த மாதம் இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    சென்னையில் 248 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் பாதைகள் உள்ளன. இவற்றில் 'டிரோன் மூலம் கொசு மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கப்பட உள்ளது. 6 டிரோன்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல், மழையால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலைகளில் படகுகளில் சென்று குப்பைகளை அகற்றுதல், ஆகாய தாமரை அகற்றப்படும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும்.

    இது தவிர 3,300 பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது. வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.

    மேலும் கொசுக்கள் உற்பத்தி யாகும் மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை திறந்து கொசு மருந்து அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில் கொசுக்கள் இன்னும் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதனால் அவற்றை தொடர்ந்து மருந்து அடிப்பதன் மூலம் ஒழிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன. தற்போது கூடு தலாக 600 கால்வாய்கள் கட்டப்பட்டு மொத்தம் 2,200 கால்வாய் கள் வழியாக மழைநீர் வெளியேறுகிறது.

    மழைக் காலங்களில் கொசு பொதுவாக பெருகுவது இல்லை. மழை முடிந்த பிறகு தான் அதிகளவில் உற்பத்தியாகும். மழை நீர் கால்வாய்களின் மூலம் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    மழை நீர் கால்வாய்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டல்கள், டீக்கடைகள், தொழில் நிறுவனங்களின் கழிவு நீர் மழைநீர் கால்வாய்களில் விடப்படுவதால் மழை இல்லாத காலத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக அமைகிறது.

    எனவே மழைநீர் கால் வாய்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தினால் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க முடியும். மாநகராட்சி அதிகாரிகள் மழை நீர் கால்வாய்களையும் இக்காலக் கட்டத்தில் கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார்.
    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா நேற்று சென்னை வந்தார். தங்கசாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதன் பிறகு அவர் டெல்லி புறப்படும் முன்பு தோழமைக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்காகவே வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார். நட்டாவை சந்திக்க அவர் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை நட்டா அழைக்கவில்லை.

    பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமை பெறவில்லை.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சை சந்தித்து பேசினால் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அடுத்தடுத்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை நட்டா சந்திக்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.

    ×