என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார்.
    • எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி நேற்று கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சனை புகார் அளித்திருந்த நிலையில், இன்று கணவர் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் ஸ்ருதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

    1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார் அளித்திருந்த நிலையில் சதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

    அந்த புகாரில், "எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் பணத்தை பறிப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான புகாரை தனது மனைவி கொடுத்துள்ளார் என சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், "கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு தாங்கள் பிரிந்த நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தன் மீது பொய்யான புகார் தெரிவித்து வரும் ஸ்ருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் சதீஷ் குமார் கூறியுள்ளார்.

    • சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எழிலன் எம்.எல்.ஏ., வள்ளுவர் கோட்டத்தின் புனரமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்காக கடந்த 1974-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    மேலும், சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும் 67 மீட்டர் நீலம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவு கூடம், விற்பனை கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சி கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால் முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் முதலமைச்சர் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது.
    • டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    திருச்சி:

    காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் டெல்டாவில் நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திருச்சி மொத்த மார்க்கெட்டில் 26 கிலோ எடை கொண்ட மணச்சநல்லூர் பொன்னி அரிசி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 1290க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு அதன் விலை ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது.

    சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று அட்சயா பொன்னியின் விலை ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று இட்லி அரிசி உள்பட அனைத்து வகையான அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது.

    திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக திருச்சியில் மணச்சநல்லூர் பொன்னி ரூ. 1500 க்கு கிடைக்கிறது. இதுவே சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.1600 முதல், ரூ. 1700 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றத்திற்கு டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    இது தொடர்பாக திருச்சி உறையூர் கற்பகம் அரிசி மண்டி உரிமையாளர் குணசேகரன் கூறும்போது, திருச்சியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு முன்பெல்லாம் பெங்களூரில் இருந்து அதிக அளவு நெல் வரும்.

    தற்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கிருந்து வரும் நெல் வரத்து சரிந்துவிட்டது. காவிரி டெல்டாவிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி உற்பத்தி குறைந்து விலை உயர்ந்து விட்டது என்றார்.

    மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறும் போது, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும்.

    காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

    அதிலும் திருச்சி, கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 5 சதவீதம் கூட சம்பா சாகுபடி செய்யப்படவில்லை. 1890க்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் காவிரியில் 50,000 ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

    அதன் பின்னர் 1924 களில் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டது.

    ஆனால் இன்றைக்கு கர்நாடகா காவிரியின் குறுக்கே 5 அணைகள், 30 ஆயிரம் ஏரிகள் அமைத்ததால் 30 லட்சம் ஏக்கரில் அங்கு சம்பா பயிரிட்டுள்ளார்கள். காவிரி டெல்டாவில் முன்பெல்லாம் முப்போக சாகுபடி இருக்கும்.

    இப்போது ஒரு போகத்திற்கு விவசாயிகள் தள்ளாடுகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடியும் சுருங்கிவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.

    இதற்கிடையே அரிசி ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், நடப்பு ஆண்டில் அதிகளவு சாப்பாட்டு அரிசியான சன்ன ரக நெல்களை அரிசி உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

    இதனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் சரிந்துள்ளது.

    இந்த கால கட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசின் கையிருப்பில் பல லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இப்போது 50 ஆயிரம் டன் நெல் இருப்பு இருக்குமா என்பது கூட சந்தேகமாக உள்ளது. ஆகவே வருங்காலத்தில் ரேசன் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலும், நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டு வந்த காரணத்தாலும் தனியார் அரிசி ஆலை அதிபர்கள் நெல்லை பதுக்கி உள்ளனர். ஆகவே வருங்காலங்களில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

    • நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை.
    • ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்து இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் கருணாநிதி நினைவிடம் திறப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர்; நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்து இருக்கிறது. தலைவர் கலைஞரின் நினைவிடம் மட்டுமல்ல; தலைவர் கலைஞரை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    அப்படிப் புதுப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும், தலைவர் கலைஞரின் புதிய நினைவிடமும் வருகிற 26-ந் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்து இருக்கிறோம்.

    ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத் தலைவர் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்கள் மூலமாக அழைப்பு விடுத்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
    • காலவரையின்றி சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதன் பின்னர் 3 நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி பொது பட்ஜெட்டும், 20-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. காலவரையின்றி சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம், வேலுமணி ஆகிய 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.

    டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம், வேலுமணி ஆகிய 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேச முற்பட்டார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேசுவதற்கு பா.ம.க. அனுமதி கோரியது.

    அதன்மீது பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அவரது பேச்சும் அவை குறிப்பில் ஏறாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் விரிவாக விளக்கம் அளித்தார். இருப்பினும், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். 

    • வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

    தொடர்ந்து, மணற்கேணி இணையம் இனி கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மணற்கேணி செயலியார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    அதேபோல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஒரு கான்செப்ட் எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். தனியார் பள்ளி கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தார்கள். அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறது.

    வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்றரை லட்சம் கோடி தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் 44 ஆயிரம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளில் பந்தல் அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும் தயாராக உள்ளது.

    ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் ஒவ்வொரு முறையும், செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நிதி நிலைமை சீர் அடையும் போது அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்.
    • வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் இளைஞர் படை அதிகம் உள்ள கட்சி அ.ம.மு.க. ஜெயலலிதாவின் கொள்கைகளை நூற்றாண்டுகளுக்கு எடுத்துரைப்பதே எங்களின் லட்சியம். தேர்தல் வெற்றி, தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் கொள்கையை தாங்கி பிடிப்போம். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள்.

    எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும். கவர்னரின் தயவினால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தப்பித்து வருகின்றனர். அவர்களை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள்.

    எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக சீர்கேட்டினாலும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும் நினைத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.விற்கு வெற்றிக்கனியை தந்தனர். வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ஏமாற்று திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது.

    மகளிர் உரிமை திட்டம் தகுதியான பலருக்கும் கிடைக்கவில்லை. சிறு-குறு தொழில் முனைவோர் கடுமையான மின்கட்டண உயர்வால் திணறி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் ரத்தாகி உள்ளது. அரசின் கடன் சுமையை குறைப்போம் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி மறக்கப்பட்டு கடன் சுமை அதிகரித்துள்ளது.

    கூட்டணி பலத்தால் வெற்றியாளர்களை போல் காட்டி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.க. உள்ளது. அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும். வருகிற தேர்தலில் தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதே அ.ம.மு.க. வின் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
    • கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த 2-ந் தேதி அரசியல் கட்சி தொடங்கினார்.

    இதையடுத்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதற்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் செயல்பட உள்ளது. தற்போது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட, மாநகர், நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற உள்ளது.

    கட்சியின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கட்சி பதவிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதலில் மகளிர் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக மாவட்ட சட்டமன்ற வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த பணிகள் தொடர்பாக தமிழகம், புதுச்சேரி நிர்வாகிகளை விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் அடிக்கடி தொடர்பு கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியை வேகப்படுத்தி வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் உறுப்பினர்கள் சேர்க்கைகளில் கட்சி தொண்டர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், செல்போன் நம்பர் ஆகியவை இணைக்கப்பட உள்ளது.

    • பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.
    • உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

    சாதிவாரி கணக்கெடுப்பு கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம். இந்த விளக்கத்திற்கு பின்னரும் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.
    • தற்போது 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு கடந்த 6-ந்தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,021 மருத்துவ பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அந்த 1021 மருத்துவர்களும் 15 நாட்கள் கால அவகாசத்துக்குள் பணியில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் 90 சதவிகிதத்திற்கு மேலான மருத்துவர்கள் தற்போது தமது பணியிடங்களுக்குச் சென்று பணியினைமேற்கொண்டிருக்கிறார்கள்.


    அதே போல் கடந்த 11-ந்தேதி 977 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கும் 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த துறையில் காலியாக இருக்கிற ஆய்வக நுட்புனர்கள் பணியிடங்கள் 332 நிரப்புவதற்குறிய நடவடிக்கைகளை மருத்துவணியாளர் தேர்வாணையம் முடித்து பொது சுகாதாரத் துறைக்கு பட்டியல் அனுப்பியது. இந்த துறையில் கடந்த 3 நிகழ்வுகளாக இந்தியாவிலேயே முதல்முறையாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு என்கின்ற வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிநியன ஆணைகள் வழங்கப்பட்டது.

    தற்போது 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம். பணி ஆணைகளை பெறும்போது அவரவர் சொந்த பகுதிகளிலேயே பணி ஆணை கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இன்னமும் இந்த துறையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில் 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம் 5,100 பேரை தேர்வு செய்வதற்குரிய பணிகளை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் செய்துக் கொண்டிருக்கிறது. அப்பணிகளும் இறுதி நிலைக்கு வந்துள்ளது. அந்த வழக்குகளையெல்லாம் நமது துறையின் செயலாளர் அவர்கள் நல்ல தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகிறார். 5,100 பணியிடங்களும் ஒரு மாத காலத்திற்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பணி ஆணை பெற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு வரை அதே இடத்தில் தான் பணிபுரிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×