என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஃபெஞ்சல் புயல் வலுவிழந்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை முழுமையாக கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.

    இதன் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், மூன்று மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 11 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்கால் ஆகிய 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை தவிர திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, நீலகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
    • விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னுடைய கடமை.

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது.

    இதுமட்டுமன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது.

    "குற்றச்சாட்டு வைப்பதே எனக்கு வேலையாக போய்விட்டது" என்று கூறும் மு.க.ஸ்டாலின் - விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னுடைய கடமை.

    அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை.

    அதை செய்யாத, தனக்கு எந்த திறமையும் இல்லாத ஒரு முதலமைச்சரிடம் இப்படிப்பட்ட மடைமாற்றும் பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும்.

    திமுகவிடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையோ எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும், ஸ்டாலினின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுகளே அதற்கான மிகப்பெரிய சான்றாக அமைகிறது .

    நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள்; இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள்.

    ஆட்சி இருக்கிறது என்ற ஆணவச் செருக்கில் நீங்கள் பேசும் திமிர் பேச்சிற்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்! என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் மிக அதிக அளவாக திண்டிவனத்தில் 37.40 செ.மீ மழை பெய்திருக்கிறது.
    • புதுச்சேரி யூனியன் பிரதேசம் தான் புயலால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது பெய்த கடுமையான மழையால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும், புதுவையிலும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் பாதிப்புகளைக் களைய மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் மிக அதிக அளவாக திண்டிவனத்தில் 37.40 செ.மீ மழை பெய்திருக்கிறது. நேமூர் 35.20 செ.மீ, வல்லம் 32 செ.மீ. செம்மேடு 31 செ.மீ, வானூர் 24 செ.மீ மழை பெய்திருக்கிறது. இதனால், திண்டிவனம், மயிலம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திண்டிவனம் நகரத்தில் கிடங்கல் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வீடூர் அணையிலிருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் அப்பகுதியிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. பயிர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    மழையால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பாதிப்புகளுக்கு அரசின் அலட்சியமும், செயலற்ற தன்மையும் தான் காரணம் ஆகும். திண்டிவனம் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடிகால்கள் தூர்வாரப்படாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசுத் தரப்பில் போதிய உதவிகள் வழங்கப்படாததால், சில இடங்களில் உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    புதுவை, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கோட்டக்குப்பத்தில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியிருப்பதால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை - வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு உழவர்களுக்கும், பொதுவான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்கும் உரிய இழப்பீடுகளை வழங்க தமிழக அரசு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசம் தான் புயலால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. புதுச்சேரி நகரத்தில் மட்டும் 47 செ.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மாநில அரசின் சார்பில் உணவு வழங்குவதைத் தவிர ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியைக் கோர வேண்டும். மழை மற்றும் புயல் காற்றால் விழுந்துள்ள தென்னை மரங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற பயிர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • லண்டனில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
    • அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.

    லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    லண்டன் சென்று படிப்பதற்கு அனுமதி அளித்த பாஜகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்தியாவின் மீது அறிஞர்கள் வைத்துள்ள மரியாதையை லண்டனில் கண்கூடாக பார்க்க முடிந்தது.

    அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.

    தவெக தலைவர் விஜய் தனது கருத்துகளை மக்கள் முன்பு வைக்கும்போது நாங்களும் கருத்து கூறுவோம். விஜயை கேள்வி கேட்கும் நேரத்தில் நாங்கள் நிச்சயமாக கேள்வி கேட்போம்.

    விஜயின் சித்தாந்தங்கள் திராவிட கட்சிகளை போன்று தான் உள்ளது. தவெக மாநாட்டுக்குப் பின் எத்தனை முறை விஜய் வெளியே வந்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கொண்டாடுவது ஆச்சரியம் அளிக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை தியாகி போல் கொண்டாடுவதா ?

    துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக பாராட்டுவோம்.

    2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் நிச்சயமாக சரித்திர தேர்தலாக இருக்கும்.

    தமிழக பாஜகவில் கடந்த 3 மாதமாக நிறைய வேலைகள் நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கழுதை பாலை விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்ப்பமான பெண் கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கழுதை நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்த கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (43). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.

    கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார்.

    இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதை பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல ஆனந்த் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. அங்கிருந்த அனைத்து கழுதைகள் மீதும் ரத்தம் தெளித்து இருந்துள்ளது.

    உடனே அவர் கொட்டாகைக்கு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் கழுதையின் கழுத்தை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் தலையை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆனந்த் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஓசூர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் கொட்டகைக்கு வந்த மர்ம நபர்கள் பெண் கழுதையின் கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் பின்னர் கழுதையின் கழுத்தை கத்தியால் அறுத்து தலையை எடுத்து சென்றுள்ளனர்.

    நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று உள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • 3-வது நாளாக இன்றும் கடல் உள்வாங்கி காணப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பரிகார பூஜைகள் செய்து செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருவதால் கோவில் கடற்கரை, கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.


    இதற்கிடையே அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் முதலே கடல் உள்வாங்கி காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக சுமார் 80 அடி வரை கடல் உள்வாங்கி இருந்ததது. இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடற்பாசிகள் வெளியே தெரிந்தது.

    • பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப் பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்கின்றனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், அடிவாரம், கிரிவீதி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர்.

    மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் வரிசையில் காத்திருந்து முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த போதிய அளவு இடம் இல்லாததால் சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்கும் விதமாக கொடைக்கானல் செல்லும் சாலையில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 

    • தண்ணீர் தேங்க முடியாத அளவுக்கு இடையூறுகளை செய்து வருகின்றது.
    • போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் கேரள அரசு அணை பலவீனம் அடைந்துவிட்டதாக கூறி புது அணை கட்டவேண்டும் என தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.

    தற்போது முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து பல்வேறு பணிகளை தொடங்கி உள்ளனர். ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்தம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்க முடியாத அளவுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றது.

    மேலும் தமிழக அதிகாரிகள் அணை பராமரிப்புக்கு செல்ல விடாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர்.

    எனவே முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளை விட்டு கேரள அரசு வெளியேற வேண்டும் என கோரி இன்று தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள மாநில எல்லையான லோயர் கேம்ப்பில் பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினர் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • 2 தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார், தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது36), கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்தவர் ஜெயராமன் (74), வீரக்கல் கும்மம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (49) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக 2 யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
    • மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

    சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் புயல், மழை வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், சேகர்பாபு, உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    அதிகளவில் மழை பெய்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

    முதலமைச்சருடன் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, சிவசங்கர் உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனை மேற்கொண்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னையில் 32 நிவாரண முகாம்களில் 1,018 பேர் தங்க வைக்கப்பட்டு அனைத்து தேவையும் செய்து கொடுக்கப்பட்டன.

    * சென்னையில் 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    * புயல் கரையை கடந்த நிலையில் மழை வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * எதையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

    * வரலாறு காணாத மழையால் விழுப்புரம் மீட்பு பணியில் அமைச்சர் பொன்முடியுடன் செந்தில் பாலாஜி, சிவசங்கர் இணைந்துள்ளனர்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    * புயல், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தவற்காக மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும்.

    * மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

    * புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர் பாதிப்பு குறித்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறினார்.

    • வருகிற 5-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம்.
    • சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்கேற்ப, மக்களுக்கான நலத் திட்டங்களை வழங்கி கண் இமை போல் மக்களைக் காத்து தன்னையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கி, இன்றளவும் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு 8-ம் ஆண்டு நினைவு நாளான 05-12-2024 (வியாழக்கிழமை) காலை 10-30 மணியளவில் சேப்பாக்கம், அரசு விருந்தினர் இல்லத்திலிருந்து ஊர்வாமாக புறப்பட்டு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துவார்.

    இதன் தொடர்ச்சியாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்துவார்கள். இதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும்

    மேற்படி நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி வட்ட கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு அம்மா அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது.
    • பக்கிங்காம் கால்வாய்க்கு வெள்ளப்பெருக்கு அபாயம்.

    மாமல்லபுரம்:

    ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இருந்தே காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றில் கடற்கரை கோயில் வடபகுதி கடற்கரை ஓரம் உள்ள கூறை உணவகம் ஒன்று சரிந்து விழுந்தது அதிஷ்டவசமாக ஊழியர்கள் அங்கு தங்காததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    பூஞ்சேரி, பொதுப்பணித்துறை சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம், வெண்புருஷம், தேவநேரி, தனியார் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.


    தகவலறிந்த தீயணைப்பு படை, பேரிடர் மீட்பு படை, பேரூராட்சி ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    அண்ணாநகர், சூளைமேடு, எடையூர், வடக்கு மாமல்லபுரம், பகுதி குடியிருப்புகள் அருகே மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள சிற்பக் கூடங்களுக்குள் மழைநீர் புகுந்தது.

    இன்று காலை காற்றும், மழையும் இன்றி இயல்பு நிலை திரும்பி உள்ளதால், வழக்கம் போல் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் பகுதிகளில் வாகனங்கள் சென்று வருகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்திற்கு சென்னை மாநகர, அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக மரங்கள் விழுந்து உள்ளதால் பாண்டிச்சேரி வழியாக சென்னை வரும் வாகனங்கள் தற்போது குறைந்த அளவில் இயக்கப்படுவதால் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது. மாமல்லபுரம் நகர வீதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்து குப்பைக் காடாக கிடந்த பகுதிகளை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். காலையில் குடிநீர் தடை வராமல் இருக்க ஜெனரேட்டர் வைத்து குடிநீர் மோட்டார்கள் இயக்கப்பட்டது.

    சென்னை, புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய்க்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை நின்று வெயில் அடிக்க துவங்கியதால் விடுமுறை நாளான இன்று மாமல்லபுரத்திற்கு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×