என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அழைப்பாணை அனுப்ப திட்டம்.
    • ஒன்றுபட்ட அ.திமு.க. வை தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

    சென்னை:

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.

    அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.

    அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

    இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெயலலிதா மறைந்த பின்னர் 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை அவருக்கே ஒதுக்கியது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து ஏற்படுமோ? என்கிற அச்சம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவு வக்கீல் ஒருவர் கூறும் போது, தேர்தல் ஆணையம் நடத்தும் விசாரணையில் நல்ல முடிவு எட்டப்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்றுபட்ட அ.திமு.க. வை தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அ.தி.மு.க. வக்கீல்களோ இதனை மறுத்துள்ளனர். ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எல்லை மீறும் அளவுக்கு மூக்கை நுழைத்து செயல்பட முடியாது.

    கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டு அது 2 அணியாக செயல்பட்டால் மட்டுமே யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கண்டறியலாம். அதில் பெரும்பான்மை உள்ளவர்களிடம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றுள்ள அ.தி.மு.க.வுக்கு ஏற்கனவே இரட்டை இலை சின்னம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது இல்லாதவர்கள் எழுப்பி உள்ள கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல. இரண்டு அணிகள் தற்போது இல்லாத பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் விசாரணை நடத்த முடியாது என்பதே எங்கள் வாதம் என்று தெரிவித்தனர்.

    இருப்பினும் இரட்டை இலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது அரசியல் களத்தில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
    • தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது நாகராஜகண்டிகை கிராமம். இங்கு, மாதர்பாக்கம் செல்லும் சாலையையொட்டி உள்ள முக்கிய நீர் நிலையாக ஓடை கால்வாய் உள்ளது. இந்த நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த கால்வாயில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் செத்து மிதக்கின்றன. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் இவ்வளவு வாத்துக்கள் எப்படி இறந்தன என்பது மர்மமாக உள்ளது. அவை இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

    வாகனங்களில் கிராமம் தோறும் சென்று வாத்து வியாபாரம் செய்திடும் வியாபாரிகள் யாரோ சிலர், தங்களின் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து போன வாத்துக்களை மொத்தமாக கொண்டு வந்து இந்த ஓடைகால்வாயில் வீசினார்களா? அல்லது நீரோடையில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்ததால் மேய்ச்சலுக்கு வந்த வாத்துக்கள் இறந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    ஓடை கால்வாயில் செத்து மிதக்கும் அழுகிய வாத்துகளை அப்புறப்படுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியும், சுகாதார துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மேல கடம்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாபிச்சை. இவரது மகன் நாகராஜன்(வயது 35). இவரது மனைவி ரம்யா(32). நாகராஜன் தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்த நிலையில் அங்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நாகராஜனும், அதே ஊரை சேர்ந்த சுதாகர் என்பவரும் கோவையில் கார் ஓட்டி வருகின்றனர். இதனிடையே ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நாகராஜன் வீட்டுக்கு சுதாகர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    அப்போது சுதாகரிடம் ரம்யா பேசி பழகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன் கடந்த 9ந்தேதி சுதாகரை கத்தியால் குத்தியுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் திரு.வி.க பஸ் நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, பூண்டி, மற்றும் ஆந்திர மாநிலம் காளாஸ்திரி திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் (வயது 59) என்பவர் பஸ் ஏறுவதற்காக வந்தார். அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பஸ்நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அப்துல் சலீம் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், வேடங்கி நல்லூரில் ரூ84 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை.
    • அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே-சி வோட்டர் மூட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    இந்த கருத்துக்கணிப்பின் படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் 3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு 3 சதவீதம் சரிந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.



    கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அ.தி.மு.க. கூட்டணி 23 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

    இந்த நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்து 52 சதவீதம் ஆக அதிகரித்திருக்கும்.

    பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வாக்குகள் 3 சதவீதம் அதிகரித்து 21 சதவீதம் ஆகி இருக்கும். அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது. இதில் தி.மு.க. 22 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இப்போது தேர்தல் வைத்தாலும் அதே நிலை தான் நீடிக்கும். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய், 2026 சட்டசபை தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருப்பார். பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் விஜய் கட்சி ஆகியவை இணைந்து ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே தி.மு.க.வுக்கு சவாலாக மாற முடியும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த மொதிர் ரகுமான் (வயது 37), அவரது மனைவி அஞ்சனா அக்தர் (37) ஆகியோர் வங்கதேசம் டாக்கா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பணியாற்றியது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன.

    முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர் கூட அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்வார்.
    • 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பர்.

    அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவாமல் விடமாட்டேன் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    * தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்கக்கூட முடியாது.

    * தி.மு.க.வை அழிக்க நினைத்தோர் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு.

    * அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர் கூட அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்வார்.

    * ஆணவமாக பேசுவோருக்கு பதிலளிக்கும் வகையில் 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பர்.

    * தி.மு.க. தொண்டர்கள் கூட அரசியலை கரைத்து குடித்தவர்கள். அண்ணாமலை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்களல்ல என்று கூறினார்.

    • விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.
    • அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.

    சிவகங்கை:

    2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தற்போதே தங்கள் களப்பணிகளை தொடங்கியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை, மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா, பூத் கமிட்டி அமைப்பு என்று பம்பரமாக சுழன்று வரும் நிர்வாகிகளுக்கு அந்தந்த கட்சி தலைமையும் ஏராளமான பொறுப்புகளை அள்ளிக்கொடுத்துள்ளது.

    அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சற்று முதல் வரிசையில் உள்ளது. முதலாம் ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடிய கட்சி தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து அதற்கான செயலாளர்களையும், நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார். அதே போல் பல்வேறு அணிகளையும் உருவாக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

    எதிரணியினரின் விமர்சனங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன், த.வெ.க. தலைவர் இரண்டு கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். அப்போது கட்சியின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் சிவகங்கையில் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் அ.தி.மு.க.வுடன், த.வெ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்களில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் விதிமீறல்கள் நடப்பதாகப் புகாா் எழுந்தது. அதேபோல் அந்த பகுதியில் இயங்கிவரும் குவாரியால் கிராமத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மேற்கண்ட கிராமத்தினர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனற்ற நிலையில், போலீஸ் நிலையம், கோர்ட்டு மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இதற்கிடையே கிராம மக்கள் சாா்பில் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வேம்பங்குடி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன் உள்ளிட்டோரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலர் முத்துபாரதி தலைமையில் நகரச் செயலர் தாமரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    அப்போது தி.மு.க. அரசுக்கு எதிராகவும், கிராவல் மண் கொள்ளைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், கிராம மக்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசவே வந்தோம். மாவட்டம் முழுவதும், கிராவல் மண் கொள்ளை நடக்கிறது. அதை அரசு அதிகாரிகள் தடுக்கவில்லை. அமைச்சர்கள் கனிம வள கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தை வெளி நாடுகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால், விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.

    வேம்பங்குடி கிராமத்தில் அரசு விதியை மீறி பல அடி ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்துள்ளனர். வேம்பங்குடியில் நடந்துள்ள கிராவல் மண் கொள்ளையை, அதிகாரிகள் ஆய்வு செய்து, அதில் அரசு விதியை மீறி, மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதேபோல் உண்ணாவி ரதப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மணல் கொள்ளைக்கு எதிராக பேசினர். அ.தி.மு.க.வுடன் த.வெ.க.வும் கைகோர்த்து போராட்டத்தில் பங்கேற்றது சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பேசும்பொ ருளாக மாறியுள்ளது.

    இதுகுறித்து த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துபாரதி கூறுகையில், இந்த மணல் கொள்ளை, குவாரி பிரச்சனை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை கிராமமக்களுக்காக நடத்தி இருக்கிறோம். கிராமமக்கள் அழைப்பின் பேரில் தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன.

    மக்களுக்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கட்சி தலைமை எங்களுக்கு உத்தர விட்டுள்ளது. அந்த வகையில் தான் நாங்கள் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டோம். மற்றபடி தேர்தல், கூட்டணி என்பது தொடர்பாக நாங்கள் யோசிக்கவில்லை. கிராம மக்களையும், விவசாயத்தையும் காப்பதற்காகவே எந்தவித பாகுபாடும் பார்க்காமல் நாங்கள் பங்கேற்றோம் என்றார்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் எந்ததெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி சேரப்போகிறது, களம் மாறலாம், சூழ்நிலையும் மாறலாம் என்ற கருத்துகள் நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.

    • செடி, கொடிகள் அனைத்தும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.
    • சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரத்தில் குளிர் அதிகமாக உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சேலம் மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிப்பொழிவு மிக அதிக அளவில் இருந்தது. சாரல் மழை போல பனி கொட்டியதால் அருகில் நிற்பவர்கள் கூட தெரியாத நிலை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் குளிரில் நடுங்கினர்.

    இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் வாகனங்களை இயக்க முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்கள் தவிர மற்றவர்கள் வீடுகளில் முடங்கினர்.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, எடப்பாடி உள்பட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவில் இன்று அதிகாலை முதல் பனி கொட்டியது. இதனால் செடி, கொடிகள் அனைத்தும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் இன்றும் அதிக அளவில் பனி கொட்டியதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்வோர் குளிர் தாங்கும் உடைகளை அணிந்த படி சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

    மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் பனி மற்றும் குளிரின் தாக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேநேரம் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்று வீசிவருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. 

    • கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி அருகே இலத்தூர் இனாவிலக்கு பகுதியில் மதுநாதபேரி குளம் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    பெண்ணின் காலில் மெட்டி கிடந்தது. இடது கை, காலில் உள்ள 5 விரல் எரியாமல் கிடந்தது. சம்பவ இடத்தில் ஏராளமான மது பாட்டில்களும் கிடந்தன. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. மீனாட்சி சுந்தரம் மேற்பார்வையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் இலத்தூர் முதல் இனாவிலக்கு வரை சாலையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், முந்தைய நாள் இரவு 9.30 மணியளவில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சென்றது தெரியவந்தது.

    அந்த கார் பதிவு எண் மூலம் நடத்திய விசாரணையில், அந்த கார் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவகாசி பாரதி நகரை சேர்ந்த ஜான்கில்பர்ட் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மனைவியை கொன்று எரித்தது தெரியவந்தது.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கமலி (வயது 30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜான்கில்பர்ட் தனது காதலியை கரம்பிடித்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 9-ந்தேதி கணவன்-மனைவி இடையே நடந்த தகராறில் ஜான்கில்பர்ட் தனது மனைவியை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் உடலை அப்புறப்படுத்துவதற்காக தனது சகோதரர் ஒருவரின் உதவியை நாடி உள்ளார். அதன்படி, மனைவியின் உடலை ஒரு காரில் ஏற்றி அங்கிருந்து சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக தென்காசி அருகே சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வந்து இலத்தூர் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத குளத்தின் ஒரு பகுதியில் முட்புதருக்குள் வீசி எரித்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஜான்கில்பர்ட்டை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த சகோதரரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
    • பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரு தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    தொழிலாளர்கள் தினமும் கம்பெனி பேருந்தில் வந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் பிஸ்கட் கம்பெனிக்கு சொந்தமான அந்த பேருந்து அம்மாபேட்டை, பவானி, லட்சுமி நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூரில் இருந்து பெருந்துறை சிப்காட் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பேருந்தை மேட்டூரை சேர்ந்த நெல்சன் டேவிட் (வயது 34) என்பவர் ஓட்டினார். பேருந்து பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பிரிவு சாலையைக் கடந்து சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையின் வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து பணியாளர்கள் சிமெண்ட் லோடு இறக்கி கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிஸ்கட் கம்பெனியின் பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கம் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பெரும்பாலானவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டதால் அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பினர்.

    பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பர்கூர்:

    பர்கூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவியை கத்தி முனையில் மிரட்டி மூகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பர்கூர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலபள்ளி கல்லேத்துப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் சாலையில் சுந்தரேசன் (வயது65) என்பவர் வசித்து வருகிறார்.

    விவசாயியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை யாரும் இல்லை.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் அவர்களது நிலத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுந்தரேசன் வீட்டின் அருகில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த சுந்தரேசன் எழுந்து வந்து கதவை திறந்து பார்க்க முயன்றார். அப்போது அங்கு முகமூடி அணிந்து மறைந்து இருந்து 3 நபர்கள் கதவின் அருகே வந்து சுந்தரேசனை வீட்டிற்குள் தள்ளி கதவை சாத்தி கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரேசனை மிரட்டினர். அப்போது அவர் சத்தம்போடவே அவரை வெட்டுவது போல் மர்ம நபர் ஒருவர் கத்தியை வீசும்போது சுந்தரேசனின் கையில் வெட்டியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    தனது கணவரின் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த மஞ்சுளாவும் அங்கு வந்தார். அப்போது இருவரையும் கத்தி முனையில் மர்ம நபர்கள் மிரட்டி பீரோவில் இருந்த நகைகளும், மஞ்சுளா அணிந்திருந்த தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.

    மேலும், பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். உடனே கணவன்-மனைவி இருவரும் திருடன், திருடன் என்று சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த 3 மர்ம நபர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

    அப்போது அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சுந்தரேசனை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு உடனே அவர் வீடு திரும்பினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை மற்றும் பர்கூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கணவன்-மனைவி இருவரும் மட்டும் தோட்டத்திற்குள் வீட்டில் வசித்து வருவதை நோட்டமிட்டு 3 மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரேசன் வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுந்தரேசனையும், அவரது மனைவியையும் மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் காட்டுத்தீ போல்அந்த பகுதியில் பரவியதால், அவர்களது உறவினர்கள் உடனே சம்பவ நடத்த வீட்டிற்கு திரண்டு வந்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×