என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முன்னாள் சென்ற ஒரு லாரியின் மீது மாநகர பஸ் மோதி நின்றது.
- கைதான ஆபிரகாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூரில் மாநகர பஸ் பணிமனை உள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, கிளாம்பாக்கம், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரவு கடைசி பஸ்சேவை முடிந்ததும் பணிமனையில் மாநரக பஸ்களை நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் போதை வாலிபர் ஒருவர் திடீரென பணிமனைக்குள் புகுந்தார்.
இதனை அங்கிருந்த ஊழியர்கள் கவனிக்க வில்லை. திடீரென அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மாநகர பஸ்சில் ஏறி வண்டியை வெளியே ஓட்டிச்சென்றார்.
வழக்கமான டிரைவர் தான் பஸ்சை ஓட்டிச் செல்வதாக நினைத்து ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து போதை வாலிபர் மாநகர பஸ்சை தாறுமாறாக சோழிங்கநல்லூர் அருகே அக்கரை, கிழக்குகடற்கரை சாலையில் வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது முன்னாள் சென்ற ஒரு லாரியின் மீது மாநகர பஸ் மோதி நின்றது. இதையடுத்து லாரிடிரைவர் கீழே இறங்கி வந்து விசாரித்த போது பஸ்சை ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து விசாரித்த போது பஸ்சை ஓட்டி வந்தது பெசன்ட் நகரை சேர்ந்த ஆபிரகாம்(33) என்பது தெரிந்தது. கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பழிவாங்க மாநகர பஸ்சை எடுத்து ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.
நேற்று காலை ஆபிரகாம் திருவான்மியூர்-ஊரப்பாக்கம் இடையே மாநகர பஸ்சில் பயணம் செய்து உள்ளார். அப்போது அதில் இருந்த கண்டக்டருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை பழிவாங்க ஆபிரகாம் திருவான்மியூர் பணிமனையில் நிறுத்தி இருந்த மாநகர பஸ்சை எடுத்து ஓட்டி வந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் ஆபிரகாம் பஸ்சை ஓட்டி வந்து உள்ளார். அதிகாலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து அதிகம் இல்லை. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாநகர பஸ் விபத்தில் சிக்காமல் இருந்து இருந்தால் அந்த பஸ்சை ஓட்டிச் சென்றது யார் என்பதே தெரியாமல் இருந்து இருக்கும்.
இது தொடர்பாக கைதான ஆபிரகாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் இல்லாத ஒருவர் பணிமனையில் இருந்து மாநகர பஸ்சை ஓட்டிச்சென்றதை அங்கிருந்து ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது எப்படி? என்பது குறித்து போக்குவரத்து அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.
- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, மஞ்சள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு முதல் கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை சமையல் புளி, 1 லட்சம் எண்ணிக்கையிலான இங்கிலாந்து நாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும்.
இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து கொண்ட கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கடற்கரை ஓரமாக போட்டுவிட்டு பைபர் படகில் தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
- உயர்கல்வி மன்றத்திற்கு நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்கான புதிய திட்டங்களை வகுப்பது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது, பேராசியர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவது போன்ற பணிகளில் உயர்கல்வி மன்றம் செயல்பட்டு வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யும் உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
இந்தநிலையில், உயர்கல்வி மன்றத்திற்கு நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் பன்னீர் செல்வம், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் முரளிதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்ட இயக்குனராக இருந்தபோது, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். இக்கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார். சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி இரட்டை இலை, சின்னம் விவகாரத்தில் அடுத்த நகர்வு குறித்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. சட்டவிதிகளை மாற்றி கட்சியை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது.
- உரிய நடவடிக்கைகளை இனியாவது தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் புகையிலை, போதை சாக்லெட் உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏராளமான மாணவ, மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய திமுக அரசால், ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை கூட தடுக்க முடியவில்லை என்பது அரசு நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறையும், காவல்துறையும், அத்துடன் அதனை கடந்து விடுவதும் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்ளாமல் விடுவதுமே கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது.
பள்ளிக்குழந்தைகள் தன்னை அப்பா… அப்பா… என அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக பெருமிதமடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அக்குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்குதடையின்றி நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அப்பாவாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் ? என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, மாணவ சமுதாயத்தை சீரழித்து வரும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை இனியாவது தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.
- ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்கிடுவது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.
- நிகழ்ச்சியில் ஆப்பூர் சந்தானம், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசிக்க காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் சிக்கராய புரத்தில் நடந்தது.
இதில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டுகின்ற வகையில், திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் மார்ச் 1-ந் தேதி வருகிறது.
அன்றைய தினம் காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டி, தொட்டியெங்கும் மிகவும் சிறப்பான வகையில் மாதம் முழுவதும் எழுச்சியுடன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவது என்றும், மாவட்டம் முழுவதும் கழக கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கிடுவது என்றும் 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்கிடுவது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.
முதலமைச்சரின் தன்னலமற்ற உழைப்பையும், அவர் கழகத்திற்காக ஆற்றிய அரும் பெரும் பணிகளையும், 4 ஆண்டு கால ஆட்சியின் அளப்பறிய சாதனைகளையும், நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில் மார்ச் 1-ம் தேதி முதல் மாதம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்திடுவது, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசுகளை வழங்குவது என்றும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் மார்ச் 1-ஆம் தேதி அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, பொருளாளர் விசுவநாதன், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் காமராஜ், மண்டலக் குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் மண்டலக்குழுத் தலைவர் வே.கருணாநிதி, திருநீர்மலை த.ஜெயக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், ஆப்பூர் சந்தானம், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
- போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பான கண்காணிப்பு அலுவலர்கள், ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,
* பார்வை மாற்றுத் திறனாளிகள் 12-ம் வகுப்பு தேர்வை கணினி வழியாக எழுத உள்ளனர்.
* பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவரின் கோரிக்கையை ஏற்று கணினி வழியில் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.21 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.23 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
* பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர் என்று கூறினார்.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பள்ளிக்கல்வித்துறையில் 238 போக்சோ வழக்குகள் உள்ளன. அதில் 11 பேர் குற்றமற்றவர்கள். 7 பேர் இறந்து விட்டார்கள்.
* போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.
* புகார்கள் தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பள்ளிக்கூடமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
* தவறு என்று வரும்போது அது எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
- தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அழைப்பாணை அனுப்ப திட்டம்.
- ஒன்றுபட்ட அ.திமு.க. வை தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
சென்னை:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.
அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.
இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைந்த பின்னர் 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை அவருக்கே ஒதுக்கியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து ஏற்படுமோ? என்கிற அச்சம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவு வக்கீல் ஒருவர் கூறும் போது, தேர்தல் ஆணையம் நடத்தும் விசாரணையில் நல்ல முடிவு எட்டப்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்றுபட்ட அ.திமு.க. வை தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அ.தி.மு.க. வக்கீல்களோ இதனை மறுத்துள்ளனர். ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எல்லை மீறும் அளவுக்கு மூக்கை நுழைத்து செயல்பட முடியாது.
கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டு அது 2 அணியாக செயல்பட்டால் மட்டுமே யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கண்டறியலாம். அதில் பெரும்பான்மை உள்ளவர்களிடம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றுள்ள அ.தி.மு.க.வுக்கு ஏற்கனவே இரட்டை இலை சின்னம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் தற்போது இல்லாதவர்கள் எழுப்பி உள்ள கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல. இரண்டு அணிகள் தற்போது இல்லாத பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் விசாரணை நடத்த முடியாது என்பதே எங்கள் வாதம் என்று தெரிவித்தனர்.
இருப்பினும் இரட்டை இலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது அரசியல் களத்தில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
- தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது நாகராஜகண்டிகை கிராமம். இங்கு, மாதர்பாக்கம் செல்லும் சாலையையொட்டி உள்ள முக்கிய நீர் நிலையாக ஓடை கால்வாய் உள்ளது. இந்த நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த கால்வாயில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் செத்து மிதக்கின்றன. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் இவ்வளவு வாத்துக்கள் எப்படி இறந்தன என்பது மர்மமாக உள்ளது. அவை இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.
வாகனங்களில் கிராமம் தோறும் சென்று வாத்து வியாபாரம் செய்திடும் வியாபாரிகள் யாரோ சிலர், தங்களின் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து போன வாத்துக்களை மொத்தமாக கொண்டு வந்து இந்த ஓடைகால்வாயில் வீசினார்களா? அல்லது நீரோடையில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்ததால் மேய்ச்சலுக்கு வந்த வாத்துக்கள் இறந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
ஓடை கால்வாயில் செத்து மிதக்கும் அழுகிய வாத்துகளை அப்புறப்படுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியும், சுகாதார துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மேல கடம்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாபிச்சை. இவரது மகன் நாகராஜன்(வயது 35). இவரது மனைவி ரம்யா(32). நாகராஜன் தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்த நிலையில் அங்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நாகராஜனும், அதே ஊரை சேர்ந்த சுதாகர் என்பவரும் கோவையில் கார் ஓட்டி வருகின்றனர். இதனிடையே ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நாகராஜன் வீட்டுக்கு சுதாகர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது சுதாகரிடம் ரம்யா பேசி பழகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன் கடந்த 9ந்தேதி சுதாகரை கத்தியால் குத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் திரு.வி.க பஸ் நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, பூண்டி, மற்றும் ஆந்திர மாநிலம் காளாஸ்திரி திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் (வயது 59) என்பவர் பஸ் ஏறுவதற்காக வந்தார். அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பஸ்நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அப்துல் சலீம் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், வேடங்கி நல்லூரில் ரூ84 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை.
- அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே-சி வோட்டர் மூட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் 3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு 3 சதவீதம் சரிந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அ.தி.மு.க. கூட்டணி 23 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்து 52 சதவீதம் ஆக அதிகரித்திருக்கும்.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வாக்குகள் 3 சதவீதம் அதிகரித்து 21 சதவீதம் ஆகி இருக்கும். அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது. இதில் தி.மு.க. 22 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இப்போது தேர்தல் வைத்தாலும் அதே நிலை தான் நீடிக்கும். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய், 2026 சட்டசபை தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருப்பார். பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் விஜய் கட்சி ஆகியவை இணைந்து ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே தி.மு.க.வுக்கு சவாலாக மாற முடியும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.






