என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
    • முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    • புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.
    • வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வந்தது.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அவ்வப்போது மழையும் பெய்தது.

    இதனிடேயே வங்கக்கடலில் அக்டோபர் 27-ந் தேதி மோந்தா புயல் உருவானது. இந்த புயல் புதுச்சேரியை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.

    இருப்பினும், புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றி உள்ள தமிழக பகுதிகளில் கன மழை பெய்தது. புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களில் வெள்ள நீர் நிரம்பியது.

    அதே நேரம் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால் இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது.

    இன்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. அதோடு வானம் இருண்டு காணப்படுகிறது.

    இதனிடையே பருவமழையின் தொடர்ச்சியாக இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படியும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

    • விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும்.

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியில் நாளை (15.11.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்து.

    டெட் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    நாளைய விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

    • திருச்சியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் மணமக்கள் விஜயபாரதி-மனிஷா ஆகியோர் திருமணம் நாளை (ஞாயிறுக்கிழமை) திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவிலும் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) சென்னை சித்தரஞ்சன் பகுதியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படுகிறார். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு மாலை 6.10 மணிக்கு வருகிறார். 6.20 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறார். இரவு 7.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். 7.35 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு சுற்றுலா மாளிகை வருகிறார். இரவு அங்கு தங்குகிறார்.

    முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.45 மணிக்கு சுற்றுலா மாளிகையில் திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டைக்கு காலை 9.20 மணிக்கு செல்கிறார். அங்கு திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். பின்னர், காலை 10.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை செல்கிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரிக்கு காலை 11.15 மணிக்கு முதலமைச்சர் செல்கிறார். அங்கு நடைபெற உள்ள அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ரூ.201.70 கோடி மதிப்பில் 103 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.223.06 கோடி மதிப்பில் 577 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். ரூ.348.43 கோடிக்கு 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியை முடித்து அங்கிருந்து பகல் 12.15 மணிக்கு புறப்படுகிறார். பகல் 12.45 மணிக்கு திருச்சி பொன்மலையில் உள்ள முதியோர்களுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை தொடங்க்கி வைக்கிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் பொன்மலையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.

    மதியம் 1.30 மணிக்கு விமான நிலையம் வந்தடைகிறார். தொடர்ந்து, பகல் 2.55 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு மாலை 4 மணிக்கு செல்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

    • 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    • கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது.
    • கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக புதுவை காலாபட்டில் சுமார் 25 செ.மீ. வரை மழை பதிவானது. இந்த பகுதியில் சின்ன காலாப்பட்டு மீனவ கிராமத்தில் மேட்டுப்பகுதியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் கடல் நோக்கி வந்தது.

    இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. இதேபோல் மீன்பிடி வலைகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை மீனவர்கள் போராடி படகுகளை மீட்டனர்.

    இருப்பினும் 5-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் சென்றன. 50-க்கும் மேற்பட்ட படகுகள் பழுதாகி உள்ளதாகவும், ரூ.1 கோடி மதிப்பிலான வலைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது. இதனால் குளக்கரையின் ஒரு பகுதி சரிந்தது.

    இதனை இன்று காலை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேலும் மண் சரிவு ஏற்படாதவண்ணம் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார்.

    கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் கணபதிசெட்டிக்குளம் பிள்ளையார் கோவில் குளம் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் சாலையோரத்தில் மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இந்த பகுதியில் நிரந்தரமாக தூண்டில் முன் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யக்கூடும்.
    • காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யக்கூடும்.

    புதுச்சேரியில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுவை மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    • முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது.

    அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் அதனை மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசுகளை எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த செலவிலேயே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

    இதற்கிடையே கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கோப்புக்கும் கவர்னர் கைலாஷ்நாதன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்காததே கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    முதலமைச்சர் ரங்கசாமி அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமானது என்றாலும் இருவருக்கும் உள்ள மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    • புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது.
    • புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.

    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 10 'ஏசி' பஸ்களும் அடங்கும்.

    இந்த எலெக்ட்ரிக் பஸ்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.

    அரசு அதற்கான தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்குகிறது. டிக்கெட் வசூல் செய்யும் பணியை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் செய்கின்றனர்.

    இந்த 25 இ-பஸ்களின் சேவை வருகிற 24-ந் தேதி முதல் புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட உள்ளது.

    அன்றே நகராட்சி சார்பில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு 38 எலெக்ட்ரிக் ஆட்டோவும் வழங்கப்படவுள்ளது.

    • நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 28 அடியை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மணலிப்பட்டு, கொடாத்தூர், செட்டிப் பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், குமாரப்பாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் (கோனேரிக்குப்பம்), வில்லியனூர் (ஆரியப்பாளையம், புதுநகர் பிளாட்-2) பொறையாத்தமன் நகர், கோட்டைமேடு, மங்கலம், உறுவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுகாவில் இருக்கும் என்.ஆர்.நகர், நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.

    தற்போது கான் பெட் நிறுவனம் சார்பில் பட்டாசு விற்பனை சிறப்பு அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட் டாசு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார்.

    மேலும் இதேபோன்று கூட்டுறவு துறையின் மார்க்கெட் சொசைட்டி சார்பில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பட்டாசு விற்பனை கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாண்லே நிறுவனத்திற்கு 2024-25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7,500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். அதாவது, மொத்த மதிப்பில் ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி கூடுதலாக செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர்.
    • இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

    போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.   

    ×