search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார்.
    • வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார்.

    திருநள்ளாறு:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோருடன் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது வாகனத்தில் இருந்தபடி வாக்காளர்களுக்கும், தொண்டர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பதிலுக்கு அவர்களும் முத்தங்களை பறக்கவிட அதை அவர் 'கேட்ச்' பிடித்து மகிழ்ந்தார். இது பிரசாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார். அப்போது கடும் வெயில் காரணமாக அவருக்கு திடீரென சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார். அங்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ஆதரவாளர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வெயில் தாக்கத்தால் சந்திரபிரியங்காவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்றும், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
    • புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

    ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பலனடைகின்றனர்.

    இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை மட்டும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது.
    • ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.

    புதுச்சேரி:

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக, புதுச்சேரி தேர்தல் துறை மாநிலம் முழுவதும் ஓட்டுச்சாவடிகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஓட்டு போட வருபவர்கள் வரிசையில் நிற்கும்போது வெயிலில் இருந்து தப்பிக்க ஓட்டுச்சாவடி வாயில்களில் பெரிய இரும்பு ஷீட் கூரை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக வீல் சேர் உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலை பசுமை தேர்தலாக மாற்றுவதற்கு ஏதுவாக ஓட்டுச்சாவடிக்கு வருபவர்கள் வாகனங்களை தவிர்த்து விட்டு நடந்து வருமாறும் தேர்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது.

    இந்த பசுமை ஓட்டுச்சாவடி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹெரிட்டேஜ் கட்டிடமான வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பள்ளி வளாகத்தில் 2 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.

    ஓட்டு போட வருபவர்களின் தாகம் தணிக்க மண் பானையில் குடிநீர், மோர் மற்றும் கேப்பை கூழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் அந்த ஓட்டுச்சாவடி வளாகமே முழுக்க குளிர்ச்சியாக காட்சியளிப்பதற்கு பல்வேறு பணிகளை தேர்தல் துறை செய்து வருகிறது.

    • ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.
    • புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-விழுப்புரம் சாலை உழவர்கரையில் உள்ள இறைச்சி கடையில் ஒரு கன்று குட்டியை இறைச்சிக்காக வெட்டி கொல்வதற்கு கொண்டு வந்தனர்.

    இதை பார்த்த தனியார் அமைப்பின இறைச்சிக்காக கன்று குட்டிகள், கருவுற்ற கால்நடைகள், நோய்வாய்ப்பட்ட கால்நடைகள், அடிபட்ட மாடுகளை வெட்டக்கூடாது என்பது சட்டம் உள்ளது என எடுத்து கூறினர்.

    ஆனால் இறைச்சி கடை உரிமையாளர் ஏற்கவில்லை. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.

    இது தொடர்பான புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டரை அந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கலெக்டரின் நடவடிக்கையை தொடர்ந்து கன்று குட்டியை ரெட்டியார் பாளையம் போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்பு, உழவர்கரை நகராட்சி நிர்வாகம் இறைச்சிக்காக கொல்லப்பட இருந்த கன்று குட்டியை மீட்டு சென்றது.

    • பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, நகர பகுதியில் இயங்கும் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பாராளுமன்ற தேர்தலில் தவறாது ஓட்டளிக்க வேண்டி, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தனிப்பட்ட கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தனது பெயரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தனிப்பட்ட வேண்டுகோள் கடிதங்களை, நகர பகுதிகளில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி, அதனை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களிடம் தவறாது சேர்த்திட கேட்டுக்கொண்டார். அதன்படி, 50 ஆயிரம் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.

    நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    இந்த காணொலிகளை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாக்காளர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.

    • இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
    • போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.

    அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.

    சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    • அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்-புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.

    அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    தினமும் 93 முதல் 94 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    நேற்று 94.64 டிகிரி வெயில் பாதிவாகியுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

    இதனால் பொதுமக்களும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு மற்றும் பழச்சாறுகளை வாங்கி பருகி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தால் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவதால் காலை 8 மணிக்கே பிரசாரத்தை தொடங்கும் வேட்பாளர்கள் மதியம் 12 மணிக்குள் முடித்துக் கொள்கின்றனர்.

    அதன் பிறகு வெயில் தாழ்ந்தவுடன் மாலை 6 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.

    • நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார்.
    • உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து லாஸ்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதலமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மாணவர்கள் படிப்படியாக உயர்ந்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செயலாற்றி வருகிறது. கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டவர் பிரதமர் மோடி.

    கொரோனா காலத்தில் அண்டை நாடுகள் பசி பட்டினியால் தவித்தபோது, இந்தியாவில் பசி பட்டினி கிடையாது. நாட்டின் பொருளாதாரத்தையும் மிக சிறப்பாக கையாண்டார். உள்நாட்டிலே கொரோனா தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.

    நமச்சிவாயம் மண்ணின் மைந்தர். காங்கிரசில் பணியாற்றிய அவருக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால், பா.ஜனதா அவரை அடையாளம் கண்டு அமைச்சராக்கியது. தற்போது அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்திய பா.ஜனதாவுடனும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசுடனும் ஒத்தகருத்து இருக்காது.

    அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் இதே நிலை தான். அதனால் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதிற்கு சமம்.

    உங்கள் ஓட்டுக்கு உரிமை, மரியாதை உள்ளது. அதை நிலைநாட்ட, உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரம் வருமாறு:-

    பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ.3 கோடியே 7 லட்சத்து 460. மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 22 லட்சம். கடன் ரூ.6.94 கோடி.

    மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ.8.99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ.1.58 கோடி.

    நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை. கடன் ரூ.1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230. அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம். வீட்டு கடன் ரூ.28 லட்சம்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு அசையும் சொத்தாக ரூ.2.86 லட்சம், தனி நபர் கடன் ரூ.40 ஆயிரம் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.

    புதுச்சேரி:

    தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.

    புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.

    காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    • சத்து மாத்திரையை சாப்பிட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
    • மொத்தம் ரூ.2½ கோடி அளவுக்கு தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மோசடி நடந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2019-ம் ஆண்டு வழங்கிய சத்து மாத்திரையை சாப்பிட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் உடனடியாக மருந்துகள் திரும்பப் பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் தரமற்ற மருந்து சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    2023-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, சுகாதாரத்துறையில் பணியாற்றிய நடராஜன், அவரது மனைவி பெயரில் நடத்திய நிறுவனம், அவரது நண்பரின் நிறுவனம் மூலம் மருந்து கொள்முதல் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து நடராஜன் கைது செய்யப்பட்டார். மொத்தம் ரூ.2½ கோடி அளவுக்கு தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மோசடி நடந்தது தெரியவந்தது.

    வழக்கு விசாரணைக்காக மருந்துகளை மற்ற மருந்துகளுடன் இருப்பு வைக்காமல் தனியாக வைத்து சீல் வைக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி, சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து தரமற்ற மருந்துகள் திப்புராயப் பேட்டையில் உள்ள குடோவுனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சீல் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.

    • கட்சியின் பெரும்பாலானவர்கள் கைகாட்டும் அமைச்சர் நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதியாக மறுத்து வருகிறார்.
    • தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் நடைபெறும் இழுபறி, குளறுபடியால் தொண்டர்கள் மிகவும் சோர்ந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    வடமாநிலங்களில் செல்வாக்கோடு இருக்கும் பா.ஜனதாவை தென் மாநிலங்களில் கால் பதிக்க வைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

    தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சியையும் பிடித்தனர்.

    தொடர்ந்து கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முடிவை ஓராண்டுக்கு முன்பே எடுத்தனர். இதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் மாதம் 2 முறை புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்தார்.

    ஓராண்டுக்கு முன்பிருந்தே தேர்தல் பணியை பா.ஜனதாவினர் தொடங்கினர். ஆனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல், பா.ஜனதா தவிக்கிறது.

    கட்சியின் பெரும்பாலானவர்கள் கைகாட்டும் அமைச்சர் நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதியாக மறுத்து வருகிறார்.

    அதே நேரத்தில் புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்தினால் தான் வெற்றி கிடைக்கும் என கூறி வருகிறார்.

    இதற்கிடையே பா.ஜனதாவினர் கிராமங்கள்தோறும் சுவர்களில் தாமரை சின்னத்தை வரைந்து மீண்டும் மோடி, வேண்டும் மோடி, வாக்களிப்பீர் தாமரைக்கு என பிரசாரத்தையும் தொடங்கினர். வேட்பாளர் அறிவிப்பு வந்து விடும் என்ற ஆர்வத்தோடு தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.

    ஆனால் தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் நடைபெறும் இழுபறி, குளறுபடியால் தொண்டர்கள் மிகவும் சோர்ந்துள்ளனர். அமைச்சர் நமச்சிவாயத்தை தவிர்த்து வேறு வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி கிடைக்காது என்ற மனநிலைக்கு பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் பா.ஜனதா தேர்தல் பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து போயுள்ளது.

    ×