என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது.
    • கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக புதுவை காலாபட்டில் சுமார் 25 செ.மீ. வரை மழை பதிவானது. இந்த பகுதியில் சின்ன காலாப்பட்டு மீனவ கிராமத்தில் மேட்டுப்பகுதியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் கடல் நோக்கி வந்தது.

    இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. இதேபோல் மீன்பிடி வலைகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை மீனவர்கள் போராடி படகுகளை மீட்டனர்.

    இருப்பினும் 5-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் சென்றன. 50-க்கும் மேற்பட்ட படகுகள் பழுதாகி உள்ளதாகவும், ரூ.1 கோடி மதிப்பிலான வலைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது. இதனால் குளக்கரையின் ஒரு பகுதி சரிந்தது.

    இதனை இன்று காலை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேலும் மண் சரிவு ஏற்படாதவண்ணம் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார்.

    கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் கணபதிசெட்டிக்குளம் பிள்ளையார் கோவில் குளம் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் சாலையோரத்தில் மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இந்த பகுதியில் நிரந்தரமாக தூண்டில் முன் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யக்கூடும்.
    • காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யக்கூடும்.

    புதுச்சேரியில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுவை மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    • முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது.

    அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் அதனை மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசுகளை எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த செலவிலேயே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

    இதற்கிடையே கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கோப்புக்கும் கவர்னர் கைலாஷ்நாதன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்காததே கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    முதலமைச்சர் ரங்கசாமி அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமானது என்றாலும் இருவருக்கும் உள்ள மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    • புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது.
    • புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.

    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 10 'ஏசி' பஸ்களும் அடங்கும்.

    இந்த எலெக்ட்ரிக் பஸ்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.

    அரசு அதற்கான தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்குகிறது. டிக்கெட் வசூல் செய்யும் பணியை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் செய்கின்றனர்.

    இந்த 25 இ-பஸ்களின் சேவை வருகிற 24-ந் தேதி முதல் புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட உள்ளது.

    அன்றே நகராட்சி சார்பில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு 38 எலெக்ட்ரிக் ஆட்டோவும் வழங்கப்படவுள்ளது.

    • நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 28 அடியை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மணலிப்பட்டு, கொடாத்தூர், செட்டிப் பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், குமாரப்பாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் (கோனேரிக்குப்பம்), வில்லியனூர் (ஆரியப்பாளையம், புதுநகர் பிளாட்-2) பொறையாத்தமன் நகர், கோட்டைமேடு, மங்கலம், உறுவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுகாவில் இருக்கும் என்.ஆர்.நகர், நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.

    தற்போது கான் பெட் நிறுவனம் சார்பில் பட்டாசு விற்பனை சிறப்பு அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட் டாசு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார்.

    மேலும் இதேபோன்று கூட்டுறவு துறையின் மார்க்கெட் சொசைட்டி சார்பில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பட்டாசு விற்பனை கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாண்லே நிறுவனத்திற்கு 2024-25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7,500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். அதாவது, மொத்த மதிப்பில் ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி கூடுதலாக செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர்.
    • இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

    போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.   

    • புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது.
    • கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறை சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஒரு சில சாலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.

    பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, போக்கு வரத்துத்துறையுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரப் பகுதி முழுவதும் சுற்றுலா வரும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாமல் அரசு பஸ்சில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறோம்.

    இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியுடன் விரைவில் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது. இதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஒரு பட்டாலியன் படையைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

    ஏற்கெனவே புதுச்சேரியில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அவருக்குதான் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது.

    த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் புகலிடமாக இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும் அந்தக் கட்சி ஏற்கெனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்தது. இப்போது கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது. மீண்டும் அனுமதி கேட்டால் அப்போது முடிவு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
    • 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மீனவர்களின் 4 படகுகளை விடுவிக்க கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஜூவாலலைதீன் துறைமுகத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழாகா சாகுடி பகுதியை சேர்ந்த கலைமணி மற்றும் முத்துதமிழ்செல்வன் ஆகியோருக்கு சொந்தமான படகுகள், உள்ளூர் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

    அதேபோல் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதத்துக்கு சொந்தமான 2 படகுகள் என மொத்தம் 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விரைந்து விடுவிப்பதற்கு ஆந்திர அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை (அக்டோபர் 03) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
    • த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். அவர் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11-ந் தேதி காலை புதுச்சேரிக்கு வர உள்ளார். இதனையொட்டி த.வெ.க. மாநில நிர்வாகிகள் புதியவன், நிரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரசாரம் நடத்த அனுமதி கோரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுவை காவல்துறை சார்பில் கலந்து ஆலோசித்த பின் மீண்டும் அழைப்பதாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    அவர்களிடம் விவரத்தை கேட்டு அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி மனுவை மாவட்ட கலெக்டருக்கு கையெழுத்திட்டு பரிந்துரை செய்தார்.

    வருகிற 11-ந் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காலை 11 மணிக்கு வரும் விஜய்க்கு த.வெ.க.வினர் காலாப்பட்டில் வரவேற்பு தருகின்றனர். அங்கிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் அவர், புதுவை அஜந்தா சிக்னல், எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, சோனாம்பாளையம், மரப்பாலம் பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்தவும், சோனாம் பாளையம் வாட்டர் டேங்க் அருகே விஜய் பேசவும் அனுமதி கோரி உள்ளனர்.

    தொடர்ந்து பஸ்சில் அரியாங்குப்பம், மண வெளி, கன்னியகோவில் வழியாக மக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி விஜய் கடலூர் செல்கிறார். விஜய் பிரச்சாரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளிக்கும் என தெரிகிறது.

    • திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும்.
    • கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் விஜய் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு "76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்துவிட்டோம். விஜய் பற்றி எதுவும் கேட்காதீர்கள். இதை வெளிப்படையாக சொல்கிறேன்" என்றார்.

    அவருக்கு கூட்டம் அதிக அளவில் கூடுகிறதே? எனக் கேள்வி எழுப்ப, "நாராயணசாமி நாயுடு என்பவர் 1980களில் இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா?. தெரியுமா?. தெரியாதா.., அவர் விவசாய கட்சியை நடத்தினர். அவருக்கு மக்கள் அதிக அளவில் கூடினர். 1980 தேர்தலுக்கு முன்னாடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். இந்திரா காந்தி சென்று பார்த்தார். கலைஞரும் சென்று பார்த்தார். மூன்று பேரும் ஆதரவு கேட்பதற்கான போனார்கள். அந்த கட்சி இப்போது இருக்கா? இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எட போட முடியாது.

    40 வருடத்திற்கு முன்னதாக, எம்.ஜி.ஆர்.ஐ எதிர்த்து பழனிபாபா பேசி வந்தார். நான், பேராசிரியர் வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினோம். அதன் அருகில் பழனிபாபா பேசினார். எங்கள் கூட்டத்திற்கு 100 பேர்தான் வந்திருந்தனர். அவரது கூட்டத்திற்கு 50 ஆயிரம் பேர் வந்தனர். அப்போது பேராசிரியர், இது கொள்கை கூட்டம். இது மாயை கூட்டம் என்றார். அந்த கூட்டம் என்னாச்சு?

    திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும். கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.

    விஜய்க்கு கூடும் கூட்டம் மாயை கூட்டம் என எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, அதை நீங்கள்தான் முடிவு செய்யனும் என பதில் அளித்தார்.

    ×