என் மலர்tooltip icon

    இந்தியா

    • ரஜினிகாந்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கோவாவில் நடைப்பெற்ற 56 வது சர்வதேச திரைப்பட விழாவில் தனது 50 வருட கலைப் பயணத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெற்றார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள

    தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    50 ஆண்டுகளாக தனது திரை ஆளுமையால் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, உலகம் முழுக்க மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை என்றும் ஈர்க்கும் வல்லமை கொண்ட ரஜினிகாந்த் அவர்களின் எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?
    • அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?

    தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!

    அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்!

    வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!



    • தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள்.
    • நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, தயாநிதி மாறன், வில்சன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கிரிராஜன், டாக்டர் கனிமொழி, சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    * எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்யத் தூண்டுவது, எல்லாவற்றுக்கும் மேலாக கவர்னர்களை நியமித்து, பா.ஜ.க. அரசு இல்லாத மாநிலங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது எனக் கூட்டாட்சிக் கருத்தியலைச் சிதைக்கும் நடவடிக்கைகளைத் தனது அன்றாட "அரசு நடவடிக்கைகளாக" ஆக்கிக் கொண்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு, திட்டம் போட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுத்து, நம் மாநிலத்திற்கான எந்த முத்திரைத் திட்டங்களும் தராமல் மறுத்து, அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு திட்டங்களைக்கூட முடக்கி, "ஒன்றிய-மாநில அரசு நிர்வாக ஒத்துழைப்பில்-உறவில்" ஓர் கருப்பு அத்தியாயத்தை உருவாக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.

    * புதிய ரெயில் திட்டங்களும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரெயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது.

    * தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள். புதிய திட்டங்களையும் அறிவிக்க மறுக்கிறார்கள். ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நிலையை உடனடியாக கைவிட்டு, மாநிலத்திற்கான ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    * கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமான செயல் என இக்கூட்டம் தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, இந்த மெட்ரோ ரெயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசு ஒப்புதல் வழங்கிட பிரதமர் நேரிடையாகத் தலையிட வேண்டும்.

    மேலும், இந்த மெட்ரோ ரெயில் திட்டங்கள் வருவதற்கு அ.தி.மு.க. துளியளவும் துணை நிற்கவில்லை என்றாலும், "கைக்குட்டையும் கையுமாகச் சென்று" பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துவிட்டு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்குத் துணை போக வேண்டாம் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

    * கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தர வேண்டும்.

    * கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன் வடிவுக்குக் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவும், கவர்னருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது.

    * செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    * நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

    * கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி ரூ. 3548.22 கோடி சமக்ர சிக்சா நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.

    * தொழிலாளர்களின் உரிமைகளை-அவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் "நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை" கொண்டு வந்துள்ளதையும், நாட்டிலேயே மிகச்சிறந்த தொழிலாளர் நலன் காக்கும் அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கியுள்ள தமிழ் நாட்டின் தொழிலாளர் நலத் திட்டங்களை முடக்கும் வகையில் அமைந்துள்ளதையும், நம் மாநிலத்தில் உள்ள அமைப்பு சாரா நலச் சட்டமே தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் என்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைத்த கருத்துகளை ஏற்று இதுவரை விலக்கு அளிக்காமலும் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

    * இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

    * பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.

    * கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
    • திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    'டிட்வா' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும் நெல்லை, குமரியிலும் நாளை தரைக்காற்றின் வேகம் அதிகரிக்கும். குறைந்த பட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. 

    • 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை.
    • பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சனைகள், குறிப்பாக SIR பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

    அதுமட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை. கல்விக்காக SSA வழியாக வரவேண்டிய அந்த நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க இருக்கிறோம்.

    நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதற்காக ஒரு குழு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார்கள். ஆனால் எந்த பதிலும் இல்லை. சமீபத்தில் நடந்த நிலைக்குழு கூட்டத்திலும் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அந்த பிரச்சனையையும் பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதையும் எழுப்ப இருக்கிறோம்.

    தமிழ்நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய, நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    SIR என்பது அடித்தட்டு மக்கள், BLO-க்கள் மீது அக்கறையின்றி, மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக உள்ளது.

    பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    தமிழ்நாட்டிற்கு மிக குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முடிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாகத்தான் இந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும் மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அங்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு இங்கு SIR பணியில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.

    மக்களை பற்றி அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் குறுகிய காலத்தில் போதிய அவகாசம் தராமல் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    'டிட்வா' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    இதனிடையே, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து இன்று காலை விநாடிக்கு 1000 கனஅடியாக திறக்கப்பட்ட உபரிநீர் தற்போது விநாடிக்கு 1500 கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம்.
    • பா.ஜ.க.வால் அ.தி.மு.க உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு ஆய்வு அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவோம்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மீதான சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பும்போது இதன் மீதான விவாதம் தீவிரமாக இருக்கும்.

    எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் சூழல் உருவாகி இருப்பது கவலைக்குரியது.

    இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உறுதி செய்ய இந்திய அரசு, இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் உண்மையான பூர்வகுடிகளின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம்.

    செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய அ.தி.மு.க சூழலில் அவரது நிலை அந்தக் கட்சிக்கு சாதகமானது அல்ல. த.வெ.க.வில் அவர் இணைந்தது அவரது சொந்த விருப்பம்.

    பா.ஜ.க.வால் அ.தி.மு.க உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு சென்றது பா.ஜ.க நடத்திய சித்து விளையாட்டின் விளைவு என்றார். 

    • இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
    • இந்த சந்திப்பின் போது முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ்.பொன்னையா உடன் இருந்தார்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் செயல்பட்டு வருகிறார்கள்.

    2½ ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் ஒப்பந்தப்படி முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் டெல்லியை முற்றுகையிட்டு சிவக்குமாரை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த அதிகார மோதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.



    இதற்கிடையே சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து டி.கே. சிவக்குமாருக்கு காலை உணவுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்தார்.

    இந்த நிலையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலை 10 மணியளவில் முதல்-மந்திரி சித்தராமையா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ்.பொன்னையா உடன் இருந்தார்.

    பின்னர் சித்தராமையாவும், சிவக்குமாரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, வடை, சாம்பார், சட்னி மற்றும் உப்புமா ஆகியவை காலை உணவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த சந்திப்பின் மூலம் கர்நாடக முதல்-மந்திரி விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா விலகி சிவக்குமார் முதல்-மந்திரி ஆவாரா? அல்லது முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா நீடிப்பாரா? என்பது விரைவில் தெரிய வரும்.



    • பஞ்சலிங்க அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
    • அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லி முத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    பஞ்சலிங்க அருவியில் இன்று காலை குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    மேலும் தொடர் மழையால் 90 அடி உயரமுள்ள உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் 75 அடியை நெருங்கி உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இதே போல கல்லாபுரம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

    தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.

    அமராவதி அணை ஏற்கனவே நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாகவும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததாலும் நீர்மட்டம் குறைந்து வந்தது. 70 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்ற நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்ய துவங்கியதும் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

    தற்போது படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது . மேற்கு தொடர்ச்சி மலையில் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    அணையில் இன்று நீர்மட்டம் 74.37 அடியாக உள்ளது. 672 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் அமராவதி அணை முழு கொள்ளளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமராவதி அணை நீர்மட்டம் 75 அடியை எட்டியதால் பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இலங்கைக்கு (யாழ்பாணம்) கிழக்கே 80 கி.மீ., புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது.
    • நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 6 மணி நேரத்தில் 8 கி.மீ. வேகத்தில் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. இலங்கைக்கு (யாழ்பாணம்) கிழக்கே 80 கி.மீ., புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் இருக்கிறது. டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து 60 கி.மீ., 50 கி.மீ., 25 கி.மீ. என மையம் கொள்ளும்.

    நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ. தூரத்தில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் 14 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கூடுதலாக புனே, வதோதராவில் இருந்து 10 NDRF குழுக்கள் தமிழகம் வர உள்ளன.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாக துணை கமாண்டர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    தமிழகத்தில் 14 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மேலும் 10 குழு வரவழைக்கப்பட உள்ளனர்.

    கூடுதலாக புனே, வதோதராவில் இருந்து 10 NDRF குழுக்கள் தமிழகம் வர உள்ளன. 5 அணிகள் சென்னையிலும், 5 அணிகள் விழுப்புரத்திலும் நிறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    • ராதாபுரம், நாங்குநேரி சுற்று வட்டாரத்திலும் இடைவிடாமல் நேற்று பகலில் இருந்து மழை பெய்து வருகிறது.
    • அகஸ்தியர் அருவியில் தற்போது தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது.

    நெல்லை:

    டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    இரவிலும் தொடர்ந்து பெய்த மழை இன்றும் காலையில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மூலைக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன் கால்வாய் பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ராதாபுரம், நாங்குநேரி சுற்று வட்டாரத்திலும் இடைவிடாமல் நேற்று பகலில் இருந்து மழை பெய்து வருகிறது. இன்றும் காலையில் மழை தொடர்கிறது.

    நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை டவுன், பேட்டை, வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    அதேநேரம் மழையின் தாக்கத்தை விட குளிரின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நேற்று பகல் நேரங்களில் சாலைகளில் வாகனம் தெரியாத அளவுக்கு மேகக்கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில், இரவில் மிக கடுமையான குளிர் வாட்டிவதைத்தது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் 20 டிகிரி செல்சியஸ் வரையிலும் குளிர் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்தபோதிலும் மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே இருப்பதால் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியினை பார்வையிடுவதற்கு மட்டும் விரும்புபவர்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அகஸ்தியர் அருவியில் தற்போது தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தென்காசி மாவட்டதிலும் நேற்று பகலில் தொடங்கி இன்றும் 2-வது நாளாக இடைவிடாமல் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. 3 நாட்களாக மாவட்டத்தில் சூரியன் தலை காட்டாத நிலையில், கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இரவிலும் வாட்டிவதைக்கும் குளிரின் காரணமாக முதியவர்களும், பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மாலை 4 மணிக்கே வானம் இருட்டாக மாறி விடுவதால் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்ட நிலையில், விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏராளமான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. குறிப்பாக காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சூரன்குடி சுற்று வட்டாரங்களில் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

    ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரங்களில் 2-வது நாளாக கடும் குளிர் வாட்டி வதைப்பதோடு இடைவிடாது சாரல் மழையும் பெய்து வருகிறது.

    சாயர்புரம் பகுதியில் பெய்த மழையால் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. உடன்குடி சுற்றுவட்டாரத்தில் 13 குளங்கள் இந்த ஆண்டாவது நிரம்பிவிடுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கருமேனி ஆற்றில் தண்ணீர் வந்தால் தான் குளங்கள் நிரம்பும் என்பதால் மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    ×