என் மலர்
இந்தியா
- பிடே மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- சாம்பியன் பட்டம் வென்று நாக்பூர் விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மும்பை:
பிடே மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் (19), சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்றார்
சாம்பியன் பட்டம் வென்ற தேஷ்முக் இந்தியா திரும்பினார். நாக்பூர் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, மகாராஷ்டிர அரசு சார்பில் திவ்யா தேஷ்முக்குக்கு பாராட்டு விழா நாக்பூரில் நடந்தது. இதில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு திவ்யாவை பாராட்டியதுடன் ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கை ராஜ்பவனுக்கு வரவழைத்த மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
- தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
- ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு.
திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த, ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்த கூட்டத்தில், தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
- கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர்கொள்ளும் வகையில், எம்.ஜி.ஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
- அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
திருப்பத்தூர் அருகே பள்ளியில் மூடப்பட்ட கிணற்றில் மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், மாணன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த செல்வன் முகிலன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன், அப்பள்ளியில் உள்ள கிணற்றில் உடலில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்பிற்கு வராத மாணவனை அவரது பெற்றோரும் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில், பள்ளியில் மூடியிருந்த கிணற்றில் பள்ளி சீருடையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
மாணவன் தொலைந்து இரண்டு நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அவரைத் தேடாதது ஏன்? இதில் அரசியல் தலையீடுகள் ஏதாவது இருக்கின்றனவா? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், கடந்த நான்காண்டுகளாக மாணவர்களின் மரணங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், படிக்கும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையையும், பள்ளியில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு முன்னெடுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
- நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.
அப்போது, சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
பின்னர், நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
டீஸர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்கள் நடத்துகிறோம். அதிலெல்லாம் கிடைக்காத சந்தோசம் எனக்கு இதில் கிடைக்கிறது.
சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்.
நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு. அதனாலதான் இது(டிஷ்யூ பேப்பர்) கொண்டு வந்தேன். பரவால நான் நல்ல நடிகன்தான் அழாம பேசிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கண்டன உரை.
- பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விருது.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிந்துள்ளதாவது:-
புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பினால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட ஆட்சியருடன் சென்று ஆய்வு செய்தோம். இங்கு, தடுப்பு சுவர் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்று வரும் தொடர் பரப்புரை தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் நினைவு தினத்தில் அவர் நமது தாய் நாட்டிற்கு ஆற்றிய ஒப்பற்ற சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

இந்திய அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.
நாகர்கோவில் பட்டு வளர்ப்பு அலகில் பல்நோக்கு கட்டிடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடங்கி வைத்தோம்.

பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வசந்த் & கோ கல்வி விருதுகள் 2025 இன்று குமரி மாவட்டம் மேற்கு பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

முளகுமூடு குழந்தை ஏசு மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- சுமார் 42 மணி நேரத்திற்கும் மேலாக மக்களிடம் உரையாற்றியுள்ளேன்.
- புரட்சிப் பயணத்தில், வெற்றிகரமாக 3,200 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
'Greatest journey begins with a single step'
எனச் சொல்லுவார்கள். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பாதம் தொட்டு, அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் எனது "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்"" என்ற உயரிய லட்சியத்துடன் கோவையில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி எனது எழுச்சிப் பயணத்தை தொடங்கினேன்.
கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எனது பயணத்தில், இதுவரை 21 நாட்களில், 14 மாவட்டங்கள், 61 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.
சுமார் 25 லட்சம் மக்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவர்களில் பலரிடம் நேரடியாக உரையாடி அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை, எண்ணவோட்டங்களைக் கேட்டறியும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த பயணத்தில் சுமார் 42 மணி நேரத்திற்கும் மேலாக மக்களிடம் உரையாற்றியுள்ளேன்.
இந்தப் புரட்சிப் பயணத்தில், வெற்றிகரமாக 3,200 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன்.
எனது எழுச்சிப் பயணத்திற்கு, செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்துவரும் பேராதரவிலும், அவர்களின் அளவற்ற அன்பிலும் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். மக்களின் குரலாக, அவர்களில் ஒருவராக என் மீது அன்பு பாராட்டி வரும் தமிழக மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.
எனக்கு அளித்த இந்த வரவேற்புக்கு, திமுக மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு, தமிழக மக்களாகிய உங்களுக்கு நல்லாட்சியை வழங்குவதே நான் தெரிவிக்கும் நன்றிக்கு நிகரானது. அதுவே எனது கடமை. அதுவே தமிழ் நாட்டு மக்களின் விருப்பமும் கூட.
எனது பயணத்தில் - பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், வேலையில்லாப் பட்டதாரிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறுகுறு தொழில் முனைவோர், மருத்துவர்கள், பாட்டாளி வர்க்கத்தினர், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஆகியோரைச் சந்தித்தேன். அப்போது, அவர்கள் அனைவரும் 'Failure Model ஸ்டாலின் அரசால்' தாங்கள் படும் துயரங்களையும், தங்கள் குறைகளையும், எங்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கும் திட்டங்களையும் என்னிடம் தெரிவித்தனர்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்து வரியையும் தாறுமாறாக உயர்த்தி உள்ளார்கள்.
ஆனால், தற்போதைய 'Failure Model ஸ்டாலினின் திமுக ஆட்சியில்' குடிதண்ணீருக்காக சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய பரிதாப நிலைதான் உள்ளது என தூத்துக்குடி மாவட்டம், வேலாயுதபுரம் கிராம மக்கள், அவர்களது வேதனையை என்னிடம் தெரிவித்தனர். இதே நிலைமைதான் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது.
விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை சரி செய்தல், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த 'Failure Model ஸ்டாலின் அரசு' மேற்கொள்ளத் தவறியுள்ளது.
எனது தலைமையிலான கடந்த அஇஅதிமுக ஆட்சியில் இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினேன்.
ஆனால் இந்த ஆட்சி, நிதி மேலாண்மை, நிர்வாகத் திறன், சட்டம் ஒழுங்கு என அனைத்துத் துறைகளிலும் கோட்டை விட்டு, தோல்வியடைந்த ஒரு அரசாகவேதான் இருக்கிறது.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசு முற்றிலும் தவறிய காரணத்தினால், திருட்டு, கொலை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது.
தினந்தோறும் ஊடகங்கள், தங்க நகை விலை நிலவரம் போல விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் கொலை நிலவரங்களையும், வானிலை அறிக்கை போல, பாலியல் குற்ற அவலங்களையும் வெளியிடுகின்றன.
இது பற்றியெல்லாம் சாமானிய மக்களின் குரலாக எவ்வளவுதான் கேள்வி கேட்டாலும், எதற்கும் செவி சாய்க்காமல், ஒரு பொம்மையைப் போலவே ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார் பொம்மை முதல்-அமைச்சர்.
விடியா ஆட்சி நடத்தும் Failure Model ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்ட கடிதத்தில், மத்தியில் சிறப்பான ஆட்சி நடத்தும் பா.ஜ.க-விடம் அதிமுக அடிமையாக உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார். இதே பா.ஜ.க-விற்கு வெள்ளைக் குடை பிடித்து குழைந்து பேசி உங்கள் குடும்பத்தையும், கொள்ளை அடித்த சொத்துக்களையும் காப்பாற்ற நீங்கள் மண்டியிட்டதை தமிழக மக்கள் மட்டுமல்ல, உங்கள் கழகத் தொண்டர்களே வெறுப்புடன் பார்த்ததை மறந்துவிட்டீர்களா ஸ்டாலின்?
அஇஅதிமுக ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களைத் தொடர முடியாமல், ஆடத் தெரியாதவர்க்கு தெருக்கோணல் என்பது போல, ஆளத் தெரியாத Failure Model ஸ்டாலினுக்கு ஆட்சி முழுவதுமே கோணலாக உள்ளது. 7-ஆவது முறையாக அல்ல, இன்னமும்
70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுக-விற்கு தமிழகத்தில் இடமே இல்லை. ஆகவே, வீட்டிற்குள் உட்கார்ந்து வீரவசனம் மட்டும் பேசினால் போதாது. எங்களைப் போல வீதியில் இறங்கி மக்களைச் சந்தித்துப் பாருங்கள். அப்போதாவது உங்கள் ஆட்சியின் அவல நிலை உங்களுக்குப் புரிகிறதா என்று பார்ப்போம்.
இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என செய்ய முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, இப்போது திணறி தடுமாறுகின்றனர். ஃபோட்டோ ஷூட் விளம்பர மயக்கத்தின் மூலம் மக்களை ஏமாற்றலாம் என மனக் கணக்கு போடுகின்றனர்.
ஆட்சிக்கு வந்து 50 மாதங்களாக 'தனது குடும்ப நலனைப் பேணி காத்துவிட்டு', அம்மா அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கு, தனது பெயரையே சூட்டி புது திட்டங்கள் போல் அறிமுகப்படுத்துவதும்; முறையாக நிதி மேலாண்மை மேற்கொள்ளத் தெரியாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதுடன், அவர்களது கட்சிக்கான தேர்தல் விளம்பரச் செலவுகளைச் செய்து, தமிழகத்தை கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் இந்த 'Failure Model ஸ்டாலின் அரசின்' சாதனை.
தூத்துக்குடியில், வர்த்தக சங்கங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், மாணவர்களிடையே அதிக அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த அரசு அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது மிக மிக வேதனையான ஒன்று. நீங்கள் ஆட்சிக்கு வருவீர்கள். இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய ஒரே ஒரு முக்கிய கடமை இளைய சமுதாயத்தினரை அழிக்கும் போதைப் பொருள் புழக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று, என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுபோல, இந்த அலங்கோல ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் விரக்தியும் அதிருப்தியும் மட்டுமல்ல, கோபத்துடனும் இருக்கின்றனர். இந்த மோசமான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்பது மட்டும் எனக்கு தெளிவாகத் தெரிகிறது. தமிழக மக்கள் இழந்த அமைதி, வளத்தை மீட்டுத் தருவது தான் எனது முதல் வாக்குறுதியாக, தமிழக மக்களுக்கு அளித்துள்ளேன். கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட:-
தாலிக்குத் தங்கம்.
மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம்.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.
படித்த பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம்
என, இந்த அரசு காழ்ப்புணர்ச்சியுடன் முடக்கியுள்ள மக்கள் நலத் திட்டங்கள், 2026-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நான் அளித்துள்ளேன்.
மேலும்,
தீபாவளிக்கு சேலை.
தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை.
சத்துணவுத் திட்டத்தில் கடலை மிட்டாய்.
4000 அம்மா மினி கிளினிக்குகள்.
காவிரி - குண்டாறு திட்டம், தாமிரபரணி – வைப்பாறு திட்டம்.
பனை ஏறும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் கத்தி, பதனி இறக்கும் குடுவை போன்ற பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். அவர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில்கொண்டு காப்பீட்டுத் திட்டத்திற்குள் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கான பிரீமியத் தொகையை அரசே செலுத்தும்.
மழைக் காலங்களில் பணியில்லாமல் இருக்கும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிகப்படுத்தி வழங்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளேன். 2026-ல் கழக ஆட்சி அமைந்தவுடன் இவையெல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
தன் ஆட்சியின் குறைகளை சரி செய்யாமல், விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் ஆட்சி, விரைவில் அகற்றப்படும். மக்கள் அகற்றுவார்கள்.
நாமும், நமது கழகத்தொண்டர்களும் மக்களுடன் உறுதியாக நின்று, வீடு வீடாகச் சென்று அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுமே மக்களுடன்தான் நிற்கும் என்பதை மக்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்துவது கழகத் தொண்டர்களின் பொறுப்பு.
2026-ம் ஆண்டு தமிழகத்தில் நமது ஆட்சி அமைந்தவுடன், 'Failure Model ஸ்டாலின் அரசால்' இந்த மக்கள் அடைந்த இன்னல்களை தீர்ப்பதுதான் நமது முக்கியமான பணி.
மக்களின் தேவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து செய்யும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி அமையும். தமிழக மக்கள் ஏற்றம் பெறுவர், அவர்கள் வாழ்வு உயரும். அதுவரை நான் ஓயப்போவதில்லை. எனது எழுச்சிப் பயணம் தொடரும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
- ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.
தேமுதிகவும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 4ல் ஆவடி, ஆகஸ்ட் 5ல் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 6ல் வேலூர், ஆகஸ்ட் 7ல் திருப்பத்தூர், ஆகஸ்ட் 8ல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 9ல் தருமபுரி, ஆகஸ்ட் 11ல் சேலம், ஆகஸ்ட் 13ல் கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட் 14ல் நாமக்கல், ஆகஸ்ட் 16ல் கரூர், ஆகஸ்ட் 17ல் பெரம்பலூர், ஆகஸ்ட் 18ல் அரியலூர், ஆகஸ்ட் 19ல் மயிலாடுதுறை, ஆகஸ்ட் 20ல் கடலூர் மற்றும் ஆகஸ்ட் 22ல் விழுப்புரம் பகுதிகளில் பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.
ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.
அதன்படி, தேமுதிக சார்பில் 'இல்லம் தேடி.. உள்ளம் நாடி..' என்ற பெயரில் பிரசார சுற்றுப் பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் விஜய பிரபாகரனும் பிரசாரப் பயணத்தில் பங்கேற்றுள்ளார்.
- போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் என தகவல் வெளியானது.
- இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டர்களில், பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க, பெண்கள் 'நள்ளிரவு விருந்துகளில் பங்கேற்கக்கூடாது, இருள் சூழ்ந்த மற்றும் தனியான இடங்களுக்கு நண்பருடன் செல்லக்கூடாது, வீட்டிலேயே இருக்கவும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் என தகவல் வெளியானது.
ஆனால், தங்கள் அனுமதியின்றி சுவரொட்டிகளை தன்னார்வ அமைப்பினர் ஒட்டியுள்ளதாக காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளது.
அகமதாபாத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
பழனி:
பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (4-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கரைப்பட்டி, கீரனூர், கொழுமம்கொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- திரைப்பிரபலங்கள் பலர் மதன் பாப் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
- மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சினிமா குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு, திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இன்று பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் மதன் பாப் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
- அலுவலகத்தில் பல அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.
- விரைவில் புதிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
சென்னை:
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி மோசடி புகார் தொடர்பாக அதன் தலைமையகம் மற்றும் எழும்பூரில் உள்ள நிர்வாக இயக்குனர் விசாகனின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர்.
நிர்வாக இயக்குனர் விசாகன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அலுவலகத்தில் பல அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.
இந்த சோதனைக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் முறையிட்ட பிறகு மேற்கொண்டு விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் டாஸ்மாக் அதிகாரிகள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகினார்கள்.
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வேறு துறைக்கு இடமாற்றம் கேட்டுள்ளதாகவும் அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனவே விரைவில் புதிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.






