என் மலர்tooltip icon

    இந்தியா

    • உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன.
    • புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது. தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

    இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்


    உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார்.
    • பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

    மதுரை:

    மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை எனக்கு பள்ளி சீருடை அளவெடுக்க யாரும் வந்ததில்லை.

    சம்பவத்தன்று பள்ளியில் சீருடை அளவெடுக்க ஒரு ஆண் உள்பட 2 பேர் வந்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் ஆண் டெய்லர் உள்பட 2 பேர் என்னிடம் அத்துமீறி அளவெடுத்தனர். அப்போது உடல் பாகங்களை தொட்டனர். எனவே அவர்கள் மீதும், உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஒன்றிய பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.
    • இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

    தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    இதையடுத்து தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எதைச்செய்தாலும் குறிப்பிட்ட பிரிவினரை வஞ்சிக்கும் விதமாகவே செயல்படுகிறது.

    * ஒன்றிய பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.

    * இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

    * பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது.

    * அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கிறது.

    * சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, வக்பு நோக்கத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை மிகப் பெரிய பேரியியக்கமாக உருவாக்குவதற்கு உழைத்தவர்.
    • ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்தநிலையில் பாளையங்கோட்டையை அடுத்துள்ள திருத்து கிராமத்தில் அவரது உடல் அடக்கம் இன்று நடை பெறுகிறது.

    இதனையொட்டி அவரது இல்லத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர் கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அ.தி.மு.க.வை மிகப் பெரிய பேரியியக்கமாக உருவாக்குவதற்கு இதய பூர்வமாக உழைத்தவர். அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

    எந்த சூழலிலும் உதவி என்று யார் தன்னை நாடி வந்தாலும் உதவியவர். அனைத்து தரப்பினருக்காகவும் உழைத்தவர். பொதுச்சேவையை நிறைவாக செய்தவர். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1982-ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அவர் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக அமைந்தது. அவருடைய ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியில் திளைக்கட்டும்.

    பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமும் அதுதான். அதற்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.
    • இஸ்லாமியர்களின் மத உரிமையில் அரசு தலையிடுகிறது.

    தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    இதையடுத்து தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம்.

    * வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.

    * வக்பு வாரிய சொத்துக்களை அரசு நிர்வகிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது.

    * இஸ்லாமியர்களின் மத உரிமையில் அரசு தலையிடுகிறது.

    * சட்டத்திருத்தம் நிறைவேறினால் அரசின் தலையீடு அதிக அளவில் இருக்கும்.

    * வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு இந்திய நாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமாக, ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களை ஏமாற்றுவார்கள்.
    • தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது.

    சென்னை :

    தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக பதிலளித்தார். அதில், "இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது. இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?" என தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:-

    "திரு. மு.க. ஸ்டாலின், நீங்கள் நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாவலர் என்று வேடமிட்டு ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர். வழக்கமாக, ஏமாற்றுபவர்கள் பணக்காரர்களைத் தான் ஏமாற்றுவார்கள். ஆனால் தி.மு.க. எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை; அவர்கள் பணக்காரர்களையும் ஏழைகளையும் சேர்த்தே ஏமாற்றுகிறார்கள்.

    தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது. ஆனால் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்த கொள்கையை எதிர்க்கிறது என்பதை இப்போது மொத்த நாடும் அறிந்திருக்கிறது. அவர்கள் உங்களை ஒரு நயவஞ்சகர் என்று அழைக்கிறார்கள், மு.க.ஸ்டாலின்.

    தமிழக முதல்வர் தனது கட்சிக்காரர்கள் அங்கும் இங்கும் திட்டமிட்டு நடத்திய நாடகம் முழு தமிழகத்தின் குரலையும் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறார். மக்களின் கவனத்தை முக்கியமற்ற விஷயங்களில் திசைதிருப்ப நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அம்பலமாகிவிட்டன என்பதை நீங்கள் உணரவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது.

    உங்கள் அறியாமையின் பேரின்ப உலகில் வாழ்க, மு.க. ஸ்டாலின். நாங்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்," என்று கூறியுள்ளார்.



    • கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர்.
    • கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி செல்வன் (வயது 40). இவர் பெருமாள்புரம் ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.

    இவர் கடந்த 24-ந்தேதி கிரிப்டோ கரன்சி பண பரிவர்த்தனையில் ஏமாற்றப்பட்டதாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

    அதில் தனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது ரியாஸ் (36) என்பவர் மூலம் அறிமுகமான சங்கரன் கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த அய்யாதுரை (37), மதுரையை சேர்ந்த இசக்கிமுத்து (28) ஆகியோர் தங்களுக்கு அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி தேவைப்படுவதாக கூறி ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியதாக கூறியிருந்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினார். அதில் ரூ.75 லட்சம் மதிப்பில் சுமார் 82 ஆயிரத்து 691 அமெரிக்க டாலர் கிரிப்டோகரன்சியை முகமது ரியாஸின் மின்னணு பணப்பைக்கு (எலக்ட்ரானிக் வேலட்) மாற்றம் செய்து அதற்கான பணம் ரூ.75 லட்சத்தினை ஆண்டனியிடம் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவுபடி தனிப்படை திண்டுக்கல், பழனி மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை மற்றும் இசக்கி முத்து ஆகியோர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

    புகார் குறித்து விசாரணையை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததுடன், முகமது ரியாஸ் மின்னணு பணப்பையில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 82691 அமெரிக்க டாலருக்கு இணையான கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் பாராட்டினார்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடியில் அடிக்கடி இத்தகைய மீட்புகள் நடக்கிறது. நெல்லையில் இதுதான் முதல் முறை. மோசடி செய்த முகமது ரியாஸ் தனது வாலட்டில் அதை வைத்திருந்ததால் எளிதாக பறிமுதல் செய்ய முடிந்தது.

    கிரிப்டோகரன்சி குற்ற வழக்குகளில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி மீட்கப்பட்டது இதுவே முதல் முறை.

    இந்த வகையான கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக லாப வாக்குறுதிகள் அளித்து முதலீடு செய்யுமாறு அழைப்பவர்களை நம்ப வேண்டாம். நம்பகமான நிறுவனம் மற்றும் சட்டப் பூர்வமான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றனர்.

    • பிளேடால் சீவிகொள்பவர்களுக்கு 10 ரூபாய் தருவதாக கூறினான்.
    • 40 மாணவ-மாணவிகள் கை விரல்களை சீவிக் கொண்டனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் வீடியோவில் வரும் விளையாட்டை பார்த்து அடிமையான ஒரு பள்ளி மாணவன் அந்த வீடியோ விளையாட்டு போன்று சக மாணவ-மாணவிகளிடம் சவால் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-வது படித்து வரும் மாணவன் எப்போதும் வீடியோ விளையாட்டுகளில் மூழ்கி இருந்தான். கை விரல்களை வெட்டி கொள்ளும் வீடியோ விளையாட்டு ஒன்றை பார்த்து அவன் அதேபோன்று பள்ளியிலும் விளையாட முடிவு செய்தான்.

    கடந்த வாரம் அவன் சக மாணவர்களிடம் அந்த வீடியோ கேம் விளையாட்டை காண்பித்து கைவிரல்களை பிளேடால் சீவிகொள்பவர்களுக்கு 10 ரூபாய் தருவதாக கூறினான். இந்த சவாலில் வெற்றி பெறவிட்டால் தனக்கு 5 ரூபாய் தந்துவிட வேண்டும் என்று அவன் பந்தயம் கட்டினான்.


    அவனது வீடியோ சவால் விளையாட்டை ஏற்று அவனுடன் படிக்கும் 40 மாணவ-மாணவிகள் பிளேடை எடுத்து கை விரல்களை சீவிக் கொண்டனர்.

    இதைக் கண்டு வகுப்பு ஆசிரியை கடும் அதிர்ச்சி அடைந்தார். இது வெளியில் தெரிந்தால் சர்ச்சையாகி விடும் என்று அவர் மாணவர்களை அதட்டி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மறைத்துவிட்டார்.

    என்றாலும், கடந்த 21-ந் தேதி சமூக வலைதளம் மூலம் இந்த தகவல் பரவியது. 40 மாணவ-மாணவிகள் கைவிரல்களை வெட்டி கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

    இதையடுத்து போலீசார் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வீடியோ கேமில் அடிமை யாகி இருந்த அந்த 7-ம் வகுப்பு மாணவனை அழைத்து கவுன்சிலிங் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

    • தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
    • திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ். அதே ஊரை சேர்ந்தவர் மிருதுளா. இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தனர். பள்ளியிலும் ஒன்றாக படித்து வந்தனர்.

    அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

    கடந்த 1961-ம் ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த காலம். காதல் திருமணம் என்பது அரிதானது.

    இதனால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

    இதனால் ஹர்ஷ் மற்றும் மிருதுளா பள்ளி பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி எளிமையான முறையில் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை என சபதம் ஏற்றனர்.

    இந்த நிலையில் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கினர்.

    அவர்களுக்கும் குழந்தை பிறந்து மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேர குழந்தைகள் என பெரிய குடும்பமாக வளர்ச்சி பெற்றது.

    பேரன், பேத்திகளுடன் வாழ்ந்தாலும் தங்களுடைய திருமணம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நடைபெறவில்லை. பிரமாண்ட முறையில் விருந்து வைக்கவில்லை என வயதான பிறகும் தம்பதி ஏக்கத்துடன் இருந்தனர்.

    64 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகன்கள் தங்களது பெற்றோர் எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

    இன்னிசை கச்சேரி ஆட்டம், பாட்டம் என திருமண மண்டபம் களை கட்டியது. தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேர குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண விழாவில் போட்டோ ஷூட் நடந்தது. மண மேடையில் மாலையும் கழுத்துமாக நின்ற தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

    மேலும் செல்பி எடுத்துக் கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    இந்த திருமண வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் இந்த தலைமுறைக்கு நீங்கள் முன்மாதிரி என பதிவு செய்து வருகின்றனர்.

    • தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 44). இவரது நண்பர் மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரை சேர்ந்த நரசிம்மன் (43). டிராக்டர் டிரைவர்களான இவர்கள் இருவரும் டிராக்டர் வண்டியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சங்ககிரி அடுத்த கலியனூர் பிரிவு என்ற இடத்தில் பின்னால் வந்த தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ் அவரது நண்பர் நரசிம்மன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.


    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் டிரைவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக் ( 23) என்பவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று பலியான மாதேஷ், நரசிம்மன் உடல்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் முழுவதும் சோகமாக காட்சி அளித்தது.

    விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பு எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
    • நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபாவளி பண்டிகை ஆர்டர் பரபரப்பாக மாறியிருந்தது. வழக்கம் போல் தீபாவளிக்கு பின் பனியன் ஆர்டர்கள் மந்தமாகியது.

    அதன்பின் தைப்பொங்கல் பண்டிகையில் இருந்து மாதாந்திர விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கின. நவம்பர் -டிசம்பர் மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாத இறுதியில் இருந்து தான், பின்னலாடை நிறுவனங்களின் இயக்கம் சீராகியுள்ளது.

    திருப்பூரில் தயாரிக்கப்படும் பருத்தி நூலிழை டி-சர்ட்டுகள், கோடைகாலத்துக்கு ஏற்றவை. அத்துடன், பெண்களுக்கான இரவு நேர ஆடைகளும் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. அதன்படி நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் விசாரணை சாதகமாக மாறியுள்ளது. வடமாநிலங்களில் போட்டியாக உற்பத்தி நிலையங்கள் துவங்கினாலும் கோடை கால பயன்பாட்டுக்கான பருத்தி பின்னலாடைகள் திருப்பூரில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் இருந்து ஆர்டர் வர தொடங்கி உள்ளது.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தீபாவளிக்கு பின் பொங்கல் பண்டிகை வரை திருப்பூர் ஆடை விற்பனை மிக மந்தமாக இருந்தது. அதன்பின் அன்றாட விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கியது. கோடை தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் இருந்து தற்போது தான் ஆர்டர் வந்துள்ளது. ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளை, அனுப்பி வைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.

    கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பின்னல் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். அதற்காக பின்னல் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை வேகமெடுத்து வருகிறது. ஜூன் மாதம் பள்ளி சீருடை ஆர்டர் துவங்கும் வரை கோடைகால ஆர்டர்கள் கை கொடுக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ரம்ஜான் பண்டிகைக்காக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வழக்கமான வர்த்தகர்கள் வந்து கொள்முதல் செய்து சென்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொண்டாடப்படும் யுகாதி பண்டிகைக்காக, அம்மாநில வியாபாரிகளும் மொத்த கொள்முதல் செய்து சென்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் திருப்பூரில் தயாரிக்கப்படும் 'பைன்' 'டி-சர்ட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
    • கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    ஈரோடு:

    சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    ×