search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நல்ல வைரத்தை அறிந்து கொள்வது எப்படி?
    X
    நல்ல வைரத்தை அறிந்து கொள்வது எப்படி?

    நல்ல வைரத்தை அறிந்து கொள்வது எப்படி?

    வைரத்தில் 12 குற்றங்கள் உள்ளன. சாமானியனுக்குப் புரியும்வகையில் சொன்னால் கோடு, கீறல், புள்ளி, பிளவு ஆகியவை வைரத்தில் இருக்கக்கூடாது.
    வைரத்தின் குற்றங்களையும் குணங்களையும் தரும் தமிழ் நூல்களும் பல. வைரத்தில் 12 குற்றங்கள் உள்ளன. சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை,கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல் ஆகிய பன்னிரெண்டும் குற்றங்கள். இவற்றில் மிக மோசமானவை நான்கு. காகபாதம்- நாகம் கொல்லும்.  விந்து- பைத்தியம் பிடிக்க வைக்கும்.

    மலம் பிரியாதது நிலந்தரு கிளை கெடும். மலம், உறவினர் அனைவரையும் அழித்து விடும். கீற்று வரலினை ஏற்றவர் மாய்வர். கீற்று உள்ள வைரத்தை அணிபவர் மரணம் அடைவர். வைரத்தின் குணங்கள் ஐந்து. பலகைஎட்டு, கோணம் ஆறு, தாரை, சுத்தி, தராசம் என்பன குணங்கள். குற்றங்களையும் குணங்களையும் நிபுணர்கள் மட்டுமே அறிவர்.

    சாமானியனுக்குப் புரியும்வகையில் சொன்னால் கோடு, கீறல், புள்ளி, பிளவு ஆகியவை வைரத்தில் இருக்கக்கூடாது. அதிக ஒளி, வண்ண ஜாலங்கள், நல்லபட்டைகளின் ஒளிப்பிரதிபலிப்பு ஆகியவை குணங்கள்.  வைரம் இல்லத்திற்கு வந்தவுடன் பல நல்ல விஷயங்கள் நடப்பது குணங்களின் உடனடிப்பயன்.

    நல்லபலன்கள் என்பவை அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும். அறிவு பிரகாசிக்கும். மனம் எப்போதும் அலைபாயாது அமைதியுடன் இருக்கும். எதிலும் அதிர்ஷ்டம் வரும். கலைகளில் ஈடுபாடும் வெற்றியும் உண்டாகும். செல்வம் சேரும். வளம் கூடும். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். எதிரிகள் தோற்று ஓடுவர். செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படும். நல்ல நீடித்த திருமண வாழ்வு கைகூடும்.

    கண்கள், தொண்டை, ஜனன உறுப்புகள், ஜீரண மண்டலம், சிறு நீரகக்கல் ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகள் நீங்கவும் வைரம் அணிதல் சிறந்தது. செய்வினை உள்ளிட்ட அதிமானுஷ்ய தீயசக்திகளால் பயம் ஏற்படாது. கிரேக்க நாட்டின் பேரறிஞரான ப்ளினி வைரம் விஷத்தை முறிக்க வல்லது என்றும் சித்த பிரமையை நீக்க வல்லது என்றும் குறிப்பிடுகிறார். ஒயினிலோ அல்லது நீரிலோ வைரத்தை அமிழ்த்தி விட்டு அதை அருந்தினால் மூட்டு வலி, மஞ்சள் காமாலை, இரத்தக் கசிவு உள்ளிட்டவை நீங்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கெட்ட கனவுகளைப் போக்கும், பிசாசுகளை அண்ட விடாது தீய கண் திருஷ்டியை வைரம் போக்கும் என்றும் அவர் விவரமாகக் குறிப்பிடுகிறார்.

    ரஸஜலநிதி வைரத்தை மூன்று வகையாகப்பிரிக்கிறது.

    1) ஆண் 2) பெண் 3) நியூட்ரல்
    ஆண் வைரம் என்பது ஆறு அல்லது எட்டு முகம் கொண்டது. வானவில் போன்ற வர்ண ஜாலங்களைக் காண்பிப்பது. கோடுகள், புள்ளிகள் அற்றது.

    பெண் வைரம் என்பது உருளை வடிவமானது. ஆறு கோணம் கொண்டது. ஆண், பெண் இரண்டுமற்ற நியூட்ரல், மூன்று கோணம் கொண்டது. மெலிதானது. நீளமானது.

    முதல் இரண்டு ரகங்களும் அணியக் கூடியவை. மூன்றாவது ரகம் விலக்கப்பட வேண்டிய ஒன்று.

    வைர வடிவங்களும் ஜொலிக்கும் பட்டைகளும்

    உயர் ரக வைரம் இலேசாக இருக்கும். அதன் ஒப்பற்ற குணங்களில் ஒன்று, அதை எக்ஸ்ரே ஒளியில் பார்த்தோமெனில் அது ஒளியைக் கக்கும். ஆகவே வைரத்தை ஏனைய கற்களிலிருந்து இனம் பிரிக்க எக்ஸ்ரே பயன்படுத்தப்படுகிறது.

    வைரத்தில் 58 வெட்டுகள் இருக்கும். பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஜொலிக்கும். 58 வெட்டுகளில் மேல் பகுதியில் 33ம் கீழ்ப் பகுதியில் 25ம் இருப்பது வழக்கம்.
    ஹாலந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரம் தான் உலகிலேயே மிகப்பெரிய பட்டை தீட்டும் இடம் ஆகும்.

    வைரத்தினாலும் எண்ணெயினாலும் பூசப்பட்ட சுழலும் உலோக பிளேடு ஒன்றைக் கொண்டு வைரத்தை அறுப்பார்கள். இப்படி அறுக்க இரண்டு நாட்கள் ஆகும்.
    வைரத்தின் முகங்களுக்குப் பல பெயர்கள் உண்டு. வடிவங்களும் கூட இதயம் பியர், ஓவல், எமரால்ட் என இப்படிப் பலபெயரிட்டு அழைக்கப்படுகின்றன.
    பேரமில்லாத வைர வியாபாரம்!

    வைர வியாபாரத்தின் உலகத் தலைமையகம் டீ பீர்ஸ் நிறுவனம் தான். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டீ பீர்ஸ் கன்ஸாலிடேடட் மைன்ஸ் என்ற நிறுவனம் வைரங்களை லண்டனிலுள்ள மத்திய விற்பனை நிலையம் சிஷிளி-க்கு அனுப்புகிறது.

    சூரிய ஒளி நன்கு விழுகின்ற வடக்கு திசையை நோக்கி அமர்ந்து இங்குள்ள 600 தொழிலாளிகள் - அனைவரும் வைர நிபுணர்கள் - 5000 விதமாக வைரத்தைத் தரம் பிரிக்கிறார்கள்.

    நகைகளுக்கு உகந்தது அல்ல எனப்படும் வைரங்கள் தொழிலகம் உள்ளிட்ட இதரப் பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிபுணர்கள் இயந்திரங்களைக் கையாளுவதில்லை. கைத்திறனையும் தங்கள் நிபுணத்துவத்தையும் கொண்டு தான் வைரத்தைப் பிரிக்கிறார்கள். வைரம் வாங்குவதில் பேரம் என்பதே கிடையாது. சொன்ன விலை சொன்னது தான்!

    ஆண்டுக்கு பத்து முறை மட்டுமே லண்டன், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் வைர விற்பனை நடைபெறும். சுமார் முன்னூறு வியாபாரிகள் உலகெங்குமிலிருந்து வந்து வைரங்களை வாங்குகிறார்கள். வாங்க வருவோர் தங்கள் தேவை என்ன என்பதை முதலில் சொல்ல வேண்டும். பின்னர் வைரங்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் தரப்படும். அதை வியாபாரிகள் பார்வையிடுவர். பின்னர் வாங்குவர். வாங்கும் போது மொத்த அட்டைப் பெட்டியையும் வாங்க வேண்டும். பிடிக்கவில்லையெனில் அப்படியே திருப்பிக் கொடுத்து விடலாம்.

    சுக்ரனுக்குரியது வைரம்!

    ஜோதிட சாஸ்திரத்தின்படி சுக்ரனுக்குரியது வைரம். சுக்ரன் லக்னாதிபதியாக இருந்தாலும் சுக்ரன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தாலும் வைரத்தை அணிவது அமோகப் பலனைத் தரும், ஆயுளையும் நீட்டிக்கும்.

    கருட புராணம் ரஸ ஜல நிதி ஆகிய நூல்களில் வரும் ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் அறிந்து கொள்வது அவசியம்.

    மணமாகி குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வைரத்தை அணிதல் கூடாது என்பதே அந்தக் குறிப்பு. குழந்தைப் பேற்றை அடைந்தவுடன் அணியலாம். நகைகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்களைத் தவிர இதர ரகங்கள் தொழிலகத்தில் பல்வேறு பயன்பாட்டுகளுக்காகவும், பல சாதனங்களின் தயாரிப்பிற்கும் உதவுகின்றன.

    ச.நாகராஜன்
    9148046774
    Next Story
    ×