search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்

    • 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
    • இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    சேலம்

    சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் முக்கியமான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு வரலாற்று சிற்பங்களையும், மூலவரின் உருவசிலையையும் இக்கோவிலின் பிரகாரத்தில் காணலாம். பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுடன் அருள்பாலிக்கிறார்.

    சுகவனேசுவரர் கோவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

    இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 1-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது.

    7-வது நாளான இன்று (7-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை இசைக்கப்பட்டது. அதன் பின் 6-ம் கால பரிவார சாமிகளுக்கு யாக பூஜை நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 7 மணிக்கு பிரதான யாக சாலைகளில் 6-ம் கால யாக பூஜை, 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு யாத்ராதானம், அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, அம்மன், விநாயகர், சுப்ரமணியர், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம், சுகவனேசுவரர் சாமி, சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா குப்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது கோவில் வெளியே நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் சிவனே போற்றி என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

    இவ்விழாவில் அரசு சார்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவி உமாராணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக கோவிலை சுற்றியுள்ள சாலைகள், கோவில் நந்தவனம், தொப்பக்குளம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்த இந்த கும்பாபிஷேக விழாவை காண சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

    கோவிலுக்குள் சென்று சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட இரும்பு கம்பிகளாலும், கம்புகளாலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகள் வழியாக பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய நின்றனர். இந்த வரிசை கோவில் வெளியே உள்ள சாலை நெடுகிலும் காணப்பட்டது.

    கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் நெரிசல் ஏற்படமால் இருக்க குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் நுழைய போலீசார் அனுமதித்தனர். போலீசாரின் கெடுபிடி அதிகமாகவே இருந்தது. இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் வெளியே உள்ள சாலையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

    கோவில் முன்பு மெயின்ரோட்டில் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கியபடி இருந்தனர். மேலும் திருட்டு மற்றும் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்க அங்கு உளவுபிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தனர். மேலும் சி.சி.டி.வி. காமிராக்கள், வாகனங்களில் பொருத்தி, எல்.இ.டி. திரை மூலம் போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

    மதியம் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை சமேத சுகவனேசுவரர் சாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையடுத்து இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    Next Story
    ×