search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகள் துரிதப்படுத்த வலியுறுத்தல்
    X

    சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகள் துரிதப்படுத்த வலியுறுத்தல்

    • வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது.

    சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாணிப்பாறை அடிவாரப்பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு உண்டான முன்னேற்பாடு பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் தாணிப்பாறை வண்டிப்பண்ணை பஸ்நிறுத்தத்திற்கு செல்லும் சாலையானது மிகவும் குறுகலாக உள்ளதால் 2 பஸ்கள் செல்ல முடியாத சூழ்நிலையும் உள்ளது. பஸ் நிறுத்த சரியான வசதி செய்து தரப்படவில்லை. ஆடி அமாவாசைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சாலை வசதி, பஸ் நிறுத்த வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதப்படுத்தி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×