search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பொதுவாக மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு படி பூஜை நடத்தப்படுவது இல்லை.

    இந்த நிலையில் நடப்பு சீசனில் நடைபெறும் பூஜை வழிபாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான மக்கள் தொடர்பு துறை அதிகாரி சுனில் கூறியதாவது:-

    நடப்பு சீசனில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அத்துடன், மாத பூஜை நாட்களில் ரத்து செய்யப்பட்ட படி பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும், வழிபாடுகளும் இந்த சீசனில் நடைபெறும்.

    சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் மருத்துவ வசதிக்காக, நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்பட பல்வேறு இடங்களில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் கேரள பக்தர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு மாநில சுகாதார துறை சார்பில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். மற்ற மாநில பக்தர்கள் சொந்த செலவில் கொரோனா சிகிச்சை பெற வசதி செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவில் மீனாட்சிபுரம் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத் தலைவர் சிவதாணுபிள்ளை (வயது 58) என்பவர் கூறியதாவது:-

    கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கேரள மாநில அரசு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேரை மட்டும் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் 16-ந் தேதி காலை 7 மணிக்கு சபரிமலை சன்னிதானத்துக்கு சென்று சேரும்படி நான் உள்பட 18 பேர் முன்பதிவு செய்துள்ளோம். நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வீதம் வருகிற ஜனவரி மாதம் 19-ந் தேதி வரை முன்பதிவு முடிந்து விட்டது.

    கேரள மாநில அரசு சபரிமலை தரிசனத்துக்கு மேலும் தளர்வுகள் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×