search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அக்னிதீர்த்த கடல் செல்லும் பாதையானது தகரம் வைத்து அடைக்கப்பட்ட காட்சியை படத்தில் காணலாம்.
    X
    அக்னிதீர்த்த கடல் செல்லும் பாதையானது தகரம் வைத்து அடைக்கப்பட்ட காட்சியை படத்தில் காணலாம்.

    இன்று மகாளய அமாவாசை: புனித நீராட தடையால் ராமேசுவரத்தில் கடற்கரை பாதை அடைப்பு

    இன்று மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது.
    ராமேசுவரம் :

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தை மற்றும் ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாளய அமாவாசையான இன்று (வியாழக்கிழமை) பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ராமேசுவரம் கோவிலில் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல், தேவிபட்டினம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர், அரியமான் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடல் மற்றும் கடற்கரையோரங்களில் புனித நீராடவும், திதி, தர்ப்பண பூஜை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம் வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடல் பகுதிக்கு செல்லாமல் இருக்க சன்னதி தெரு பகுதியில் தடுப்பு கம்புகள் மற்றும் தகரம் வைத்து பாதை முழுவதுமாக நேற்று அடைக்கப்பட்டது.

    மேலும் தமிழ்நாடு ஓட்டல் அருகே உள்ள சாலையில் இருந்து அக்னிதீர்த்த கடல் செல்லும் சாலையிலும் தடுப்புகள் வரிசையாக வைக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் நேற்று குவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×