search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விழாவில் மஞ்சள், பால், சந்தன அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் காட்சி அளித்தார்.
    X
    விழாவில் மஞ்சள், பால், சந்தன அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் காட்சி அளித்தார்.

    பவித்ர திருவிழா: 108 கலசங்கள் வைத்து கள்ளழகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    மதுரை அருகே பவித்ர திருவிழாவில் 108 கலசங்கள் வைத்து கள்ளழகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் அமலில் இருப்பதால் இந்த திருவிழாவை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆவணி மாத பவித்ர திருவிழா நேற்று மேளதாளம் முழங்க தொடங்கியது. இதில் உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஏற்கனவே தயார் நிலையில் தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது நூபுர கங்கை தீர்த்தம், அபூர்வ மூலிகைகள் இணைந்த 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன.

    இதில் தேங்காய், வாழைப்பழங்கள், பூமாலைகள், மாவிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து 136 வகையான அபூர்வ மூலிகைகள் வாசனை திரவியங்கள் புனித தீர்த்தத்துடன் சேர்த்து கள்ளழகர் பெருமாளுக்கு சந்தனம், பால் உள்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. அப்போது அங்கு பூஜையில் திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு நூல் மாலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் தீபாராதனைகளும், திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெற்றது. இதைதொடர்ந்து, பூஜையில் வைக்கப்பட்டிருந்த பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுக்கும் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. இந்த விழா வருகிற 2-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்திருந்தனர். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் அமலில் இருப்பதால் இந்த திருவிழாவை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பட்டர்களும், கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×