search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நடந்த தீர்த்தவாரியை நம்பெருமாள் கண்டருளிய காட்சி.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நடந்த தீர்த்தவாரியை நம்பெருமாள் கண்டருளிய காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்று (30-ந்தேதி) வரை நடைபெற்றது.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 28-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.30 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அர்ச்சக பட்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 
    Next Story
    ×