search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாராயணசாமி கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    நாராயணசாமி கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் ஆனி திருவிழா தேரோட்டம்

    உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நடந்தது. கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதானம், அய்யா வாகன பவனி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 10-ம் நாள் திருவிழாவன்று மாலை அய்யா இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் பணிவிடை, உகப்படிப்பு நடந்தது. அதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது மழை கொட்டியது. அதிலும் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் தேர் முன் செல்ல செம்பவள பஞ்சவர்ண தேர், யானை முன் செல்ல சிங்காரி மேளம் முழங்க நாதஸ்வர கச்சேரியுடன் அய்யாவழி மக்கள் காவிக்கொடியுடன் கோஷங்கள் எழுப்பியவாறு வீதி உலா வந்தனர்.

    இந்த தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மேல உடையப்பன் குடியிருப்பு, கோவில் விளை சந்திப்பு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கோவில்விளை சந்திப்பில் அன்னதானம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கிராமிய நடனம், நள்ளிரவு 2 மணிக்கு திருக்கொடியிறக்கம், இனிப்பு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் தொழிலதிபர் முத்தழகன், ஈஸ்வர்சிங், சிவானந்தன், ஸ்ரீகாந்தி அன்பு, கந்தசுவாமி நாடார் சன்ஸ் உரிமையாளர் ராஜலிங்கம், தேர் கொடிமர ஸ்தபதி முத்துராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் என்.பிச்சைப்பழம் தலைமையில் துணை தலைவர் தங்க கணேசன், செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் கிருஷ்ணராஜா, பொருளாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், ஊர் மக்கள் இணைந்து செய்து இருந்தனர். 
    Next Story
    ×