search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    31 ஆண்டு கால ஏக்கம்.. வரலாறு படைக்குமா ரோகித் படை? முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
    X

    31 ஆண்டு கால ஏக்கம்.. வரலாறு படைக்குமா ரோகித் படை? முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.
    • இது 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ஆடும் முதல் போட்டி இதுவாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் அவர்கள் ஆடவில்லை. உலகக் கோப்பை தோல்வியை மறந்து டெஸ்ட் களத்தில் சாதிக்கும் முனைப்புடன் தங்களை ஆயத்தப்படுத்தியுள்ளனர்.

    இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான். 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை. 7 முறை தொடரை பறிகொடுத்திருக்கும் இந்திய அணி 2010-11-ம் ஆண்டில் மட்டும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அசாருதீன், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், டோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களால் முடியாத அந்த 31 ஆண்டு கால ஏக்கத்தை ரோகித் சர்மா படை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் ரோகித், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் என்று தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இங்குள்ள உயிரோட்டமான ஆடுகளத்தில் தாக்குப்பிடித்து ஆடுவது அவ்வளவு சுலபமல்ல. பந்தை நன்கு தீர்க்கமாக கணித்து ஆட வேண்டியது அவசியமாகும்.

    செஞ்சூரியன் ஆடுகளத்தில் பந்து அதிவேகத்துடன் வெவ்வேறு விதமாக எகிறி பாயும். அதுவும் திறந்த வெளி மைதானம் என்பதால் குளிர்ச்சியான காற்றின் தாக்கமும் உண்டு. எல்லாமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் பேட்ஸ்மேன்கள் எப்படி தங்களை நிலை நிறுத்தி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். முதல் இன்னிங்சில் 300-க்கு மேல் ரன் எடுத்தாலே நம்பிக்கை வந்து விடும்.

    அனுபவம் வாய்ந்த விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைத் தான் அணி பெரிதும் நம்பி இருக்கிறது. ஆப்-ஸ்டம்புக்கு மிகவும் வெளியே செல்லும் பந்துகளை தேவையில்லாமல் தொடுவதை தவிர்ப்பதில் கோலி எந்த அளவுக்கு பொறுமை காட்டுகிறார், அவசர கதியில் புல்ஷாட்டுகள் அடிப்பதை ரோகித் சர்மா எந்த அளவுக்கு குறைக்கிறார் என்பதில் தான் அவர்களின் பேட்டிங் ஆயுசும் அடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில் இவர்கள் கூடுதல் கவனமுடன் இருந்தாலே கணிசமாக ரன் சேர்த்து விடலாம். இந்திய மண்ணில் ரன் மழை பொழியும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு இந்த போட்டி அவர்களது உண்மையான திறமையை சோதித்து பார்க்கும் களமாக இருக்கும். விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனிக்க உள்ளார். எதிரணி ரபடா, இங்கிடி, யான்சென், கோட்ஜீ என்று 4 முனை சூறாவளி தாக்குதலை தொடுக்க காத்திருக்கிறது. அதற்கு ஏற்ப இந்திய பேட்ஸ்மேன்களும் வியூகம் தீட்டுகிறார்கள்.

    உலகக் கோப்பையில் 24 விக்கெட் வீழ்த்தி பிரமாதப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் விலகியது சற்று பாதிப்பு தான். இருப்பினும் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா வலுசேர்க்கிறார்கள். இது வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் என்பதால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அனேகமாக அஸ்வின் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    தென்ஆப்பிரிக்காவை பொறுத்தவரை சொந்த மண்ணில் எப்போதும் பலமிக்கவர்களாக விளங்குவார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். கேப்டன் பவுமா, மார்க்ரம், முன்னாள் கேப்டன் டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், டோனி டி ஜோர்ஜி ரன் வேட்டை நடத்தக்கூடியவர்கள். பந்து வீச்சில் ரபடா, இங்கிடி, யான்சென் மிரட்டுவார்கள்.

    இங்கு முதல் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதனால் எப்போது போட்டி தொடங்கினாலும் வேகப்பந்து வீச்சாளர்களின் கையே சற்று ஓங்கும் நிற்கும்.

    மொத்தத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முட்டுக்கட்டை போடுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இது 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது அஸ்வின், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

    தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன் அல்லது டேவிட் பெடிங்ஹாம், கைல் வெரைன், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ஜெரால்டு கோட்ஜீ, ககிசோ ரபடா, லுங்கி இங்கிடி.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×