தலிபான்கள் ஆட்சி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது - அமெரிக்கா சொல்கிறது
வாஷிங்டன்:
அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு குறித்து விவாதித்தனர். இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பாதுகாப்புத்துறை துணை மந்திரி காலின் எச்கால் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்திருப்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது.
அங்கு நிலையற்ற அரசு உருவாகி வருவது இந்தியாவை கவலை கொள்ள செய்துள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதில் முடிந்த வரை நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். அதேநேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதி மட்டுமல்லாமல், பசிபிக் கடல் பிராந்திய பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானை பற்றிய இந்திய கொள்கைகள் பெரும்பாலும் பாகிஸ்தானுடன் உள்ள மோதல் அடிப்படையிலேயே இருக்கின்றன. காஷ்மீர் பிரச்சினையும் இதில் மையமாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் தொடர்பான விஷயங்களில் இந்தியாவின் பார்வை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...பிரேசில் அதிபர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்: பாராளுமன்ற குழு ஒப்புதல்