செய்திகள்
கோப்புப்படம்

‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் - ஜப்பானில் இன்று நடைபெறுகிறது

Published On 2020-10-06 00:45 GMT   |   Update On 2020-10-06 00:45 GMT
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திக்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
டோக்கியோ:

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற கூட்டணியை கடந்த, 2017-ல் உருவாக்கின. இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், இந்தோ பசிபிக் பகுதியில் கடல் வழிகளில் யாரும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், இந்த கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திக்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரைஸ் பெய்ன் மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மொடேகி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறித்தும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் 4 நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் வெளியுறவு மந்திரிகள் விவாதிப்பார்கள் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டை எதிர் கொள்வது தொடர்பாக முக்கியக் கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்து 4 நாடுகளும் தீவிரமாக ஆலோசிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த கூட்டத்தில் சில குறிப்பிடத்தக்க சாதனைகள் இருக்கும் என நான்கு நாடுகளும் நம்புவதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News