செய்திகள்
பிளாஸ்மா சிகிச்சை முறை

கொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அமெரிக்க அரசு அனுமதி

Published On 2020-08-23 23:06 GMT   |   Update On 2020-08-23 23:06 GMT
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்து வருகிறது.

பிளாஸ்மா சிகிச்சை என்பது கடந்த 100 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. சார்ஸ், எபோலா போன்ற வைரஸ் நோய்கள் உலகில் பரவிய போது பல்வேறு நாடுகளும் பிளாஸ்மா சிகிச்சை முறையை கடைப்பிடித்துதான் வெற்றி பெற்றன. 

பிளாஸ்மா சிகிச்சை என்பது வைரஸ் நோய் தாக்கியவர்களிடம் இருந்து பெறப்படும் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்றாக குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிலிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். 
அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும். 

வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 800 மில்லி லிட்டர் பிளாஸ்மாவை சேகரிக்க முடியும். 

இந்த பிளாஸ்மா அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். 
இந்த நோய் எதிர்ப்பு பிளாஸ்மாவை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தினால் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடையலாம்.

இதற்கிடையில், பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருத்தப்படும் இந்த சிகிச்சை முறை இந்தியாவில் டெல்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது.

ஆனால் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடான அமெரிக்காவில் இந்த சிகிச்சை முறைக்கு உரிய அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. மிகவும் அபாயகட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே இந்த முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தெரிவித்தார். இந்த சிகிச்சை முறைக்கு அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து இன்று வெள்ளைமாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:-

சீன வைரசுக்கு எதிரான நமது போராட்டத்தில் இன்று நான் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இது பல உயிர்களை காப்பாற்றும். கொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அவசரகால அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்தவும், மருந்து தயாரிக்கவும்
அமைக்கப்பட்டுள்ள ஆப்பரேஷன் வார்ப் ஸ்பீட் மூலமாகவே இது சாத்தியமாகியுள்ளது. அனைவரும் இணைந்து வேலை செய்கின்றனர். அனுமதியை பொறுத்தவரை நாம் பல ஆண்டுகள் முன்னே உள்ளோம். கடந்த நிர்வாக வேகத்தை பெறுத்தவரை நாம் இப்போது இருக்கும் நிலை அடைய அவர்களுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். 

கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை நீங்கள் மிகவிரைவில் கேட்கப்போகிறீர்கள்.

என அவர் கூறினார்.   

Tags:    

Similar News