செய்திகள்
4 நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கலவை- வங்கதேச மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
கொரோனா நோயாளிகளை 4 நாட்களில் குணப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்திருப்பதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
டாக்கா:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முறை தொடங்கி உள்ளது. இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக சந்தைக்கு வரவில்லை.
இந்நிலையில், கொரோனாவை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்திருப்பதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின் தலைமையிலான குழு கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் மற்றும் டாக்ஸிசைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து, கொரோனா நோயாளிகளுக்கு அளித்து சோதித்துள்ளனர்.
60 பேரிடம் இந்த சோதனை நடந்துள்ளது. 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருந்து கொடுத்த 4 நாட்களில் குணமடைந்திருப்பதாகவும், 4வது நாளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் மருத்துவ குழு கூறி உள்ளது. இந்த மருந்து கலவையை பயன்படுத்தியதால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கையை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.