செய்திகள்
டைமண்ட் பிரின்சஸ் கப்பல்

ஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர சிகிச்சை

Published On 2020-02-27 04:04 GMT   |   Update On 2020-02-27 04:04 GMT
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களுக்கு ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுடெல்லி:

ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4-ம் தேதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 16 பேருக்கு (கப்பல் ஊழியர்கள்) கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, வைரஸ் பாதிக்கப்படாத இந்தியர்களை உடனடியாக சொந்தநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கும் படியும் ஜப்பான் அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்படாத 119 இந்தியர்களை அழைத்து செல்ல ஜப்பான் அரசு அனுமதி வழங்கியது. 



இதனைத் தொடர்ந்து அந்த கப்பலில் இருந்த 119 இந்தியர்கள், 5 வெளிநாட்டினர் என மொத்தம் 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். மீதமுள்ள மூன்று இந்தியர்களின் மருத்துவ கண்காணிப்பு காலம் நிறைவடையாததால் அவர்கள் தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்படவில்லை. டெல்லி அழைத்து வரப்பட்டவர்களில் 2 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அழைத்து வரப்பட்டுள்ளனர். 

டெல்லி அழைத்து வரப்பட்ட 124 பேரும் மானேசரில் உள்ள ராணுவ சிறப்பு மருத்துவ முகாமில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கண்காணிக்கப்படுவார்கள். அதன்பின்னர் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 16 பேரும் ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவ்வப்போது விசாரித்துவருகின்றனர்.
Tags:    

Similar News