செய்திகள்
மெக்சிகோவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி
மெக்சிகோவில் உள்ள ஸ்லாட் மிஷன் அரங்கத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது.
இந்த கடத்தல் சம்பவங்களின் போது பல குழுக்களுக்கு இடையே கடுமையான மோதல் சம்வங்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டின் மிக்லோகன் மாநிலம் மேக்டெலினா மாவட்டத்தில் உள்ள ஸ்லாட் மிஷின் அரங்கம் அமைந்துள்ள பகுதிக்குள் இன்று நுழைந்த மர்ம நபர் அங்கு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இளைஞர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடிவருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.