செய்திகள்
காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது- இந்தியாவுக்கு சீனா அட்வைஸ்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என சீனா அறிவுறுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சீனாவின் உதவியுடன் இந்த விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்ப முயற்சித்து படுதோல்வியடைந்தது. என்றாலும் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யெங் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் வந்துள்ளார். அவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியை சந்தித்து காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில், "காஷ்மீர் நிலவரம் மற்றும் அங்கு நடந்துவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சீனாவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதையடுத்து சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யெங் கூறுகையில், "காஷ்மீர் விவகாரத்தை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. காஷ்மீர் ஒரு பிரச்சனைக்குரிய நிலப்பரப்பு. மேலும், இது தொடர்பாக விவாதங்கள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிலுவையில் உள்ளது. ஆகையால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது" என தெரிவித்தார்.